கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 14-வது ஆண்டு நிறைவு விழா புதன்கிழமை தமிழறிஞர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.
கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையமும், குமரி மாவட்ட தமிழ் அமைப்புகளும் இணைந்து இவ் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை 1.1.2000 அன்று நிறுவப்பட்டது. இதன் 14-வது ஆண்டு நிறைவு விழா சிலை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதற்காக தனிப்படகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவுக்கு வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய தலைவர் தே.வேலப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.நாகராஜன், பொதுச்செயலர் எஸ்.பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார், திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன், விவேகானந்த கேந்திர தலைவர் எ.பாலகிருஷ்ணன், திருவள்ளுவர் நலவாழ்வு இயக்கத் தலைவர் தியாகி கோ.முத்துக்கருப்பன்,பொதுச்செயலர் கு.சிதம்பர நடராஜன், தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்றத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன்,முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.விஜயராகவன், முனைவர் கா.ஆபத்துகாத்த பிள்ளை, வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையச் செயலர்கள் தா.துரை நீலகண்டன், என்.பகவதி பெருமாள், த.செந்தாமரைச்செல்வி, ப.தர்மராஜன், தா.மது,தமிழறிஞர்கள் காவடியூர் சிவநாராயண பெருமாள், தொல்காப்பியன், பேராசிரியர். சிவமுருகன்,ஏ.எம்.டி.செல்லத்துரை, மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராஜகோபால் உள்ளிட்டோர் பங்கேற்று சிலை பாதத்தில் மலர்தூவி மரியாதை செய்தனர்.
இணைப்பு பாலம்: விழாவில் பங்கேற்ற தமிழறிஞர்கள் இயற்கைச் சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையின் இடையே இணைப்பு பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
|