பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. இத்தலத்தில் அர்ஜுனனர் பிரதிஷ்டை செய்த பார்த்தசாரதி சிலை உள்ளது. இதற்கு தற்போது தங்கக்கவசம் சாற்றப்பட்டு வழிபாடு நடக்கிறது.இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் விமானம் வாமன விமானம் எனப்படுகிறது. இவரை வேதவியாசர், பிரம்மா ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர்.
ஒரு முறை பிரம்மனிடம் இருந்து வேதங்களை மது, கைடபன் என்ற அரக்கர்கள் அபகரித்து சென்றனர். வேதங்களை மீட்டுத்தரும்படி பிரம்மா பெருமாளை வேண்டினார். பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க பெருமாள் அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டுத்தந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் பிரம்மா இத்தலத்தில் பெருமாளை நோக்கி தவமிருந்ததாக கூறுவர்.
இங்கு அர்ஜுனன் தன் ஆயுதங்களை ஒளித்து வைத்ததாக கூறப்படும் வன்னி மரத்திலிரந்து குண்டு முத்து போல் உதிரும் மரக்காய்களை இத்தலத்தின் துவஜஸ்தம்பத்தின் முன்பு குவித்து வைத்து விற்கிறார்கள்.போரில் கர்ணனை யுத்த தர்மத்திற்கு மாறாக கொன்றதால், தன் மன நிம்மதிக்காகவும், போரில் பிற உயிர்களை கொன்ற பாவம் போக்கவும் அர்ஜுனன் இத்தலத்தில் தவம் செய்ததாகவும், இவனது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் பார்த்தசாரதியாகவே இவனுக்கு காட்சி கொடுத்ததாகவும் ஐதீகம். |