|
|||||
இனி அரசியல்வாதிகள் தங்கள் விருப்பம் போல் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை மாற்ற முடியாது !! |
|||||
அரசியல்வாதிகள் தங்களின் விருப்பம் போல, உயரிய பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ். அதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்வது, பணியிடை நீக்கம் செய்வது போன்ற நிர்வாக சீர்கேட்டை சரி செய்ய கோரி ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 87 பேர், உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 'ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும். அவர்களின் பணியிட மாற்றம், ஒழுங்கு செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட காலம், குறிப்பிட்ட இடத்தில் அவர்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான, பணி வரன்முறைகளை, இன்னும் மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் அளித்திருந்த காலக்கெடு, நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை நேற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ் அதிகாரிகளின் பணி வரன்முறை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள், அவர்கள் பணியாற்றும் பணியிடங்களில், குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும்.
அவர்களை இடமாற்றம் செய்வது, தண்டனை வழங்குவது, பணிஉயர்வு வழங்குவது போன்றவற்றை, அதற்கென அமைக்கப்பட வேண்டிய, சிவில் சர்வீசஸ் போர்டு தான் மேற்கொள்ள வேண்டும்.
சிவில் சர்வீசஸ் போர்டுக்கு, மூத்த, சீனியர், கூடுதல் தலைமை செயலர் அல்லது தலைவர், தலைமை வகிக்க வேண்டும். வருவாய் வாரியம் அல்லது நிதித்துறை கமிஷனர் அல்லது அதற்கு சமமான அந்தஸ்து கொண்ட அதிகாரி, அதன் உறுப்பினராக இருக்க வேண்டும்.இந்த குழுவின், உறுப்பினர் செயலராக, முதன்மை செயலர் அல்லது மாநில அரசின், பணியாளர் நலத்துறையின் செயலர் இருக்க வேண்டும்.
ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பணியிட மாற்றம், பதவி உயர்வு, கூடுதல் பொறுப்பு போன்றவற்றை, இந்த குழுவில், கூடுதலாக நியமிக்கப்படும், உள்துறையின் செயலர் அல்லது முதன்மை செயலர் மற்றும் டி.ஜி.பி., மேற்கொள்வார்.அது போல், ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் விவகாரத்தையும், சிவில் சர்வீசஸ் போர்டில், இது போல், கூடுதலாக நியமிக்கப்படும், இரு அதிகாரிகள் மேற்கொள்வர்.
எந்த பணியிடத்திலும், குறைந்தபட்சம், இந்த அதிகாரிகள், இரண்டாண்டுகள் பணியாற்ற வேண்டும். பதவி உயர்வு, பணி ஓய்வு, பயிற்சி போன்ற நியாயமான காரணங்கள், போர்டால் ஏற்றுக் கொள்ளப்படும். அதிகாரிகள் மீதான, எந்த நடவடிக்கைக்கும், சிவில் சர்வீசஸ் போர்டின் ஒப்புதல் அவசியம். எனினும், தகுந்த ஆணையம், இந்த போர்டின் பரிந்துரையை நிராகரிக்கலாம்.
இரண்டாண்டுகளுக்குள் அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டி வந்தால், அவரின் விருப்பம் அவசியம். இந்த போர்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, அறிக்கை அளிக்க வேண்டும். அதில், தன் செயல்பாடுகளை வெளிப்படையாக பட்டியலிட வேண்டும். இவ்வாறு, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 30 Jan 2014 1 Comments | |||||
Tags: IAS IPS IFS 2 Years Fixed Posting IAS 2 Years ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|