திருப்பதி ஏழுமலையான் திருகோவிலில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடேஸ்வர சுவாமிக்கு 24 கோடி செலவில் 32 அடி உயரமுள்ள தங்க ரதம் தயாராகிவருகிறது. தங்க ரத வேலைபாடுகள் குறித்து, தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ கூறியதாவது, திருப்பதி கோயிலுக்காக 32 அடி உயரத்தில் தங்க ரதம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த மாதம் 27ம் தேதிக்குள் பணிகள் அனைத்தும் நிறைவு பெறும். 30ம் தேதி காலை சோதனை ஓட்டம் நடத்தப்படும். வரும் அக்டோபர் 10ம் தேதி நடைபெறும் பிரம்மோற்சவமும், மாலை 5 மணிக்கு தங்க ரத ஊர்வலமும் நடக்கிறது. தமிழகத்திலுள்ள மதுரை, சுவாமி மலை, கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தங்க ரதம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே 32 அடியில் தங்க ரதம் செய்யப்படுவது, திருப்பதி கோயிலில் மட்டும்தான். இதற்கான தங்கம் பக்தர்களிடம் நன்கொடையாக பெறாமல், தேவஸ்தான கருவூலத்திலிருந்து பெறப்பட்டு செய்யப்பட்டுள்ளது. 74 கிலோ தங்கம், 2,900 கிலோ காப்பர், 25 டன் மரப்பலகைகளுடன் 24 கோடியில் தங்க ரதம் தயாராகி வருவதாக சீனிவாசராஜூ தெரிவித்துள்ளார்.
|