நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில், விசாரணை குழுவிடம் வழக்கிற்கு சம்பந்தமில்லாத ஆவணங்களை அளித்து நிலக்கரித்துறை அமைச்சகம், ஏமாற்றுவதாக சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது. கடந்த பாராளமன்ற கூட்டத்தொடரில், நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றிருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை துறை, அறிக்கை அளித்தது, இதனால், பாராளமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கின. இதனை அடுத்து வழக்கை விசாரிக்க சிபிஐ.,க்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான ஆடணங்கள் தொலைந்து விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிடம் முறையிட்ட சிபிஐ காணாமல் போன ஆவணங்களின் பட்டியலையும் அளித்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான சில ஆவணங்கள் தேடி கண்டுபிடிக்கப்பட்டதாக நிலக்கரித்துறை அமைச்சகம் சிபிஐ யிடம் ஒப்படைத்தது. நிலக்கரி அமைச்சகம் வழங்கிய 12 ஆவணங்களில் நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான எந்த விபங்களும் இல்லை என சிபிஐ தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.
நிலக்கரி ஒதுக்கீட்டிற்கு முன்னர் நிலக்கரித்துறையில் நடைபெற்ற பணிகள் குறித்த விபரமும் இல்லை என சிபிஐ தெரிவித்துள்ளது. சுரங்க ஒதுக்கீடு தொடர்பான 29 கோப்புக்களும் அது தொடர்பான ஆவணங்களும் காணாமல் போய் உள்ளது. காணாமல் போன ஆவணங்கள் பற்றிய விபரங்களை 2 வாரங்களுக்குள் நிலக்கரி அமைச்சகம் சமர்ப்பிக்க வேண்டும்; அவ்வாறு வழங்காவிட்டால் விசாரணைக் குழுவால் அமைச்சகம் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படும்; வழக்கு விசாரணைக்கு 225 ஆவணங்கள் தேவைப்படுகின்றன; ஆனால் இதுவரை 12 ஆவணங்கள் மட்டுமே சிபிஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது; இதிலும் குளறுபடி நடைபெற்றிருப்பது வறுத்தம் அளிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
|