கூடங்குளத்தில் நேற்று நடந்த கலவரத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட கூடுதலாக 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தியும், அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கியதை கண்டித்தும் அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழுவினர் 5 ஆயிரம் பேர், ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் தலைமையில் இடிந்தகரையில் இருந்து கூடங்குளம் அணுமின்நிலையம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு 500 மீட்டர் தொலைவில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அந்த இடத்திலேயே கடற்கரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மேற்கொண்டு செல்லாமல் இருப்பதற்காக அப்பகுதியில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் போலீஸ் தடியடியை கண்டித்து இடிந்தகரையில் நேற்று மாலை முதல் 48 மணிநேரம் உண்ணாவிரத போராட்டத்தை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மைபா ஜேசுராஜ் தலைமையில் பொதுமக்கள் தொடங்கினர். அவர்கள் இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் முற்றுகை போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. போராட்டக்காரர்கள் முற்றுகையில் ஈடுபடும் பகுதி 144 தடை உத்தரவு அமலில் உள்ள பகுதியில் இருப்பதால் கலைந்து செல்லுமாறு காலையில் இருந்தே போலீஸ் அதிகாரிகளும், கலெக்டரும் வேண்டுகோள் விடுத்தபடி இருந்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் கடற்கரையில் இருந்த கலைந்து செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றனர்.
|