பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்று.விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்ட போது, அவர்களில் யார் தனது திருவடியையும், திருமுடியையும் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர் என தீர்ப்பளிப்பதாகச் சொன்னார் சிவன். விஷ்ணு திருவடியைக் காணச் சென்றார். அவரால் முடியவில்லை. தோல்வியை ஒப்புக் கொண்டார். பிரம்மாவோ, திருமுடியைக் கண்டுவிட்டதாக பொய் சொல்லி விட்டார்.
இதனால் சிவசாபம் பெற்று, பூலோகத்தில் கோயிலோ, வழிபாடுகளோ இல்லாமல் ஆனார். எனவே, சிவனை மகிழ்ச்சிப்படுத்தி சாப விமோசனம் பெற, யாகம் ஒன்றை நடத்தினார் பிரம்மன். கணவன், மனைவி இருவரும் இணைந்து நடத்தினால்தான் யாகம் பரிபூரணம் அடையும் என்பது நியதி. ஆனால், பிரம்மாவோ அவரது மனைவி சரஸ்வதிதேவியை அழைக்காமல் தனியே யாகம் செய்தார்.
இதனால் மனைவியின் அதிருப்தியையும் அடைந்தார். சரஸ்வதி சில அசுரர்களை அனுப்பி யாகத்தை நிறைவேறவிடாமல் செய்தாள். இதனால் கலவரமடைந்த பிரம்மா, சரஸ்வதியை சமாதானம் செய்யும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். விஷ்ணுவும் அவ்வாறே செய்து, அசுரர்களை அழித்து, சிதறிய ரத்தத்துடன் பவள நிறமேனியனாக காட்சி கொடுத்தார். இதனால் சுவாமிக்கு "பவளவண்ணர்' என்ற திருநாமம் ஏற்பட்டது. |