தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவிடைவாய் தலத்திற்காக சம்பந்தர் பாடல்கள் 1917ல் கண்டுபிடிக்கப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் கடைசியாக சேர்க்கப்பட்டு 275வது தலமானது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர்மீது வைகாசி, மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுவது சிறப்பு. கிழக்கு பார்த்த கோயில். கோயில் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், லிங்கோத்பவர், சூரியன், சந்திரன் இருவரும் வாகனத்துடன் உள்ளனர்.
இத்தல சாஸ்தா குழந்தை வடிவில் பாலசாஸ்தாவாக அருளுகிறார். இத்தல தட்சிணாமூர்த்தி சிம்மாசன மண்டபத்தில் வீற்றிருக்கிறார். கோயிலின் மேற்கே காவிரியின் கிளைநதியான வெண்ணாறு, தெற்கே வெள்ளையாறு, வடக்கே பாண்டையாறு, கிழக்கே கடல் சூழ இத்தலம் அமைந்துள்ளது. திருஞான சம்பந்தர் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் திருவிடைவாசல் என அழைக்கப்பட்டிருக்கிறது. எனவே தான் சம்பந்தர் தனது பாடலில் "விடைவாயே' என குறிப்பிட்டு பாடியிருக்கிறார். |