குபேரன் தன் நிதியை இழந்து வாடியபோது என்னைப்பெற்ற தாயாரை வழிபட்டு மீண்டும் பெற்றான் என்கிறது புராணம். இங்கு தாயார் சகலசவுபாக்கியங்களையும் தரும் வைபவலட்சுமியாக உள்ளார். ஆதிசேஷனுக்கென சன்னதி உள்ளது தனி சிறப்பு. இந்த சன்னதியை புதன் கிழமைகளில் அர்ச்சனை செய்து நெய்விளக்கிட்டு பால் பாயாசம் படைத்தால் ராகு கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பதும் மாங்கல்ய பலன் உண்டாகும் என்பதும் நம்பிக்கை.
விஜயநகர காலத்தை சேர்ந்த ராஜகோபுரம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. பலிபீடம், கொடிமரம், கருட சன்னதி, மகா மண்டபம், உள் மண்டபம் தாண்டி சென்றால், பெருமாள் திருமகள், பூமகளுடன் நின்ற திருக்கோலத்தில் பஞ்சாயுதம் தாங்கி சுமார் 11 அடி உயரத்தில் அருளுவதைக் காணலாம். மூலவரின் வலப்புறம் தாயார் சன்னதி உள்ளது. சுற்றுப்பிரகாரத்தில் ஆண்டாள், ஆழ்வார்கள், அனுமன், ஏரி காத்த ராமர், ஆதிசேஷன் ஆகிய சன்னதிகள் உள்ளன.
சமுத்திரராஜன் மகாலட்சுமியை "என்னைப்பெற்ற தாயே' என அழைத்ததால் அதுவே இத்தலத்தின் தாயார் பெயராகி விட்டது. சமுத்திரராஜனின் வேண்டுகோளுக்கிணங்க பெருமாளும் தாயாரும் இத்தலத்தில் திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள். |