கடந்த 160 ஆண்டுகளாக மக்களின் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிய தந்தி சேவைக்கு பொது மக்கள் நேற்று பிரியா விடை கொடுத்தனர். இந்தியாவில் தந்தி சேவை முதன்முதலில் பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா என்ற நிறுவனத்தால் 1850–ம் ஆண்டு கொல்கத்தாவிற்கும் டையமண்ட் ஹார்பருக்கும் இடையே தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் அலுவலக பயன்பாட்டிற்க்காக இருந்த தந்தி சேவை 1854–ம் ஆண்டுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. துக்க செய்திகளை மட்டுமே பரிமாறிக் கொள்ள பயன்படுத்தப்பட்ட தந்தி சேவை, நாளைடைவில் சுபகாரியங்கள், திருமண வாழ்த்து, அலுவலக விடுப்பு உள்ளிட்ட தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. 1990–ம் ஆண்டுக்கு பிறகு செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் காலடி வைத்தபிறகு செல்போன் மற்றும் இணையத்தின் பயன்பாட்டால் தந்தி சேவை முற்றிலுமாக குறைந்தது. தந்தி சேவையின் மூலம் தற்போது, ஆண்டுக்கு ரூ.75 லட்சம் மட்டுமே வருவாய் கிடைக்கிறது. ஆனால் ஊழியர்கள் சம்பளம் மற்றும் பராமரிப்பு பணிக்காக ரூ.100 கோடி வரை செலவு செய்ய வேண்டி உள்ளது.இதனால் நஷ்டத்தில் இயங்கும் தந்தி சேவையை நிறுத்திக் கொள்ள பி.எஸ்.என்.எல். நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி 160 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்த தந்தி சேவை நேற்று இரவுடன் நிறுத்தப்பட்டது. இறுதி நாளில் 1500 பேர் தங்களது உறவினர்களுக்கு தந்தி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
|