தமிழ்க் கணினி அறிவை வளர்க்கும் நோக்கிலும், வேகமாக மாறிவரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழின் பயன்பாட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தின் சார்பாக 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.
|
இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்து 250 பேரும், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர் என உலகம் முழுவதும் இருந்து 200 பேரும் இந்த மாபெரும் விழாவில் கலந்து கொள்கின்றனர். மே மாதம் 30, 31 மற்றும் ஜூன் 1 ஆகிய நாட்களில் இம்மாநாடு நடைபெறுகிறது.
கான வினோதன் குழுவினரின் இன்னிசையுடனும் செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாரத நாட்டியத்துடனும் மாநாடு துவங்கியது. ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மணியம் தொடக்க உரை ஆற்றினார். சிம் பல்கலைக் கழக பேராசிரியர் ட்சுஇ காய் சாங் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் இணையத் தமிழுக்கு சிறப்பாகப் பங்காற்றிய அனந்த கிருஷ்ணன், பொன்னவைக்கோ, கல்யாண சுந்தரம், வாசு ரங்கநாதன், லீசா அமைப்பின் ராஜ்குமார் சந்திரா, மணியம் முதலியோருக்கு விருதுகள் வழங்கப் பட்டன.
சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் கண்காட்சி அரங்கைத் திறந்து வைத்துப் பேசும் போது, உலகளாவிய நிலையில் வளர்ந்து வரும் தமிழ் மொழிக்கு சிங்கப்பூர் அரசு சிறப்பான இடம் அளித்து வருகிறது. சிங்கப்பூர் அரசின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி விளங்குகிறது. தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழைக் கட்டிக் காப்பதும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் தலையாய கடமை.
இன்று தகவல்களுக்குப் பஞ்சமில்லை. இவற்றைப் பெற்று, உணர்ந்து கவனம் செலுத்தி இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல இணையம் பயன்படுகிறது இன்றைய இளைஞர்கள் இணையத்தை வெகுவாக பயன்படுத்துகின்றனர்.
எதிர்நோக்கும் சவால்களை இளைஞர்கள் சமாளிக்க, உயரிய தமிழ் பண்பாட்டினை, தமிழ் ஆர்வத்தினை வளர்த்திட இம்மாநாடு உதவும். அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் விதத்தில் இக்கண்காட்சியின் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய நவீன சமூக ஊடகங்களான முகநூல், டிவிட்டர் போன்றவற்றிலும் மொழி பற்றியும், தமிழ் மொழி பற்றிய ஈடுபாட்டையும் ஏற்படுத்த இம்மாநாடு உதவ வேண்டும். காலத்திற்கேற்ப கருப் பொருளை இம்மாநாடு தேர்ந்தெடுக்கிறது. இம்மாநாட்டில் சிம் பல்கலை கழகமும் இணைந்திருப்பது பாராட்டுக்குரியது என சிங்கப்பூர் அமைச்சர் உரையாற்றினார்.
|