முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அலைக்கற்றை ஊழல் வழக்கில் தன்னையும் ஒரு சாட்சியாக அழைத்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். இதே போல குழுவின் உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தாவும், குழுவின் தலைவர் பி.சி.சாக்கோவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்துக் கேட்ட கேரளச் செய்தியாளர்களுக்கு பி.சி.சாக்கோ கூறிய பதில்:
இந்தப் பிரச்சினையில் ஏற்கனவே அனைத்து முக்கியமான சாட்சிகளையும் அழைத்து, வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. எனவே இப்போது, ராசாவைச் சாட்சியாக அழைப்பது தவிர்க்க முடியாதது அல்ல. தன்னையும் சாட்சியாக அழைக்குமாறு அவர் மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
இதேபோல் வேறு சிலரும் சாட்சியாக விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரையும் அழைப்பதென்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது. எனினும், இந்தப் பிரச்சினையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் மற்ற உறுப்பினர்களோடு கலந்தாலோசித்துத்தான் இறுதி முடிவு எடுக்கப்படும்.
ராசாவின் பெயர் சாட்சிகளின் பெயர்ப்பட்டியலில் இருந்ததாக தாஸ்குப்தா கூறுவது தவறானது. ஏனெனில் சாட்சிகளின் இறுதிப் பெயர்ப்பட்டியல் இன்னும் தயாரிக்கப்படவில்லை. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுமே தங்களது சாட்சிப் பெயர்ப் பட்டியல்களை அளித்துள்ளனர். எனினும், இறுதியான சாட்சிப் பெயர்ப் பட்டியலை ஜே.பி.சி. தயாரிக்கவில்லை.
இவ்வாறு பி.சி.சாக்கோ கூறியுள்ளார்.
|