மழையின் கோர தாண்டவத்தில் சிக்கியுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் மீட்பு பணியினர் உட்பட 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மழை மற்றும் நிலச்சரிவுகளின் பாதிப்புகளால் உத்தரகண்ட் மாநிலத்தில் இதுவரை சுமார் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். ஆங்காங்கே சிக்கியுள்ள யாத்ரிகர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை சார்பில் 40 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நேற்று எதிர்பாராத விதமாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நொறுங்கி விழுந்தது. இதில் ராணுவம், இந்திய-திபெத் எல்லை பாதுகாப்புப் படை, தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், ஊழியர்கள் என மொத்தம் 19 பேர் பயணித்தனர். அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து நடைபெற்ற இடத்தில் 8 பேரின் சடலங்களே மீட்கப்பட்டன. எஞ்சியோர்களின் உடல்களை தீவிரமாக தேடிவருகின்றனர். விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்கப்படும் என உத்தரகண்ட் மாநில முதல்வர் விஜய் பகுகுணா அறிவித்துள்ளார்.
|