திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள் நாதமுனிகள் அருளிச் செய்தது
குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான் நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக| ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத் த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி||
பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை இருவிகற்ப நேரிசை வெண்பா
மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால் சொன்னார்கழற்கமலம்சூடினோம் - முன்னாள் கிழியறுத்தானென்றுரைத்தோம், கீழ்மையினிற்சேரும் வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து
பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று ஈண்டியசங்கமெடுத்தூத - வேண்டிய வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான் பாதங்கள்யாமுடையபற்று.
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு
காப்பு குறள்வெண்செந்துறை
1: பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம் மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன் செவ்வடிசெவ்விதிருக்காப்பு. (2) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1.
2: அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே. (2)
3: வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின் கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோ ம் ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதமே. 3
4: ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே. 4
5: அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு தொண்டக்குலத்திலுள்ளீர். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே. 5.
6: எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில் அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. 6.
7: தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின் கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம் மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி பாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 7.
8: நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும் கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும் மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே. 8.
9: உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம் விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில் படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 9.
10: எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண் செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே. 10.
11: அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன் செல்வனைப்போலத் திருமாலே. நானும்உனக்குப்பழவடியேன் நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி பல்வகையாலும்பவித்திரனே. உன்னைப்பல்லாண்டுகூறுவனே. (2) 11.
12: பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும் வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல் நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே. (2) 12. பெரியாழ்வார் திருமொழி
முதற்பத்து முதல் திருமொழி - வண்ண மாடங்கள் (கண்ணன் திருவவதாரச் சிறப்பு)
கலிவிருத்தம்
13: வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர் கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில் எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக் கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே. (2) 1.
14: ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார் நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார் பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே. 2.
15: பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில் காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார் ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு வோணத்தா நுலகாளுமென்பார்களே. 3.
16: உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார் நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார் செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும் அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே. 4.
17: கொண்டதாளுறி கோலக்கொடுமழு தண்டினர் பறியோலைச்சயனத்தர் விண்டமுல்லை யரும்பன்னபல்லினர் அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார். 5.
18: கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர் பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால் ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே. 6.
19: வாயுள்வையகம்கண்ட மடநல்லார் ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் பாயசீருடைப் பண்புடைப்பாலகன் மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே. 7.
20: பத்துநாளும்கடந்த இரண்டாநாள் எத்திசையும் சயமரம்கோடித்து மத்தமாமலை தாங்கியமைந்தனை உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே. 8.
21: கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும் எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும் ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும் மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய். 9.
22: செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர் மன்னுநாரணன் நம்பிபிறந்தமை மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த இப் பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே. (2) 10.
இரண்டாம் திருமொழி - சீதக்கடல் (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்)
வெண்டளையால் வந்த கலித்தாழிசை
23: சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும் பாதக்கமலங்கள் காணீரே பவளவாயீர். வந்துகாணீரே. (2) 1.
24: முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும் தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும் பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள் ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர். வந்துகாணீரே. 2.
25: பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும் கணைக்கால்இருந்தவாகாணீரே காரிகையீர். வந்துகாணீரே. 3.
26: உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின் பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான் முழந்தாள்இருந்தவாகாணீரே முகிழ்முலையீர். வந்துகாணீரே. 4.
27: பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான் குறங்குவளைவந்துகாணீரே குவிமுலையீர். வந்துகாணீரே. 5.
28: மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில் அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன் முத்தமிருந்தவாகாணீரே முகிழ்நகையீர். வந்துகாணீரே. 6.
29: இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை பருங்கிப்பறித்துக்கொண்டு ஓடுபரமன்தன் நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும் மருங்கும்இருந்தவாகாணீரே வாணுதலீர். வந்துகாணீரே. 7.
30: வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து தந்தக்களிறுபோல் தானேவிளையாடும் நந்தன்மதலைக்கு நன்றுமழகிய உந்திஇருந்தவாகாணீரே ஒளியிழையீர். வந்துகாணீரே. 8.
31: அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த உதரம்இருந்தவா காணீரே ஒளிவளையீர். வந்துகாணீரே. 9.
32: பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை குருமாமணிப்பூண் குலாவித்திகழும் திருமார்புஇருந்தவாகாணீரே சேயிழையீர். வந்துகாணீரே. 10.
33: நாள்களோர்நாலைந்து திங்களளவிலே தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய் வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான் தோள்கள்இருந்தவாகாணீரே சுரிகுழலீர். வந்துகாணீரே. 11.
34: மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற செய்த்தலைநீலநிறத்துச் சிறுப்பிள்ளை நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய கைத்தலங்கள்வந்துகாணீரே கனங்குழையீர். வந்துகாணீரே. 12.
35: வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனாகக் கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய கண்டம்இருந்தவாகாணீரே காரிகையீர். வந்துகாணீரே. 13.
36: எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு அந்தொண்டைவாயமு தாதரித்து ஆய்ச்சியர் தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் இச் செந்தொண்டைவாய்வந்துகாணீரே சேயிழையீர். வந்துகாணீரே. 14.
37: நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால் நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு வாக்கும்நயனமும் வாயும்முறுவலும் மூக்கும்இருந்தவாகாணீரே மொய்குழலீர். வந்துகாணீரே. 15.
38: விண்கொளமரர்கள் வேதனைதீர முன் மண்கொள்வசுதேவர்தம் மகனாய்வந்து திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான் கண்கள்இருந்தவாகாணீரே கனவளையீர். வந்துகாணீரே. 16.
39: பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற உருவுகரிய ஒளிமணிவண்ணன் புருவம்இருந்தவாகாணீரே பூண்முலையீர். வந்துகாணீரே. 17.
40: மண்ணும்மலையும் கடலும்உலகேழும் உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை திண்ணம்இருந்தவாகாணீரே சேயிழையீர். வந்துகாணீரே. 18.
41: முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும் சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன் நெற்றிஇருந்தவாகாணீரே நேரிழையீர். வந்துகாணீரே. 19.
42: அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப மழகன்றினங்கள் மறித்துத்திரிவான் குழல்கள்இருந்தவாகாணீரே குவிமுலையீர். வந்துகாணீரே. 20.
தரவு கொச்சகக்கலிப்பா
43: சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன் விருப்பாலுரைத்த இருபதோடொன்றும் உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர்தாமே. (2) 21.
மூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்)
கலித்தாழிசை
44: மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில் பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான் மாணிக்குறளனே. தாலேலோ வையமளந்தானே. தாலேலோ. (2) 1.
45: உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூ இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான் உடையாய். அழேல்அழேல்தாலேலோ உலகமளந்தானே. தாலேலோ. 2.
46: என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி தந்துஉவனாய்நின்றான்தாலேலோ தாமரைக்கண்ணனே. தாலேலோ. 3.
47: சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும் அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும் அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார் செங்கண்கருமுகிலே. தாலேலோ தேவகிசிங்கமே. தாலேலோ. 4.
48: எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு வழுவில்கொடையான் வயிச்சிரவணன் தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ தூமணிவண்ணனே. தாலேலோ. 5.
49: ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும் சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும் மாதக்கவென்று வருணன்விடுதந்தான் சோதிச்சுடர்முடியாய். தாலேலோ சுந்தரத்தோளனே. தாலேலோ. 6.
50: கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும் வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும் தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள் கோனே. அழேல்அழேல்தாலேலோ குடந்தைக்கிடந்தானே. தாலேலோ. 7.
51: கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள் நச்சுமுலையுண்டாய். தாலேலோ நாராயணா. அழேல்தாலேலோ. 8.
52: மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும் செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும் வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள் அய்யா. அழேல்அழேல்தாலேலோ அரங்கத்தணையானே. தாலேலோ. 9.
தரவு கொச்சகக் கலிப்பா
53: வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல் எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே. (2) 10.
நான்காம் திருமொழி - தன் முகத்து (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்)
கலிநிலைத்துறை
54: தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய் பொன்முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான் என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ. நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ. (2) 1.
55: என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான் தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான் அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல் மஞ்சில்மறையாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. 2.
56: சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும் எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய் வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற கைத்தலம்நோவாமே அம்புலீ. கடிதோடிவா. 3.
57: சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண் தக்கதறிதியேல் சந்திரா. சலம்செய்யாதே மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய். 4.
58: அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான் குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல் புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ. 5.
59: தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன் கண்துயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான் உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில் விண்தனில்மன்னிய மாமதீ. விரைந்தோடிவா. 6.
60: பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள் ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன் மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல் மாலைமதியாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. 7.
61: சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய் சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள் சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண் நிறைமதீ. நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான். 8.
62: தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான் ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண் வாழவுறுதியேல் மாமதீ. மகிழ்ந்தோடிவா. 9.
63: மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு இவை ஒத்தனசொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர் வித்தகன்விட்டுசித்தன் விரித்ததமிழிவை எத்தனையும்சொல்லவல்லவர்க்கு இடரில்லையே. (2) 10.
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
64: உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா. ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல் பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே. பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே. செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதிச் செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக ஐய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. (2) 1.
65: கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம் குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய். மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக் கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே. ஆள. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 2.
66: நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே. நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால் தம்மனையானவனே. தரணிதலமுழுதும் தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும் விம்மவளர்ந்தவனே. வேழமும்ஏழ்விடையும் விரவியவேலைதனுள்வென்றுவருமவனே. அம்ம. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 3.
67: வானவர்தாம்மகிழவன்சகடமுருள வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே. கானகவல்விளவின்காயுதிரக்கருதிக் கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே. தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன் என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும் ஆனை. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 4.
68: மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார் வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய். முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன் முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய அத்த. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 5.
69: காயமலர்நிறவா. கருமுகில்போலுருவா. கானகமாமடுவில்காளியனுச்சியிலே தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா. துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே. ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய். ஆய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 6.
70: துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால் தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய நப்பினைதன்திறமாநல்விடையேழவிய நல்லதிறலுடையநாதனும்ஆனவனே. தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத் தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என் அப்ப. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 7.
71: உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும் கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக் கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ் சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே. என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 8.
72: பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும் பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக் கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ ஏலுமறைப்பொருளே. ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 9.
73: செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில் சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில் தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின் பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும் மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும் மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக எங்கள்குடிக்கரசே. ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 10.
74: அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும் ஆமையுமானவனே. ஆயர்கள்நாயகனே. என்அவலம்களைவாய். ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகவாடுகவென்று அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ் இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில் எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே. (2) 11.
ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்)
வெண்டளையால் வந்த கலித்தாழிசை
75: மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல் ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு காணிகொண்டகைகளால்சப்பாணி கருங்குழல்குட்டனே. சப்பாணி. (2) 1.
76: பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி தன்னரையாடத் தனிச்சுட்டிதாழ்ந்தாட என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம் மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி மாயவனே. கொட்டாய்சப்பாணி. 2.
77: பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன என்மணிவண்ணன். இலங்குபொற்றேட்டின்மேல் நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன் அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி ஆழியங்கையனே. சப்பாணி. 3.
78: தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட வானிலாஅம்புலீ. சந்திரா. வாவென்று நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம் கோநிலாவக்கொட்டாய்சப்பாணி குடந்தைக்கிடந்தானே. சப்பாணி. 4.
79: புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்து அட்டியமுக்கி அகம்புக்கறியாமே சட்டித்தயிரும் தடாவினில்வெண்ணெயும்உண் பட்டிக்கன்றே. கொட்டாய்சப்பாணி பற்பநாபா. கொட்டாய்சப்பாணி. 5.
80: தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது போருத்துவந்து புகுந்தவர்மண்ணாள பாரித்தமன்னர்படப் பஞ்சவர்க்கு அன்று தேருய்த்தகைகளால்சப்பாணி தேவகிசிங்கமே. சப்பானி. 6.
81: பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க சரந்தொட்டகைகளால்சப்பாணி சார்ங்கவிற்கையனே. சப்பாணி. 7.
82: குரக்கினத்தாலே குரைகடல்தன்னை நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை அரக்கர்அவிய அடுகணையாலே நெருக்கியகைகளால்சப்பாணி நேமியங்கையனே. சப்பாணி. 8.
83: அளந்திட்டதூணை அவந்தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய் உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம் பிளந்திட்டகைகளால்சப்பாணி பேய்முலையுண்டானே. சப்பாணி. 9.
84: அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னை மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக கடைந்திட்டகைகளால்சப்பாணி கார்முகில்வண்ணனே. சப்பாணி. 10.
தரவு கொச்சகக்கலிப்பா
85: ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன் வேட்கையால்சொன்ன சப்பாணிஈரைந்தும் வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே. (2) 11.
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
86: தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல் உடங்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி தளர்நடைநடவானோ. (2) 1.
87: செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோல நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர்வெண்பல்முளையிலக அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன் தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. 2.
88: மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய் பின்னல்துலங்கும்அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும் மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போலக் கழுத்திணில்காறையொடும் தன்னில்பொலிந்தஇருடீகேசன் தளர்நடைநடவானோ. 3.
89: கன்னற்குடம்திறந்தலொத்தூறிக் கணகணசிரித்துவந்து முன்வந்துநின்றுமுத்தம்தரும் என்முகில்வண்ணன்திருமார்வன் தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான் தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே தளர்நடைநடவானோ. 4.
90: முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோட பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவதுபோல் பன்னியுலகம்பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும் தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான் தளர்நடைநடவானோ. 5.
91: ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல் இலச்சினைபடநடந்து பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்துபெய்து கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை தளர்நடைநடவானோ. 6.
92: படர்பங்கயமலர்வாய்நெகிழப் பனிபடுசிறுதுளிபோல் இடங்கொண்டசெவ்வாயூறியூறி இற்றிற்றுவீழநின்று கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல் உடைமணிகணகணென தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ. 7.
93: பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின் தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. 8.
94: வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல் தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து ஒன்றும்நோவாமே தண்போதுகொண்டதவிசின்மீதே தளர்நடைநடவானோ. 9.
95: திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் தன் திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம் தருநீர் சிறுச்சண்ணம்துள்ளம்சோரத் தளர்நடைநடவானோ. 10.
96: ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை தாயர்மகிழஒன்னார்தளரத் தளர்நடைநடந்ததனை வேயர்புகழ்விட்டுசித்தன் சீரால்விரித்தனஉரைக்கவல்லார் மாயன்மணிவண்ணன்தாள்பணியும் மக்களைப்பெறுவார்களே. 11.
எட்டாம் திருமொழி -- பொன்னியல் (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்)
கலித்தாழிசை
97: பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டி தன்னியலோசை சலஞ்சலனென்றிட மின்னியல்மேகம் விரைந்தெதிர்வந்தாற்போல் என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. (2) 1.
98: செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல் பங்கிகள்வந்து உன்பவளவாய்மொய்ப்ப சங்குவில்வாள்தண்டு சக்கரமேந்திய அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ. 2.
99: பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த அஞ்சனவண்ணனே. அச்சோவச்சோ ஆயர்பெருமானே. அச்சோவச்சோ. 3.
100: நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன தேறிஅவளும் திருவுடம்பில்பூச ஊறியகூனினை உள்ளேயொடுங்க அன்று ஏறவுருவினாய். அச்சோவச்சோ எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. 4.
101: கழல்மன்னர்சூழக் கதிர்போல்விளங்கி எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும் சுழலைப்பெரிதுடைத் துச்சோதனனை அழலவிழித்தானே. அச்சோவச்சோ ஆழியங்கையனே. அச்சோவச்சோ. 5.
102: போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான் தேரொக்கவூர்ந்தாய். செழுந்தார்விசயற்காய் காரொக்கும்மேனிக் கரும்பெருங்கண்ணனே. ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ ஆயர்கள்போரேறே. அச்சோவச்சோ. 6.
103: மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில் தக்கதிதன்றென்று தானம்விலக்கிய சுக்கிரன்கண்ணைத் துரும்பால்கிளறிய சக்கரக்கையனே. அச்சோவச்சோ சங்கமிடத்தானே. அச்சோவச்சோ. 7.
104: என்னிதுமாயம்? என்னப்பன்அறிந்திலன் முன்னைவண்ணமேகொண்டு அளவாயென்ன மன்னுநமுசியை வானில்சுழற்றிய மின்னுமுடியனே. அச்சோவச்சோ வேங்கடவாணனே. அச்சோவச்சோ. 8.
105: கண்டகடலும் மலையும்உலகேழும் முண்டத்துக்காற்றா முகில்வண்ணாவோ. அன்று இண்டைச்சடைமுடி ஈசன்இரக்கொள்ள மண்டைநிறைத்தானே. அச்சோவச்சோ மார்வில்மறுவனே. அச்சோவச்சோ. 9.
106: துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூட மன்னியநான்மறை முற்றும்மறைந்திட பின்னிவ்வுலகினில் பேரிருள்நீங்க அன்று அன்னமதானானே. அச்சோவச்சோ அருமறைதந்தானே. அச்சோவச்சோ. 10.
தரவு கொச்சகக்கலிப்பா
107: நச்சுவார்முன்னிற்கும் நாராயணன்தன்னை அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன மச்சணிமாடப் புதுவைகோன்பட்டன்சொல் நிச்சலும்பாடுவார் நீள்விசும்பாள்வரே. (2) 11.
ஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)
வெண்டளையால்வந்த கலித்தாழிசை
108: வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல் சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத்துளிக்க என் குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான். (2) 1.
109: கிங்கிணிகட்டிக் கிறிகட்டி கையினில் கங்கணமிட்டுக் கழுத்தில்தொடர்கட்டி தன்கணத்தாலே சதிராநடந்துவந்து என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான் எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 2.
110: கத்தக்கதித்துக் கிடந்தபெருஞ்செல்வம் ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான் கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் ஆயர்களேறுஎன்புறம்புல்குவான். 3.
111: நாந்தகமேந்திய நம்பிசரணென்று தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில் வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர் ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான் உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 4.
112: வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ் பண்பலபாடிப் பல்லாண்டிசைப்ப பண்டு மண்பலகொண்டான்புறம்புல்குவான் வாமனன்என்னைப்புறம்புல்குவான். 5.
113: சத்திரமேந்தித் தனியொருமாணியாய் உத்தரவேதியில் நின்றஒருவனை கத்திரியர்காணக் காணிமுற்றும்கொண்ட பத்திராகாரன்புறம்புல்குவான் பாரளந்தான்என்புறம்புல்குவான். 6.
114: பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும் மெத்தத்திருவயிறார விழுங்கிய அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் ஆழியான்என்னைப்புறம்புல்குவான். 7.
115: மூத்தவைகாண முதுமணற்குன்றேறி கூத்துஉவந்தாடிக் குழலால்இசைபாடி வாய்த்தமறையோர் வணங்க இமையவர் ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான் எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 8.
116: கற்பகக்காவு கருதியகாதலிக்கு இப்பொழுதுஈவதென்று இந்திரன்காவினில் நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள் உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான் உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 9.
தரவு கொச்சகக்கலிப்பா
117: ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய வேய்த்தடந்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து ஈத்ததமிழிவை ஈரைந்தும்வல்லவர் வாய்த்தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. (2) 10.
இரண்டாம்பத்து
முதல்திருமொழி - மெச்சூது (பூச்சிகாட்டி விளையாடுதல்.) கலித்தாழிசை
118:
மெச்சூதுசங்கம்இடத்தான் நல்வேயூதி பொய்ச்சூதில்தோற்ற பொறையுடைமன்னர்க்காய் பத்தூர்பெறாதுஅன்று பாரதம்கைசெய்த அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். (2) 1.
119: மலைபுரைதோள்மன்னவரும் மாரதரும்மற்றும் பலர்குலைய நூற்றுவரும்பட்டழிய பார்த்தன் சிலைவளையத் திண்தேர்மேல்முன்னின்ற செங்கண் அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 2.
120: காயும்நீர்புக்குக் கடம்பேறி காளியன் தீயபணத்தில் சிலம்பார்க்கப்பாய்ந்தாடி வேயிங்குழலூதி வித்தகனாய்நின்ற ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 3.
121: இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர் மருட்டைத்தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாளப் புரட்டி அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 4.
122: சேப்பூண்ட சாடுசிதறி திருடிநெய்க்கு ஆப்பூண்டு நந்தன்மனைவிகடைதாம்பால் சோப்பூண்டு துள்ளித்துடிக்க அன்று ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 5.
123: செப்பிளமென்முலைத் தேவகிநங்கைக்கு சொப்படத்தோன்றித் தொறுப்பாடியோம்வைத்த துப்பமும்பாலும் தயிரும்விழுங்கிய அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 6.
124: தத்துக்கொண்டாள்கொலோ? தானேபெற்றாள்கொலோ? சித்தமனையாள் அசோதையிளஞ்சிங்கம் கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 7.
125: கொங்கை வன்கூனிசொற்கொண்டு குவலயத் துங்கக்கரியும் பரியும்இராச்சியமும் எங்கும்பரதற்கருளி வன்கானடை அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 8.
126: பதகமுதலைவாய்ப் பட்டகளிறு கதறிக்கைகூப்பி என்கண்ணா. கண்ணா. என்ன உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 9.
தரவு கொச்சகக்கலிப்பா
127: வல்லாளிலங்கைமலங்கச் சரந்துரந்த வில்லாளனை விட்டுசித்தன் விரித்த சொல்லார்ந்த அப்பூச்சிப்பாடல்இவைபத்தும் வல்லார்போய் வைகுந்தம் மன்னியிருப்பரே. (2) 10.
இரண்டாம் திருமொழி - அரவணையாய் (கண்ணனை முலையுண்ண அழைத்தல்)
கலிவிருத்தம்
128: அரவணையாய். ஆயரேறே. அம்மமுண்ணத்துயிலெழாயே இரவுமுண்ணாதுஉறங்கிநீபோய் இன்றுமுச்சிகொண்டதாலோ வரவும்காணேன்வயிறசைந்தாய் வனமுலைகள்சோர்ந்துபாய திருவுடையவாய்மடுத்துத் திளைத்துதைத்துப்பருகிடாயே. (2) 1.
129: வைத்தநெய்யும்காய்ந்தபாலும் வடிதயிரும்நறுவெண்ணெயும் இத்தனையும்பெற்றறியேன் எம்பிரான். நீ பிறந்தபின்னை எத்தனையும்செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன்கதம்படாதே முத்தனையமுறுவல்செய்து மூக்குறுஞ்சிமுலையுணாயே. 2.
130: தந்தம்மக்கள்அழுதுசென்றால் தாய்மாராவார்தரிக்ககில்லார் வந்துநின்மேல்பூசல்செய்ய வாழவல்லவாசுதேவா. உந்தையர்உந்திறத்தரல்லர் உன்னைநானொன்றுரப்பமாட்டேன் நந்தகோபனணிசிறுவா. நான்சுரந்தமுலையுணாயே. 3.
131: கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட கள்ளச்சகடுகலக்கழிய பஞ்சியன்னமெல்லடியால் பாய்ந்தபோதுநொந்திடுமென்று அஞ்சினேன்காண்அமரர்கோவே. ஆயர்கூட்டத்தளவன்றாலோ கஞ்சனைஉன்வஞ்சனையால் வலைப்படுத்தாய். முலையுணாயே. 4.
132: தீயபுந்திக்கஞ்சன்உன்மேல் சினமுடையன், சோர்வுபார்த்து மாயந்தன்னால்வலைப்படுக்கில் வாழகில்லேன்வாசுதேவா. தாயர்வாய்ச்சொல்கருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன்போகவேண்டா ஆயர்பாடிக்கணிவிளக்கே. அமர்ந்துவந்துஎன்முலையுணாயே. 5.
133: மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல்நுழைந்தவண்டு இன்னிசைக்கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய். உன்னைக்கண்டார் என்னநோன்புநோற்றாள்கொலோ இவனைப்பெற்றவயிறுடையாள் என்னும்வார்த்தையெய்துவித்த இருடீகேசா. முலையுணாயே. 6.
134: பெண்டிர்வாழ்வார்நின்னொப்பாரைப் பெறுதுமென்னுமாசையாலே கண்டவர்கள்போக்கொழிந்தார் கண்ணிணையால்கலக்கநோக்கி வண்டுலாம்பூங்குழலினார் உன்வாயமுதம்உண்ணவேண்டி கொண்டுபோவான்வந்துநின்றார் கோவிந்தா. நீமுலையுணாயே. 7.
135: இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன் திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே. 8.
136: அங்கமலப்போதகத்தில் அணிகொள்முத்தம்சிந்தினாற்போல் செங்கமலமுகம்வியர்ப்பத் தீமைசெய்துஇம்முற்றத்தூடே அங்கமெல்லாம்புழுதியாக அளையவேண்டாஅம்ம. விம்ம அங்கமரர்க்கமுதளித்த அமரர்கோவே. முலையுணாயே. 9.
137: ஓடவோடக்கிங்கிணிகள் ஒலிக்குமோசைப்பாணியாலே பாடிப்பாடிவருகின்றாயைப் பற்பநாபனென்றிருந்தேன் ஆடியாடியசைந்தசைந்திட்டு அதனுக்கேற்றகூத்தையாடி ஓடியோடிப்போய்விடாதே உத்தமா. நீமுலையுணாயே. 10.
138: வாரணிந்தகொங்கையாய்ச்சி மாதவா. உண்ணென்றமாற்றம் நீரணிந்தகுவளைவாசம் நிகழநாறும்வில்லிபுத்தூர் பாரணிந்ததொல்புகழான் பட்டர்பிரான்பாடல்வல்லார் சீரணிந்தசெங்கண்மால்மேல் சென்றசிந்தைபெறுவார்தாமே. (2) 11.
மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
139: போய்ப்படுடையநின்தந்தையும்தாழ்த்தான் பொருதிறல்கஞ்சன்கடியன் காப்பாருமில்லைகடல்வண்ணா. உன்னைத் தனியேபோய்எங்கும்திரிதி பேய்ப்பால்முலையுண்டபித்தனே. கேசவநம்பீ. உன்னைக்காதுகுத்த ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார் அடைக்காய்திருத்திநான்வைத்தேன். (2) 1.
140: வண்ணப்பவளம்மருங்கினில்சாத்தி மலர்ப்பாதக்கிங்கிணியார்ப்ப நண்ணித்தொழுமவர்சிந்தைபிரியாத நாராயணா. இங்கேவாராய் எண்ணற்கரியபிரானே. திரியை எரியாமேகாதுக்கிடுவன் கண்ணுக்குநன்றுமழகுடைய கனகக்கடிப்பும்இவையா. 2.
141: வையமெல்லாம்பெறுவம்வார்கடல்வாழும் மகரக்குழைகொண்டுவைத்தேன் வெய்யவேகாதில்திரியையிடுவன் நீவேண்டியதெல்லாம்தருவன் உய்யஇவ்வாயர்குலத்தினில்தோன்றிய ஒண்சுடராயர்கொழுந்தே. மையன்மைசெய்துஇளவாய்ச்சியருள்ளத்து மாதவனே. இங்கேவாராய். 3.
142: வணநன்றுடையவயிரக்கடிப்பிட்டு வார்காதுதாழப்பெருக்கி குணநன்றுடையர்இக்கோபாலபிள்ளைகள் கோவிந்தா. நீசொல்லுக்கொள்ளாய் இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால் இனியபலாப்பழம்தந்து சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான் சோத்தம்பிரான். இங்கேவாராய். 4.
143: சோத்தம்பிரான். என்றுஇரந்தாலும்கொள்ளாய் சுரிகுழலாரொடுநீபோய் கோத்துக்குரவைபிணைந்துஇங்குவந்தால் குணங்கொண்டிடுவனோ? நம்பீ. பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன் பிரானே. திரியிடவொட்டில் வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல் விட்டுவே. நீஇங்கேவாராய். 5.
144: விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய். உன்வாயில்விரும்பியதனைநான்நோக்கி மண்ணெல்லாம்கண்டுஎன்மனத்துள்ளேயஞ்சி மதுசூதனேயென்றிருந்தேன் புண்ணேதுமில்லைஉன்காதுமறியும் பொறுத்துஇறைப்போதுஇருநம்பீ. கண்ணா. என்கார்முகிலே. கடல்வண்ணா. காவலனே. முலையுணாயே. 6.
145: முலையேதும்வேண்டேனென்றோடி நின்காதில்கடிப்பைப்பறித்தெறிந்திட்டு மலையையெடுத்துமகிழ்ந்துகல்மாரிகாத்துப் பசுநிரைமேய்த்தாய். சிலையொன்றுஇறுத்தாய். திரிவிக்கிரமா. திருவாயர்பாடிப்பிரானே. தலைநிலாப்போதேஉன்காதைப்பெருக்காதே விட்டிட்டேன்குற்றமேயன்றே. 7.
146: என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண் என்னைநான்மண்ணுண்டேனாக அன்புற்றுநோக்கிஅடித்தும்பிடித்தும் அனைவர்க்கும்காட்டிற்றிலையே வன்புற்றரவின்பகைக்கொடிவாமனநம்பீ. உன்காதுகள்தூரும் துன்புற்றனவெல்லாம்தீர்ப்பாய்பிரானே. திரியிட்டுச்சொல்லுகேன்மெய்யே. 8.
147: மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதித் தொடுப்புண்டாய்வெண்ணெயையென்று கையைப்பிடித்துக்கரையுரலோடுஎன்னைக் காணவேகட்டிற்றிலையே? செய்தனசொல்லிச்சிரித்துஅங்குஇருக்கில் சிரீதரா. உன்காதுதூரும் கையில்திரியையிடுகிடாய் இந்நின்ற காரிகையார்சிரியாமே. 9.
148: காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்? காதுகள்வீங்கியெறியில் தாரியாதாகில்தலைநொந்திடுமென்று விட்டிட்டேன்குற்றமேயன்றே சேரியிற்பிள்ளைகளெல்லாரும் காது பெருக்கித்திரியவும்காண்டி ஏர்விடைசெற்றுஇளங்கன்றுஎறிந்திட்ட இருடீகேசா. என்தன்கண்ணே. 10.
149: கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கிக் கடிகமழ்பூங்குழலார்கள் எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும் பெருமானே. எங்களமுதே. உண்ணக்கனிகள்தருவன் கடிப்பொன்றும் நோவாமேகாதுக்கிடுவன் பண்ணைக்கிழியச்சகடமுதைத்திட்ட பற்பநாபா. இங்கேவாராய். 11.
150: வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து வலியவேகாதில்கடிப்பை நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்? காதுகள்நொந்திடும்கில்லேன் நாவற்பழம்கொண்டுவைத்தேன் இவைகாணாய்நம்பீ. முன்வஞ்சமகளைச் சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட தாமோதரா. இங்கேவாராய். 12.
151: வார்காதுதாழப்பெருக்கியமைத்து மகரக்குழையிடவேண்டி சீரால்அசோதைதிருமாலைச்சொன்னசொல் சிந்தையுள்நின்றுதிகழ பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் பன்னிருநாமத்தாற்சொன்ன ஆராதஅந்தாதிபன்னிரண்டும்வல்லார் அச்சுதனுக்குஅடியாரே. 13.
நாலாம் திருமொழி - வெண்ணெயளைந்த (கண்ணனை நீராட அழைத்தல்.)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
152: வெண்ணெயளைந்தகுணுங்கும் விளையாடுபுழுதியும்கொண்டு திண்ணெனெஇவ்விராஉன்னைத் தேய்த்துக்கிடக்கநான்ஒட்டேன் எண்ணெய்ப்புளிப்பழம்கொண்டு இங்குஎத்தனைபோதும்இருந்தேன் நண்ணலரியபிரானே. நாரணா. நீராடவாராய். (2) 1.
153: கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால் தென்றிக்கெடுமாகில் வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன் நின்றமராமரம்சாய்த்தாய். நீபிறந்ததிருவோணம் இன்று, நீநீராடவேண்டும் எம்பிரான். ஓடாதேவாராய். 2.
154: பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம் ஆய்ச்சியரெல்லாம்கூடி அழைக்கவும்நான்முலைதந்தேன் காய்ச்சினநீரொடுநெல்லி கடாரத்தில்பூரித்துவைத்தேன் வாய்த்தபுகழ்மணிவண்ணா. மஞ்சனமாடநீவாராய். 3.
155: கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்து வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே. மஞ்சளும்செங்கழுநீரின் வாசிகையும்நாறுசாந்தும் அஞ்சனமும்கொண்டுவைத்தேன் அழகனே. நீராடவாராய். 4.
156: அப்பம்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்து சொப்படநான்சுட்டுவைத்தேன் தின்னலுறிதியேல்நம்பீ. செப்பிளமென்முலையார்கள் சிறுபுறம்பேசிச்சிரிப்பர் சொப்படநீராடவேண்டும் சோத்தம்பிரான். இங்கேவாராய். 5.
157: எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி கண்ணைப்புரட்டிவிழித்துக் கழகண்டுசெய்யும்பிரானே. உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே வண்ணம்அழகியநம்பீ. மஞ்சனமாடநீவாராய். 6.
158: கறந்தநற்பாலும்தயிரும் கடைந்துஉறிமேல்வைத்தவெண்ணெய் பிறந்ததுவேமுதலாகப் பெற்றறியேன்எம்பிரானே. சிறந்தநற்றாய்அலர்தூற்றும் என்பதனால்பிறர்முன்னே மறந்தும்உரையாடமாட்டேன் மஞ்சனமாடநீவாராய். 7.
159: கன்றினைவாலோலைகட்டிக் கனிகளுதிரஎறிந்து பின்தொடர்ந்தோடிஓர்பாம்பைப் பிடித்துக்கொண்டாட்டினாய்போலும் நின்திறத்தேனல்லன்நம்பீ. நீபிறந்ததிருநல்நாள் நன்றுநீநீராடவேண்டும் நாரணா. ஓடாதேவாராய். 8.
160: பூணித்தொழுவினில்புக்குப் புழுதியளைந்தபொன்மேனி காணப்பெரிதும்உகப்பன் ஆகிலும்கண்டார்பழிப்பர் நாணெத்தனையுமிலாதாய். நப்பின்னைகாணில்சிரிக்கும் மாணிக்கமே. என்மணியே. மஞ்சனமாடநீவாராய். 9.
161: கார்மலிமேனி நிறத்துக் கண்ணபிரானையுகந்து வார்மலிகொங்கையசோதை மஞ்சனமாட்டியவாற்றை பார்மலிதொல்புதுவைக்கோன் பட்டர்பிரான்சொன்னபாடல் சீர்மலிசெந்தமிழ்வல்லார் தீவினையாதுமிலரே. (2) 10.
ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்)
கலித்தாழிசை
162: பின்னைமணாளனைப் பேரில்கிடந்தானை முன்னையமரர் முதல்தனிவித்தினை என்னையும் எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய். மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய். (2) 1.
163: பேயின்முலையுண்ட பிள்ளைஇவன்முன்னம் மாயச்சகடும் மருதும்இறுத்தவன் காயாமலர்வண்ணன் கண்ணன்கருங்குழல் தூய்தாகவந்துகுழல்வாராய்அக்காக்காய். தூமணிவண்ணன்குழல்வாராய்அக்காக்காய். 2.
164: திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும் அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம் கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய். கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய். 3.
165: பள்ளத்தில்மேயும் பறவையுருக்கொண்டு கள்ளவசுரன்வருவானைத் தான்கண்டு புள்ளிதுவென்று பொதுக்கோவாய்கீண்டிட்ட பிள்ளையைவந்துகுழல்வாராய்அக்காக்காய். பேய்முலையுண்டான்குழல்வாராய்அக்காக்காய். 4.
166: கற்றினம்மேய்த்துக் கனிக்குஒருகன்றினை பற்றியெறிந்த பரமன்திருமுடி உற்றனபேசி நீஓடித்திரியாதே அற்றைக்கும்வந்துகுழல்வாராய்அக்காக்காய். ஆழியான்தன்குழல்வாராய்அக்காக்காய். 5.
167: கிழக்கில்குடிமன்னர் கேடிலாதாரை அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால் விழிக்குமளவிலே வேரறுத்தானை குழற்குஅணியாகக்குழல்வாராய்அக்காக்காய். கோவிந்தன்தன்குழல்வாராய்அக்காக்காய். 6.
168: பிண்டத்திரளையும் பேய்க்குஇட்டநீர்ச்சோறும் உண்டற்குவேண்டி நீஓடித்திரியாதே அண்டத்துஅமரர்பெருமான் அழகமர் வண்டொத்திருண்டகுழல்வாராய்அக்காக்காய். மாயவன்தன்குழல்வாராய்அக்காக்காய். 7.
169: உந்தியெழுந்த உருவமலர்தன்னில் சந்தச்சதுமுகன்தன்னைப் படைத்தவன் கொந்தக்குழலைக் குறந்துபுளியட்டி தந்தத்தின்சீப்பால்குழல்வாராய்அக்காக்காய். தாமோதரன்தன்குழல்வாராய்அக்காக்காய். 8.
170: மன்னன்தன்தேவிமார் கண்டுமகிழ்வெய்த முன்இவ்வுலகினை முற்றும்அளந்தவன் பொன்னின்முடியினைப் பூவணைமேல்வைத்து பின்னேயிருந்துகுழல்வாராய்அக்காக்காய். பேராயிரத்தான்குழல்வாராய்அக்காக்காய். 9.
தரவு கொச்சகக்கலிப்பா
171: கண்டார்பழியாமே அக்காக்காய். கார்வண்ணன் வண்டார்குழல்வார வாவென்றஆய்ச்சிசொல் விண்தோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல் கொண்டாடிப்பாடக் குறுகாவினைதாமே. (2) 10.
ஆறாம் திருமொழி - வேலிக்கோல் (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்)
கலித்தாழிசை
172: வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றி தாலிக்கொழுந்தைத் தடங்கழுத்திற்பூண்டு பீலித்தழையைப் பிணைத்துப்பிறகிட்டு காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா. (2) 1.
173: கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும் எங்கும்திரிந்து விளையாடும்என்மகன் சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க நல் அங்கமுடையதோர்கோல்கொண்டுவா அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா. 2.
174: கறுத்திட்டுஎதிர்நின்ற கஞ்சனைக்கொன்றான் பொறுத்திட்டுஎதிர்வந்த புள்ளின்வாய்கீண்டான் நெறித்தகுழல்களை நீங்கமுன்னோடி சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. 3.
175: ஒன்றேயுரைப்பான் ஒருசொல்லேசொல்லுவன் துன்றுமுடியான் துரியோதனன்பக்கல் சென்றுஅங்குப்பாரதம் கையெறிந்தானுக்கு கன்றுகள்மேய்ப்பதோர்கோல்கொண்டுவா கடல்நிறவண்ணர்க்குஓர்கோல்கொண்டுவா. 4.
176: சீரொன்றுதூதாய்த் துரியோதனன்பக்கல் ஊரொன்றுவேண்டிப் பெறாதஉரோடத்தால் பாரொன்றிப் பாரதம்கைசெய்து பார்த்தற்குத் தேரொன்றையூர்ந்தாற்குஓர்கோல்கொண்டுவா தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. 5.
177: ஆலத்திலையான் அரவினணைமேலான் நீலக்கடலுள் நெடுங்காலம்கண்வளர்ந்தான் பாலப்பிராயத்தே பார்த்தர்க்குஅருள்செய்த கோலப்பிரானுக்குஓர்கோல்கொண்டுவா குடந்தைக்கிடந்தார்க்குஓர்கோல்கொண்டுவா. 6.
178: பொன்திகழ் சித்திரகூடப்பொருப்பினில் உற்றவடிவில் ஒருகண்ணும்கொண்ட அக் கற்றைக்குழலன் கடியன்விரைந்து உன்னை மற்றைக்கண்கொள்ளாமேகோல்கொண்டுவா மணிவண்ணநம்பிக்குஓர்கோல்கொண்டுவா. 7.
179: மின்னிடைச் சீதைபொருட்டா இலங்கையர் மன்னன்மணிமுடி பத்தும்உடன்வீழ தன்னிகரொன்றில்லாச் சிலைகால்வளைத்திட்ட மின்னுமுடியற்குஓர்கோல்கொண்டுவா வேலையடைத்தாற்குஓர்கோல்கொண்டுவா. 8.
180: தென்னிலங்கைமன்னன் சிரம்தோள்துணிசெய்து மின்னிலங்குபூண் விபீடணநம்பிக்கு என்னிலங்குநாமத்தளவும் அரசென்ற மின்னிலங்காரற்குஓர்கோல்கொண்டுவா வேங்கடவாணர்க்குஓர்கோல்கொண்டுவா. 9.
தரவு கொச்சகக்கலிப்பா
181: அக்காக்காய். நம்பிக்குக் கோல்கொண்டுவாவென்று மிக்காளுரைத்தசொல் வில்லிபுத்தூர்ப்பட்டன் ஒக்கவுரைத்த தமிழ்பத்தும்வல்லவர் மக்களைப்பெற்று மகிழ்வர்இவ்வையத்தே. 10.
ஏழாம் திருமொழி - ஆனிரை (கண்ணனைப் பூச்சூட அழைத்தல்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
182: ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய் கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட பானையில்பாலைப்பருகிப் பற்றாதாரெல்லாம்சிரிப்ப தேனிலினியபிரானே. செண்பகப்பூச்சூட்டவாராய். (2) 1.
183: கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும்கண்கள் உருவுடையாய். உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய். திருவுடையாள்மணவாளா. திருவரங்கத்தேகிடந்தாய். மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய். 2.
184: மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு கச்சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவைகீறி நிச்சலும்தீமைகள்செய்வாய். நீள்திருவேங்கடத்துஎந்தாய். பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச்சூட்டவாராய். 3.
185: தெருவின்கன்-இன்று இளவாய்ச்சிமார்களைத்தீமைசெய்யாதே மருவும்தமனகமும்சீர் மாலைமணம்கமழ்கின்ற புருவம்கருங்குழல்நெற்றி பொலிந்தமுகிற்கன்றுபோலே உருவமழகியநம்பீ. உகந்திவைசூட்டநீவாராய். 4.
186: புள்ளினைவாய்பிளந்திட்டாய். பொருகரியின்கொம்பொசித்தாய். கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலைகொண்டாய். அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ்சாதுஅடியேன்அடித்தேன் தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்சூட்டவாராய். 5.
187: எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்கான்-அம்பி. கருதியதீமைகள்செய்து கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய். தெருவின்கண்தீமைகள்செய்து சிக்கெனமல்லர்களோடு பொருதுவருகின்றபொன்னே. புன்னைப்பூச்சூட்டவாராய். 6.
188: குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லஎம்கோவே. மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன்மைந்தா. இடந்திட்டுஇரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய். குடந்தைக்கிடந்தஎம்கோவே. குருக்கத்திப்பூச்சூட்டவாராய். 7.
189: சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய். சாமாறுஅவனைநீயெண்ணிச் சக்கரத்தால்தலைகொண்டாய். ஆமாறறியும்பிரானே. அணியரங்கத்தேகிடந்தாய். ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய். இருவாட்சிப்பூச்சூட்டவாராய். 8.
190: அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய். தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய். தூமலராள்மணவாளா. உண்டிட்டுஉலகினையேழும் ஓராலிலையில்துயில்கொண்டாய். கண்டுநான்உன்னையுகக்கக் கருமுகைப்பூச்சூட்டவாராய். 9.
191: செண்பகமல்லிகையோடு செங்கழுநீர்இருவாட்சி எண்பகர்பூவும்கொணர்ந்தேன் இன்றுஇவைசூட்டவாவென்று மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான்சொன்னபத்தே. (2) 10.
எட்டாம் திருமொழி - இந்திரனோடு (கண்ணனை த்ருஷ்டிதோஷம் வாராதபடி திருவந்திக்காப்பிட அழைத்தல்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
192: இந்திரனோடுபிரமன் ஈசன்இமையவரெல்லாம் மந்திரமாமலர்கொண்டு மறைந்துஉவராய்வந்துநின்றார் சந்திரன்மாளிகைசேரும் சதிரர்கள்வெள்ளறைநின்றாய். அந்தியம்போதுஇதுவாகும் அழகனே. காப்பிடவாராய். (2) 1.
193: கன்றுகள்இல்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம் நின்றொழிந்தேன்உன்னைக்கூவி நேசமேலொன்றுமிலாதாய். மன்றில்நில்லேல் அந்திப்போது மதிள்திருவெள்ளறைநின்றாய். நன்றுகண்டாய்என்தன்சொல்லு நான்உன்னைக்காப்பிடவாராய். 2.
194: செப்போதுமென்முலையார்கள் சிறுசோறும்இல்லும்சிதைத்திட்டு அப்போதுநானுரப்பப்போய் அடிசிலுமுண்டிலைஆள்வாய். முப்போதும்வானவரேத்தும் முனிவர்கள்வெள்ளறைநின்றாய். இப்போதுநான்ஒன்றும்செய்யேன் எம்பிரான். காப்பிடவாராய். 3.
195: கண்ணில்மணல்கொடுதூவிக் காலினால்பாய்ந்தனையென்றென்று எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு இவரால்முறைப்படுகின்றார் கண்ணனே. வெள்ளறைநின்றாய். கண்டாரோடேதீமைசெய்வாய். வண்ணமேவேலையதொப்பாய். வள்ளலே. காப்பிடவாராய். 4.
196: பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள் தீமைகள்செய்வார் எல்லாம்உன்மேலன்றிப்போகாது எம்பிரான். நீஇங்கேவாராய் நல்லார்கள்வெள்ளறைநின்றாய். ஞானச்சுடரே. உன்மேனி சொல்லாரவாழ்த்திநின்றேத்திச் சொப்படக்காப்பிடவாராய். 5.
197: கஞ்சங்கறுக்கொண்டுநின்மேல் கருநிறச்செம்மயிர்ப்பேயை வஞ்சிப்பதற்குவிடுத்தானென்பது ஓர்வார்த்தையும்உண்டு மஞ்சுதவழ்மணிமாட மதிள்திருவெள்ளறைநின்றாய். அஞ்சுவன்நீஅங்குநிற்க அழகனே. காப்பிடவாராய். 6.
198: கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்த பிள்ளையரசே. நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை உள்ளவாறுஒன்றும்அறியேன் ஒளியுடைவெள்ளறைநின்றாய். பள்ளிகொள்போதுஇதுவாகும் பரமனே. காப்பிடவாராய். 7.
199: இன்பமதனைஉயர்த்தாய். இமையவர்க்குஎன்றும்அரியாய். கும்பக்களிறட்டகோவே. கொடுங்கஞ்சன்நெஞ்சினிற்கூற்றே. செம்பொன்மதிள்வெள்ளறையாய். செல்வத்தினால்வளர்பிள்ளாய். கம்பக்கபாலிகாண்அங்குக் கடிதோடிக்காப்பிடவாராய். 8.
200: இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு எழில்மறையோர்வந்துநின்றார் தருக்கேல்நம்பி. சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய்சிலநாள் திருக்காப்புநான்உன்னைச்சாத்தத் தேசுடைவெள்ளறைநின்றாய். உருக்காட்டும்அந்திவிளக்கு இன்றொளிகொள்ளஏற்றுகேன்வாராய். 9.
201: போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறையானை மாதர்க்குயர்ந்தஅசோதை மகன்தன்னைக்காப்பிட்டமாற்றம் வேதப்பயன்கொள்ளவல்ல விட்டுசித்தன்சொன்னமாலை பாதப்பயன்கொள்ளவல்ல பத்தருள்ளார்வினைபோமே. (2) 10.
ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
202: வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை வெற்பிடையிட்டு அதனோசைகேட்கும் கண்ணபிரான்கற்றகல்விதன்னைக் காக்ககில்லோம்உன்மகனைக்காவாய் புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை புரைபுரையால்இவைசெய்யவல்ல அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். (2) 1.
203: வருகவருகவருகஇங்கே வாமனநம்பீ. வருகஇங்கே கரியகுழல்செய்யவாய்முகத்துக் காகுத்தநம்பீ. வருகஇங்கே அரியனிவன்எனக்குஇன்றுநங்காய். அஞ்சனவண்ணா. அசலகத்தார் பரிபவம்பேசத்தரிக்ககில்லேன் பாவியேனுக்குஇங்கேபோதராயே. 2.
204: திருவுடைப்பிள்ளைதான்தீயவாறு தேக்கமொன்றுமிலன்தேசுடையன் உருகவைத்தகுடத்தொடுவெண்ணெய் உறிஞ்சியுடைத்திட்டுப்போந்துநின்றான் அருகிருந்தார்தம்மைஅநியாயம்செய்வது தான் வழக்கோ? அசோதாய். வருகவென்றுஉன்மகன்தன்னைக்கூவாய் வாழவொட்டான்மதுசூதனனே. 3.
205: கொண்டல்வண்ணா. இங்கேபோதராயே கோயிற்பிள்ளாய். இங்கேபோதராயே தெண்திரைசூழ்திருப்பேர்க்கிடந்த திருநாரணா. இங்கேபோதராயே உண்டுவந்தேன்அம்மனென்றுசொல்லி ஓடிஅகம்புகஆய்ச்சிதானும் கண்டெதிரேசென்றெடுத்துக்கொள்ளக் கண்ணபிரான்கற்றகல்விதானே. 4.
206: பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப் பல்வளையாள்என்மகளிருப்ப மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன் சாளக்கிராமமுடையநம்பி சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான் ஆலைக்கரும்பின்மொழியனைய அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். 5.
207: போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய் போதரேனென்னாதேபோதர்கண்டாய் ஏதேனும்சொல்லிஅசலகத்தார் ஏதேனும்பேசநான்கேட்கமட்டேன் கோதுகலமுடைக்குட்டனேயா. குன்றெடுத்தாய். குடமாடுகூத்தா. வேதப்பொருளே. என்வேங்கடவா. வித்தகனே. இங்கேபோதராயே. 6.
208: செந்நெலரிசிசிறுபருப்புச் செய்த அக்காரம்நறுநெய்பாலால் பன்னிரண்டுதிருவோணம்அட்டேன் பண்டும்இப்பிள்ளைபரிசறிவன் இன்னமுகப்பன்நானென்றுசொல்லி எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான் உன்மகன்தன்னையசோதைநங்காய். கூவிக்கொள்ளாய்இவையும்சிலவே. 7.
209: கேசவனே. இங்கேபோதராயே கில்லேனென்னாதுஇங்கேபோதராயே நேசமிலாதாரகத்திருந்து நீவிளையாடாதேபோதராயே தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும் தொண்டரும்நின்றவிடத்தில்நின்று தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய் தாமோதரா. இங்கேபோதராயே. 8.
210: கன்னலிலட்டுவத்தோடுசீடை காரெள்ளினுண்டைகலத்திலிட்டு என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன் இவன்புக்குஅவற்றைப்பெறுத்திப்போந்தான் பின்னும்அகம்புக்குஉறியைநோக்கிப் பிறங்கொளிவெண்ணெயும்சோதிக்கின்றான் உன்மகன்தன்னையசோதைநங்காய். கூவிக்கொள்ளாய் இவையும்சிலவே. 9.
211: சொல்லிலரசிப்படுதிநங்காய். சுழலுடையன்உன்பிள்ளைதானே இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவிக் கையில்வளையைக்கழற்றிக்கொண்டு கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து நல்லனநாவற்பழங்கள்கொண்டு நானல்லேனென்றுசிரிக்கின்றானே. 10.
212: வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ் வருபுனல்காவிரித்தென்னரங்கன் பண்டவன்செய்தகிரீடையெல்லாம் பட்டர்பிரான்விட்டுசித்தன்பாடல் கொண்டிவைபாடிக்குனிக்கவல்லார் கோவிந்தன்தன்அடியார்களாகி எண்திசைக்கும்விளக்காகிநிற்பார் இணையடிஎன்தலைமேலனவே. (2) 11.
பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்)
கலித்தாழிசை
213: ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு காற்றின்கடியனாய் ஓடிஅகம்புக்கு மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும் வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும். (2) 1.
214: குண்டலம்தாழக் குழல்தாழநாண்தாழ எண்திசையோரும் இறைஞ்சித்தொழுதேத்த வண்டமர்பூங்குழலார் துகில்கைக்கொண்டு விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும் வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும். 2.
215: தடம்படுதாமரைப் பொய்கைகலக்கி விடம்படுநாகத்தை வால்பற்றிஈர்த்து படம்படுபைந்தலை மேலெழப்பாய்ந்திட்டு உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும் உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும். 3.
216: தேனுகனாவி செகுத்து பனங்கனி தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால் வானவர்கோன்விட வந்தமழைதடுத்து ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும் அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும். 4.
217: ஆய்ச்சியர்சேரி அளைதயிர்பாலுண்டு பேர்த்தவர்கண்டுபிடிக்கப் பிடியுண்டு வேய்த்தடந்தோளினார் வெண்ணெய்கொள்மாட்டாது அங்கு ஆப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும் அடியுண்டழுதானால்இன்றுமுற்றும். 5.
218: தள்ளித்தளிர்நடையிட்டு இளம்பிள்ளையாய் உள்ளத்தினுள்ளே அவளையுறநோக்கி கள்ளத்தினால்வந்த பேய்ச்சிமுலையுயிர் துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும் துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும். 6.
219: மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்று மூவடிதாவென்று இரந்தஇம்மண்ணினை ஓரடியிட்டு இரண்டாமடிதன்னிலே தாவடியிட்டானால்இன்றுமுற்றும் தரணியளந்தானால்இன்றுமுற்றும். 7.
220: தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய் வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண் வேழம்துயர்கெட விண்ணோர்பெருமானாய் ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும் அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும். 8.
221: வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும் கானத்துமேய்ந்து களித்துவிளையாடி ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும் தரணியிடந்தானால்இன்றுமுற்றும். 9.
தரவு கொச்சகக்கலிப்பா
222: அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்கு மங்கைநல்லார்கள்தாம் வந்துமுறைப்பட்ட அங்கவர்சொல்லைப் புதுவைப்கோன்பட்டன்சொல் இங்கிவைவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே. (2) 10.
மூன்றாம்பத்து
முதல்திருமொழி - தன்னேராயிரம் (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
223: தன்னேராயிரம்பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான் பொன்னேய்நெய்யொடுபாலமுதுண்டு ஒருபுள்ளுவன்பொய்யேதவழும் மின்னேர் நுண்ணிடைவஞ்சமகள்கொங்கைதுஞ்ச வாய்வைத்தபிரானே. அன்னே. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. (2) 1.
224: பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்போனேன் வருமளவுஇப்பால் வன்பாரச்சகடம்இறச்சாடி வடக்கிலகம்புக்கிருந்து மின்போல் நுண்ணிடையால்ஒருகன்னியை வேற்றுருவம்செய்துவைத்த அன்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 2.
225: கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கிக் குடத்தயிர்சாய்த்துப்பருகி பொய்ம்மாயமருதானஅசுரரைப் பொன்றுவித்துஇன்றுநீவந்தாய் இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ. உன்னைஎன்மகனேயென்பர்நின்றார் அம்மா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 3.
226: மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை மையன்மைசெய்துஅவர்பின்போய் கொய்யார்பூந்துகில்பற்றித்தனிநின்று குற்றம்பலபலசெய்தாய் பொய்யா. உன்னைப்புறம்பலபேசுவ புத்தகத்துக்குளகேட்டேன் ஐயா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 4.
227: முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயினோடு தயிரும்விழுங்கி கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த கலத்தொடுசாய்த்துப்பருகி மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல நீவிம்மிவிம்மியழுகின்ற அப்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 5.
228: கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலைக் கற்றாநிறைமண்டித்தின்ன விரும்பாக்கன்றொன்றுகொண்டு விளங்கனிவீழஎறிந்தபிரானே. சுரும்பார்மென்குழல்கன்னியொருத்திக்குச் சூழ்வலைவைத்துத்திரியும் அரம்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 6.
229: மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னைச் சுற்றும்தொழநின்றசோதி. பொருட்டாயமிலேன்எம்பெருமான். உன்னைப்பெற்றகுற்றமல்லால் மற்றிங்கு அரட்டா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 7.
230: வாளாவாகிலும்காணகில்லார் பிறர்மக்களைமையன்மைசெய்து தோளாலிட்டுஅவரோடுதிளைத்து நீசொல்லப்படாதனசெய்தாய் கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி கெட்டேன். வாழ்வில்லை நந்தன் காளாய். உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 8.
231: தாய்மோர்விற்கப்போவர் தமப்பன்மார்கற்றாநிறைப்பின்புபோவர் நீ ஆய்ப்பாடிஇளங்கன்னிமார்களைநேர்படவேகொண்டுபோதி காய்வார்க்குஎன்றும்உகப்பனவேசெய்து கண்டார்கழறத்திரியும் ஆயா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 9.
232: தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியைச் சோலைத்தடம்கொண்டுபுக்கு முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை மூவேழுசென்றபின்வந்தாய் ஒத்தார்க்குஒத்தனபேசுவர்உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன் அத்தா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 10.
233: கரார்மேனிநிறத்தெம்பிரானைக் கடிகமழ்பூங்குழலாய்ச்சி ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான் அம்மம்தாரேனென்றமாற்றம் பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் பட்டர்பிரான்சொன்னபாடல் ஏராரின்னிசைமாலைவல்லார் இருடீகேசனடியாரே. 11.
இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்)
கலிநிலைத்துறை
234: அஞ்சனவண்ணனை ஆயர்குலக்கொழுந்தினை மஞ்சனமாட்டி மனைகள்தோறும்திரியாமே கஞ்சனைக்காய்ந்த கழலடிநோவக்கன்றின்பின் என்செயப்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. (2) 1.
235: பற்றுமஞ்சள்பூசிப் பாவைமாரொடுபாடியில் சிற்றில்சிதைத்து எங்கும்தீமைசெய்துதிரியாமே கற்றுத்தூளியுடை வேடர்கானிடைக்கன்றின்பின் எற்றுக்குஎன்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. 2.
236: நன்மணிமேகலை நங்கைமாரொடுநாள்தொறும் பொன்மணிமேனி புழுதியாடித்திரியாமே கன்மணிநின்றதிர் கானதரிடைக்கன்றின்பின் என்மணிவண்ணனைப்போக்கினேன் எல்லேபாவமே. 3.
237: வண்ணக்கருங்குழல் மாதர்வந்துஅலர்தூற்றிட பண்ணிப்பலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே கண்ணுக்கினியானைக் கானதரிடைக்கன்றின்பின் எண்ணற்கரியானைப்போக்கினேன் எல்லேபாவமே. 4.
238: அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர்பெண்டிர்க்குஅணுக்கனாய் கொவ்வைக்கனிவாய்கொடுத்துக் கூழைமைசெய்யாமே எவ்வம்சிலையுடை வேடர்கானிடைக்கன்றின்பின் தெய்வத்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. 5.
239: மிடறுமெழுமெழுத்தோட வெண்ணெய்விழுங்கிப்போய் படிறுபலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே கடிறுபலதிரி கானதரிடைக்கன்றின்பின் இடறஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 6.
240: வள்ளிநுடங்கிடை மாதர்வந்துஅலர்தூற்றிட துள்ளிவிளையாடித் தோழரோடுதிரியாமே கள்ளியுணங்கு வெங்கானதரிடைக்கன்றின்பின் புள்ளின்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. 7.
241: பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால் என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான் பொன்னடிநோவப் புலரியேகானில்கன்றின்பின் என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே. 8.
242: குடையும்செருப்பும்கொடாதே தாமோதரனைநான் உடையும்கடியன ஊன்றுவெம்பரற்களுடை கடியவெங்கானிடைக் காலடிநோவக்கன்றின்பின் கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 9.
243: என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனை கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய பொன்திகழ்மாடப் புதுவையர்கோன்பட்டன்சொல் இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே. (2) 10.
மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
244: சீலைக்குதம்பைஒருகாது ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும் காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர் ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர். நானோமற்றாருமில்லை. (2) 1.
245: கன்னிநன்மாமதிள்சூழ்தரு பூம்பொழில்காவிரித்தென்னரங்கம் மன்னியசீர்மதுசூதனா. கேசவா. பாவியேன்வாழ்வுகந்து உன்னைஇளங்கன்றுமேய்க்கச் சிறுகாலேயூட்டிஒருப்படுத்தேன் என்னின்மனம்வலியாள்ஒருபெண்இல்லை என்குட்டனேமுத்தம்தா. 2.
246: காடுகளூடுபோய்க்கன்றுகள்மேய்த்துமறியோடி கார்க்கோடல்பூச் சூடிவரிகின்றதாமோதரா. கற்றுத்தூளிகாண்உன்னுடம்பு பேடைமயிற்சாயல்பின்னைமணாளா. நீராட்டமைத்துவைத்தேன் ஆடிஅமுதுசெய்அப்பனுமுண்டிலன் உன்னோடுஉடனேயுண்பான். 3.
247: கடியார்பொழிலணிவேங்கடவா. கரும்போரேறே. நீயுகக்கும் குடையும்செருப்பும்குழலும்தருவிக்கக் கொள்ளாதேபோனாய்மாலே. கடியவெங்கானிடைக்கன்றின்பின்போன சிறுக்குட்டச்செங்கமல அடியும்வெதும்பி உன்கண்கள்சிவந்தாய்அசைந்திட்டாய்நீஎம்பிரான். 4.
248: பற்றார்நடுங்கமுன்பாஞ்சசன்னியத்தை வாய்வைத்தபோரேறே. எஞ்சிற்றாயர்சிங்கமே. சீதைமணாளா. சிறுக்குட்டச்செங்கண்மாலே. சிற்றாடையும்சிறுப்பத்திரமும்இவை கட்டிலின்மேல்வைத்துப்போய் கற்றாயரோடுநீகன்றுகள்மேய்த்துக் கலந்துடன்வந்தாய்போலும். 5.
249: அஞ்சுடராழிஉன்கையகத்தேந்தும் அழகா. நீபொய்கைபுக்கு நஞ்சுமிழ்நாகத்தினோடுபிணங்கவும் நான்உயிர்வாழ்ந்திருந்தேன் என்செய்யஎன்னைவயிறுமறுக்கினாய்? ஏதுமோரச்சமில்லை கஞ்சன்மனத்துக்குஉகப்பனவேசெய்தாய் காயாம்பூவண்ணம்கொண்டாய். 6.
250: பன்றியும்ஆமையும்மீனமுமாகிய பாற்கடல்வண்ணா. உன்மேல் கன்றினுருவாகிமேய்புலத்தேவந்த கள்ளஅசுரன்தன்னை சென்றுபிடித்துச்சிறுக்கைகளாலே விளங்காயெறிந்தாய்போலும் என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள் அங்கனமாவார்களே. 7.
251: கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா. கோவலர்இந்திரற்கு கட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துடன்உண்டாய்போலும் ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு ஒருபோதும்எனக்கரிது வாட்டமிலாப்புகழ்வாசுதேவா. உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும். 8.
252: திண்ணார்வெண்சங்குடையாய். திருநாள்திருவோணமின்றேழுநாள் முன் பண்ணோர்மொழியாரைக்கூவிமுளையட்டிப் பல்லாண்டுகூறுவித்தேன் கண்ணாலம்செய்யக் கறியும்கலத்தரிசியும்ஆக்கிவைத்தேன் கண்ணா. நீநாளைத்தொட்டுக்கன்றின்பின்போகேல் கோலம்செய்திங்கேயிரு. 9.
253: புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி தன்புத்திரன்கோவிந்தனை கற்றினம்மேய்த்துவரக்கண்டுகந்து அவள்கற்பித்தமாற்றமெல்லாம் செற்றமிலாதவர்வாழ்தரு தென்புதுவைவிட்டுசித்தன்சொல் கற்றிவைபாடவல்லார் கடல்வண்ணன்கழலிணைகாண்பார்களே. (2) 10.
நான்காம் திருமொழி - தழைகளும் (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
254: தழைகளும்தொங்கலும்ததும்பிஎங்கும் தண்ணுமைஎக்கம்மத்தளிதாழ்பீலி குழல்களும்கீதமுமாகிஎங்கும் கோவிந்தன்வருகின்றகூட்டம்கண்டு மழைகொலோவருகின்றதென்றுசொல்லி மங்கைமார்சாலகவாசல்பற்றி நுழைவனர்நிற்பனராகி எங்கும் உள்ளம்விட்டுஊண்மறந்தொழிந்தனரே. (2) 1.
255: வல்லிநுண்இதழன்னஆடைகொண்டு வசையறத்திருவரைவிரித்துடுத்து பல்லிநுண்பற்றாகஉடைவாள்சாத்திப் பணைக்கச்சுந்திப்பலதழைநடுவே முல்லைநல்நறுமலர்வேங்கைமலர் அணிந்து பல்லாயர்குழாம்நடுவே எல்லியம்போதாகப்பிள்ளைவரும் எதிர்நின்றுஅங்கினவளைஇழவேன்மினே. 2.
256: சுரிகையும்தெறிவில்லும்செண்டுகோலும் மேலாடையும்தோழன்மார்கொண்டோ ட ஒருகையால்ஒருவன்தன்தோளையூன்றி ஆநிரையினம்மீளக்குறித்தசங்கம் வருகையில்வாடியபிள்ளைகண்ணன் மஞ்சளும்மேனியும்வடிவும்கண்டாள் அருகேநின்றாள்என்பென்-ஓக்கிக்கண்டாள் அதுகண்டுஇவ்வூர்ஒன்றுபுணர்க்கின்றதே. 3.
257: குன்றெடுத்துஆநிரைகாத்தபிரான் கோவலனாய்க்குழலூதியூதி கன்றுகள்மேய்த்துத்தன்தோழரோடு கலந்துடன்வருவானைத்தெருவில்கண்டு என்றும்இவனையொப்பாரைநங்காய் கண்டறியேன்ஏடி. வந்துகாணாய் ஒன்றும்நில்லாவளைகழன்று துகிலேந்திளமுலையும்என்வசமல்லவே. 4.
258: சுற்றிநின்றுஆயர்தழைகளிடச் சுருள்பங்கிநேத்திரத்தால்அணிந்து பற்றிநின்றுஆயர்கடைத்தலையே பாடவும்ஆடக்கண்டேன் அன்றிப்பின் மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன் மாலிருஞ்சோலைஎம்மாயற்கல்லால் கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணிக் கொடுமின்கள்கொடீராகில்கோழம்பமே. 5.
259: சிந்துரமிலங்கத்தன்திருநெற்றிமேல் திருத்தியகோறம்பும்திருக்குழலும் அந்தரமுழவத்தண்தழைக்காவின்கீழ் வருமாயரோடுஉடன்வளைகோல்வீச அந்தமொன்றில்லாதஆயப்பிள்ளை அறிந்தறிந்துஇவ்வீதிபோதுமாகில் பந்துகொண்டானென்றுவளைத்துவைத்துப் பவளவாய்முறுவலும்காண்போம்தோழீ. 6.
260: சாலப்பல்நிரைப்பின்னேதழைக்காவின்கீழ் தன்திருமேனிநின்றொளிதிகழ நீலநல்நறுங்குஞ்சிநேத்திரத்தாலணிந்து பல்லாயர்குழாம்நடுவே கோலச்செந்தாமரைக்கண்மிளிரக் குழலூதியிசைபாடிக்குனித்து ஆயரோடு ஆலித்துவருகின்றஆயப்பிள்ளை அழகுகண்டுஎன்மகளயர்க்கின்றதே. 7.
261: சிந்துரப்பொடிக்கொண்டுசென்னியப்பித் திருநாமமிட்டங்கோரிலையந்தன்னால் அந்தரமின்றித்தன்னெறிபங்கியை அழகியநேத்திரத்தாலணிந்து இந்திரன்போல்வருமாயப்பிள்ளை எதிர்நின்றங்கினவளைஇழவேலென்ன சந்தியில்நின்றுகண்டீர் நங்கைதன் துகிலொடுசரிவளைகழல்கின்றதே. 8.
262: வலங்காதின்மேல்தோன்றிப்பூவணிந்து மல்லிகைவனமாலைமௌவல்மாலை சிலிங்காரத்தால்குழல்தாழவிட்டுத் தீங்குழல்வாய்மடுத்தூதியூதி அலங்காரத்தால்வருமாய்ப்பிள்ளை அழகுகண்டுஎன்மகள்ஆசைப்பட்டு விலங்கிநில்லாதுஎதிர்நின்றுகண்டீர் வெள்வளைகழன்றுமெய்ம்மெலிகின்றதே. 9.
263: விண்ணின்மீதுஅமரர்கள்விரும்பித்தொழ மிறைத்துஆயர்பாடியில்வீதியூடே கண்ணங்காலிப்பின்னேஎழுந்தருளக்கண்டு இளவாய்க்கன்னிமார்காமுற்ற வண்ணம் வண்டமர்பொழில்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும் பண்ணின்பம்வரப்பாடும்பத்தருள்ளார் பரமானவைகுந்தம்நண்ணுவரே. (2) 10.
ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
264: அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும் தயிர்வாவியும்நெய்யளறும்அடங்கப் பொட்டத்துற்றி மாரிப்பகைபுணர்த்த பொருமாகடல்வண்ணன்பொறுத்தமலை வட்டத்தடங்கண்மடமான்கன்றினை வலைவாய்ப்பற்றிக்கொண்டு குறமகளிர் கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. (2) 1.
265: வழுவொன்றுமிலாச்செய்கை வானவர்கோன் வலிப்பட்டுமுனிந்துவிடுக்கப்பட்டு மழைவந்துஎழுநாள்பெய்துமாத்தடுப்ப மதுசூதன்எடுத்துமறித்தமலை இழவுதரியாததோரீற்றுப்பிடி இளஞ்சீயம்தொடர்ந்துமுடுகுதலும் குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 2.
266: அம்மைத்தடங்கண்மடவாய்ச்சியரும் ஆனாயரும்ஆநிரையும்அலறி எம்மைச்சரணேன்றுகொள்ளென்றிரப்ப இலங்காழிக்கையெந்தைஎடுத்தமலை தம்மைச்சரணென்றதம்பாவையரைப் புனமேய்கின்றமானினம்காண்மினென்று கொம்மைப்புயக்குன்றர்சிலைகுனிக்கும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 3.
267: கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்குக் கவளமெடுத்துக்கொடுப்பானவன்போல் அடிவாயுறக்கையிட்டுஎழப்பறித்திட்டு அமரர்பெருமான்கொண்டுநின்றமலை கடல்வாய்ச்சென்றுமேகம்கவிழ்ந்திறங்கிக் கதுவாய்ப்படநீர்முகந்தேறி எங்கும் குடவாய்ப்படநின்றுமழைபொழியும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 4.
268: வானத்திலுல்லீர். வலியீர்உள்ளீரேல் அறையோ. வந்துவாங்குமினென்பவன்போல் ஏனத்துருவாகியஈசன்எந்தை இடவனெழவாங்கியெடுத்தமலை கானக்களியானைதன்கொம்பிழந்து கதுவாய்மதம்சோரத்தன்கையெடுத்து கூனல்பிறைவேண்டிஅண்ணாந்துநிற்கும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 5.
269: செப்பாடுடையதிருமாலவன் தன் செந்தாமரைக்கைவிரலைந்தினையும் கப்பாகமடுத்துமணிநெடுந்தோள் காம்பாகக்கொடுத்துக்கவித்தமலை எப்பாடும்பரந்திழிதெள்ளருவி இலங்குமணிமுத்துவடம்பிறழ குப்பாயமெனநின்றுகாட்சிதரும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 6.
270: படங்கள்பலவுமுடைப்பாம்பரையன் படர்பூமியைத்தாங்கிக்கிடப்பவன்போல் தடங்கைவிரலைந்தும்மலரவைத்துத் தாமோதரன்தாங்குதடவரைதான் அடங்கச்சென்றுஇலங்கையையீடழித்த அனுமன்புகழ்பாடித்தம்குட்டன்களை குடங்கைக்கொண்டுமந்திகள்கண்வளர்த்தும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 7.
271: சலமாமுகில்பல்கணப்போர்க்களத்துச் சரமாரிபொழிந்துஎங்கும்பூசலிட்டு நலிவானுறக்கேடகம்கோப்பவன்போல் நாராயணன்முன்முகம்காத்தமலை இலைவேய்குரம்பைத்தவமாமுனிவர் இருந்தார்நடுவேசென்றுஅணார்சொறிய கொலைவாய்ச்சினவேங்கைகள்நின்றுறங்கும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 8.
272: வன்பேய்முலையுண்டதோர்வாயுடையன் வன்தூணெனநின்றதோர்வன்பரத்தை தன்பேரிட்டுக்கொண்டுதரணிதன்னில் தாமோதரன்தாங்குதடவரைதான் முன்பேவழிகாட்டமுசுக்கணங்கள் முதுகில்பெய்துதம்முடைக்குட்டன்களை கொம்பேற்றியிருந்துகுதிபயிற்றும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 9.
273: கொடியேறுசெந்தாமரைக்கைவிரல்கள் கோலமும்அழிந்திலவாடிற்றில வடிவேறுதிருவுகிர்நொந்துமில மணிவண்ணன்மலையுமோர்சம்பிரதம் முடியேறியமாமுகிற்பல்கணங்கள் முன்னெற்றிநரைத்தனபோல எங்கும் குடியேறியிருந்துமழைபொழியும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 10.
274: அரவில்பள்ளிகொண்டுஅரவம்துரந்திட்டு அரவப்பகையூர்தியவனுடைய குரவிற்கொடிமுல்லைகள்நின்றுறங்கும் கோவர்த்தனமென்னும்கொற்றக்குடைமேல் திருவிற்பொலிமறைவாணர்புத்தூர்த் திகழ்பட்டர்பிரான்சொன்னமாலைபத்தும் பரவுமனநன்குடைப்பத்தருள்ளார் பரமானவைகுந்தம்நண்ணுவரே. (2) 11.
ஆறாம் திருமொழி - நாவலம் (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு)
275: நாவலம்பெரியதீவினில்வாழும் நங்கைமீர்காள். இதுஓரற்புதம்கேளீர் தூவலம்புரியுடையதிருமால் தூயவாயில்குழலோசைவழியே கோவலர்சிறுமியர்இளங்கொங்கை குதுகலிப்பஉடலுளவிழ்ந்து எங்கும் காவலும்கடந்துகயிறுமாலையாகி வந்துகவிழ்ந்துநின்றனரே. (2) 1.
276: இடவணரைஇடத்தோளொடுசாய்த்து இருகைகூடப்புருவம்நெரிந்தேற குடவயிறுபடவாய்கடைகூடக் கோவிந்தன்குழல்கொடுஊதினபோது மடமயில்களொடுமான்பிணைபோலே மங்கைமார்கள்மலர்க்கூந்தல்அவிழ உடைநெகிழஓர்கையால்துகில்பற்றி ஒல்கியோடரிக்கணோடநின்றனரே. 2.
277: வானிலவரசுவைகுந்தக்குட்டன் வாசுதேவன்மதுரைமன்னன் நந்த கோனிளவரசுகோவலர்குட்டன் கோவிந்தன்குழல்கொடுஊதினபோது வானிளம்படியர்வந்துவந்தீண்டி மனமுருகிமலர்க்கண்கள்பனிப்ப தேனளவுசெறிகூந்தலவிழச் சென்னிவேர்ப்பச்செவிசேர்த்துநின்றனரே. 3.
278: தேனுகன்பிலம்பன்காளியனென்னும் தீப்பப்பூடுகள்அடங்கஉழக்கி கானகம்படிஉலாவியுலாவிக் கருஞ்சிறுக்கன்குழலூதினபோது மேனகையொடுதிலோத்தமைஅரம்பை உருப்பசியரவர்வெள்கிமயங்கி வானகம்படியில்வாய்திறப்பின்றி ஆடல்பாடலவைமாறினர்தாமே. 4.
279: முன்நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தைமுடிப்பான், மூவுலகில் மன்னரஞ்சும் மதுசூதனன்வாயில் குழலினோசை செவியைப்பற்றிவாங்க நன்னரம்புடையதும்புருவோடு நாரதனும்தம்தம்வீணைமறந்து கின்னரமிதுனங்களும் தம்தம் கின்னரம்தொடுகிலோமென்றனரே. 5.
280: செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன் தேவகிசிறுவன்தேவர்கள்சிங்கம் நம்பரமன்இந்நாள்குழலூதக் கேட்டவர்கள் இடருற்றனகேளீர் அம்பரம்திரியும்காந்தப்பரெல்லாம் அமுதகீதவலையால்சுருக்குண்டு நம்பரமன்றென்றுநாணிமயங்கி நைந்துசோர்ந்துகைம்மறித்துநின்றனரே. 6.
281: புவியுள்நான்கண்டதோரற்புதம்கேளீர் பூணிமேய்க்கும்இளங்கோவலர்கூட்டத்து அவையுள் நாகத்தணையான்குழலூத அமரலோகத்தளவும்சென்றிசைப்ப அவியுணாமறந்துவானவரெல்லாம் ஆயர்பாடிநிறையப்புகுந்துஈண்டி செவியுணாவின்சுவைகொண்டுமகிழ்ந்து கோவிந்தனைத்தொடர்ந்துஎன்றும்விடாரே. 7.
282: சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச் செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிக்க குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக் கோவிந்தன்குழல்கொடுஊதினபோது பறவையின்கணங்கள்கூடுதுறந்து வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப கறவையின்கணங்கள்கால்பரப்பீட்டுக் கவிழ்ந்திறங்கிச்செவியாட்டகில்லாவே. 8.
283: திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன் செங்கமலமலர்சூழ்வண்டினம்போலே சுருண்டிருண்டகுழல்தாழ்ந்தமுகத்தான் ஊதுகின்றகுழலோசைவழியே மருண்டுமான்கணங்கள்மேய்கைமறந்து மேய்ந்தபுல்லும்கடைவாய்வழிசோர இரண்டுபாடும்துலங்காப்புடைபெயரா எழுதுசித்திரங்கள்போலநின்றனவே. 9.
284: கருங்கண்தோகைமயிற்பீலியணிந்து கட்டிநன்குடுத்தபீதகவாடை அருங்கலவுருவினாயர்பெருமான் அவனொருவன்குழலூதினபோது மரங்கள்நின்றுமதுதாரைகள்பாயும் மலர்கள்வீழும்வளர்கொம்புகள்தாழும் இரங்கும்கூம்பும்திருமால்நின்றநின்ற பக்கம்நோக்கி அவைசெய்யும்குணமே. 10.
285: குழலிருண்டுசுருண்டேறியகுஞ்சிக் கோவிந்தனுடையகோமளவாயில் குழல்முழைஞ்சுகளினூடுகுமிழ்த்துக் கொழித்திழிந்தஅமுதப்புனல்தன்னை குழல்முழவம்விளம்பும்புதுவைக்கோன் விட்டுசித்தன்விரித்ததமிழ்வல்லார் குழலைவென்றகுளிர்வாயினராகிச் சாதுகோட்டியுள்கொள்ளப்படுவாரே. (2) 11.
ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
286: ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய் செய்யநூலின்சிற்றாடை செப்பனடுக்கவும்வல்லளல்லள் கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள் பையரவணைப்பள்ளியானோடு கைவைத்துஇவள்வருமே. (2) 1.
287: வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றில சாய்விலாதகுறுந்தலைச் சிலபிள்ளைகளோடிணங்கி தீயிணக்கிணங்காடிவந்து இவள்தன்னன்னசெம்மைசொல்லி மாயன்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. 2.
288: பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில் சங்குசக்கரம்தண்டுவாள் வில்லுமல்லதுஇழைக்கலுறால் கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை சங்கையாகிஎன்னுள்ளம் நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே. 3.
289: ஏழைபேதைஓர்பாலகன்வந்து என்பெண்மகளையெள்கி தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த சூழ்ச்சியையார்க்குரைக்கேன்? ஆழியானென்னுமாழமோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி மூழையுப்பறியாததென்னும் மூதுரையுமிலளே. 4.
290: நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள் சூடி நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள் கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடுஇவளை பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே. 5.
291: பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும் இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள் பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும் வட்டவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 6.
292: பேசவும் தரியாதபெண்மையின் பேதையேன்பேதைஇவள் கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர் கோல்கழிந்தான்மூழையாய் கேசவாவென்றும்கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள் வாசவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 7.
293: காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும் கூறையுடுக்கும்அயர்க்கும் தங்கொவ்வைச்செவ்வாய்திருத்தும் தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும் மாறில்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. 8.
294: கைத்தலத்துள்ளமாடழியக் கண்ணாலங்கள்செய்து இவளை வைத்துவைத்துக்கொண்டுஎன்னவாணியம்? நம்மைவடுப்படுத்தும் செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே. 9.
295: பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து பேணிநம்மில்லத்துள்ளே இருத்துவானெண்ணிநாமிருக்க இவளும்ஒன்றெண்ணுகின்றாள் மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை படுவதன்முன் ஒருப்படுத்திடுமின்இவளை உலகளந்தானிடைக்கே. 10.
296: ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு இவள் மாலதாகிமகிழ்ந்தனளென்று தாயுரைசெய்ததனை கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன மாலைபத்தும்வல்லவர்கட்கு இல்லைவருதுயரே. (2) 11.
எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
297: நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேல்பனிசோர அல்லியும்தாதும்உதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்ததாலோ இல்லம்வெறியோடிற்றாலோ என்மகளைஎங்கும்காணேன் மல்லரையட்டவன்பின்போய் மதுரைப்புறம்புக்காள்கொலோ? (2) 1.
298: ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக்கோபாலர்தங்கள் கன்றுகால்மாறுமாபோலே கன்னியிருந்தாளைக்கொண்டு நன்றும்கிறிசெய்துபோனான் நாராயணன்செய்ததீமை என்றும்எமர்கள்குடிக்கு ஓரேச்சுக்கொலாயிடுங்கொலோ? 2.
299: குமரிமணம்செய்துகொண்டு கோலம்செய்துஇல்லத்திருத்தி தமரும்பிறரும்அறியத் தாமோதரற்கென்றுசாற்றி அமரர்பதியுடைத்தேவி அரசாணியை வழிபட்டு துமிலமெழப்பறைகொட்டித் தோரணம்நாட்டிடுங்கொலோ? 3.
300: ஒருமகள்தன்னையுடையேன் உலகம்நிறைந்தபுகழால் திருமகள்போலவளர்த்தேன் செங்கண்மால்தான்கொண்டுபோனான் பெருமகளாய்க்குடிவாழ்ந்து பெரும்பிள்ளைபெற்றஅசோதை மருமகளைக்கண்டுகந்து மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ? 4.
301: தம்மாமன்நந்தகோபாலன் தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னை செம்மாந்திரேயென்றுசொல்லிச் செழுங்கயற்கண்ணும்செவ்வாயும் கொம்மைமுலையும்இடையும் கொழும்பணைத்தோள்களும்கண்டிட்டு இம்மகளைப்பெற்றதாயர் இனித்தரியாரென்னுங்கொலோ? 5.
302: வேடர்மறக்குலம்போலே வேண்டிற்றுச்செய்துஎன்மகளை கூடியகூட்டமேயாகக் கொண்டுகுடிவாழுங்கொலோ? நாடும்நகரும்அறிய நல்லதோர்கண்ணாலம்செய்து சாடிறப்பாய்ந்தபெருமான் தக்கவாகைப்பற்றுங்கொலோ? 6.
303: அண்டத்தமரர்பெருமான் ஆழியான்இன்றுஎன்மகளை பண்டப்பழிப்புக்கள்சொல்லிப் பரிசறஆண்டிடுங்கொலோ? கொண்டுகுடிவாழ்க்கைவாழ்ந்து கோவலப்பட்டம்கவித்து பண்டைமணாட்டிமார்முன்னே பாதுகாவல்வைக்குங்கொலோ? 7.
304: குடியில்பிறந்தவர்செய்யும் குணமொன்றும்செய்திலன்அந்தோ. நடையொன்றும்செய்திலன்நங்காய். நந்தகோபன்மகன்கண்ணன் இடையிருபாலும்வணங்க இளைத்திளைத்துஎன்மகள்ஏங்கி கடைகயிறேபற்றிவாங்கிக் கைதழும்பேறிடுங்கொலோ? 8.
305: வெண்ணிறத்தோய்தயிர்தன்னை வெள்வரைப்பின்முன்எழுந்து கண்ணுறங்காதேயிருந்து கடையவும்தான்வல்லள்கொலோ? ஒண்ணிறத்தாமரைச்செங்கண் உலகளந்தான்என்மகளை பண்ணறையாப்பணிகொண்டு பரிசறஆண்டிடுங்கொலோ? 9.
306: மாயவன்பின்வழிசென்று வழியிடைமாற்றங்கள்கேட்டு ஆயர்கள்சேரியிலும்புக்கு அங்குத்தைமாற்றமுமெல்லாம் தாயவள்சொல்லியசொல்லைத் தண்புதுவைப்பட்டன்சொன்ன தூயதமிழ்ப்பத்தும்வல்லார் தூமணிவண்ணனுக்காளரே. (2) 10.
ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்)
கலித்தாழிசை
307: என்னாதன்தேவிக்கு அன்றுஇன்பப்பூஈயாதாள் தன் நாதன்காணவே தண்பூமரத்தினை வன்னாதப்புள்ளால் வலியப்பறித்திட்ட என்னாதன்வன்மையைப்பாடிப்பற எம்பிரான்வன்மையைப்பாடிப்பற. (2) 1.
308: என்வில்வலிகண்டு போவென்றுஎதிர்வந்தான் தன் வில்லினோடும் தவத்தைஎதிர்வாங்கி முன்வில்வலித்து முதுபெண்ணுயிருண்டான் தன் வில்லின்வன்மையைப்பாடிப்பற தாசரதிதன்மையைப்படிப்பற. 2.
309: உருப்பிணிநங்கையைத் தேரேற்றிக்கொண்டு விருப்புற்றங்கேக விரைந்துஎதிர்வந்து செருக்குற்றான் வீரம்சிதைய தலையைச் சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற தேவகிசிங்கத்தைப்பாடிப்பற. 3.
310: மாற்றுத்தாய்சென்று வனம்போகேஎன்றிட ஈற்றுத்தாய்பின்தொடர்ந்து எம்பிரான். என்றுஅழ கூற்றுத்தாய்சொல்லக் கொடியவனம்போன சீற்றமிலாதானைப்பாடிப்பற சீதைமணாளனைப்பாடிப்பற. 4.
311: பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த அஞ்சனவண்ணனைப்பாடிப்பற அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற. 5.
312: முடியொன்றிமூவுலகங்களும் ஆண்டு உன் அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த படியில்குணத்துப் பரதநம்பிக்கு அன்று அடிநிலையீந்தானைப்பாடிப்பற அயோத்தியர்கோமானைப்பாடிப்பற. 6.
313: காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு அவன் நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன் தோள்வலிவீரமேபாடிப்பற தூமணிவண்ணனைப்பாடிப்பற. 7.
314: தார்க்குஇளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொல்கொண்டுபோகி நுடங்கிடைச் சூர்ப்பணகாவைச்செவியொடுமூக்கு அவள் ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற அயோத்திக்கரசனைப்பாடிப்பற. 8.
315: மாயச்சகடமுதைத்து மருதிறுத்து ஆயர்களோடுபோய் ஆநிரைகாத்து அணி வேயின்குழலூதி வித்தகனாய்நின்ற ஆயர்களேற்றினைப்பாடிப்பற ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற. 9.
316: காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும் நேராஅவன்தம்பிக்கே நீளரசீந்த ஆராவமுதனைப்பாடிப்பற அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற. 10.
தரவு கொச்சகக்கலிப்பா
317: நந்தன்மதலையைக் காகுத்தனைநவின்று உந்திபறந்த ஒளியிழையார்கள்சொல் செந்தமிழ்த்தென்புதுவை விட்டுசித்தன்சொல் ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு அல்லலில்லையே. (2) 11.
பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்)
கலிவிருத்தம்
318: நெறிந்தகருங்குழல்மடவாய். நின்னடியேன்விண்ணப்பம் செறிந்தமணிமுடிச்சனகன் சிலையிறுத்துநினைக்கொணர்ந்தது அறிந்து அரசுகளைகட்ட அருந்தவத்தோன்இடைவிலங்க செறிந்தசிலைகொடுதவத்தைச் சிதைத்ததும்ஓரடையாளம். (2) 1.
319: அல்லியம்பூமலர்க்கோதாய். அடிபணிந்தேன்விண்ணப்பம் சொல்லுகேன்கேட்டருளாய் துணைமலர்க்கண்மடமானே. எல்லியம்போதினிதிருத்தல் இருந்ததோரிடவகையில் மல்லிகைமாமாலைகொண்டு அங்குஆர்த்ததும்ஓரடையாளம். 2.
320: கலக்கியமாமனத்தனளாய்க் கைகேசிவரம்வேண்ட மலக்கியமாமனத்தனனாய் மன்னவனுமறாதொழிய குலக்குமரா. காடுறையப்போ என்றுவிடைகொடுப்ப இலக்குமணன்தன்னொடும் அங்குஏகியதுஓரடையாளம். 3.
321: வாரணிந்தமுலைமடவாய். வைதேவீ. விண்ணப்பம் தேரணிந்தஅயோத்தியர்கோன் பெருந்தேவீ. கேட்டருளாய் கூரணிந்தவேல்வலவன் குகனோடும்கங்கைதன்னில் சீரணிந்ததோழமை கொண்டதும்ஓரடையாளம். 4.
322: மானமருமெல்நோக்கி. வைதேவீ. விண்ணப்பம் கானமரும்கல்லதர்போய்க் காடுறைந்தகாலத்து தேனமரும்பொழிற்சாரல் சித்திரகூடத்துஇருப்ப பால்மொழியாய். பரதநம்பி பணிந்ததும்ஓரடையாளம். 5.
323: சித்திரகூடத்துஇருப்பச் சிறுகாக்கைமுலைதீண்ட அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும்திரிந்தோடி வித்தகனே. இராமாவோ. நின்னபயம்என்றுஅழைப்ப அத்திரமேஅதன்கண்ணை அறுத்ததும்ஓரடையாளம். 6.
324: மின்னொத்த_ண்ணிடையாய். மெய்யடியேன்விண்ணப்பம் பொன்னொத்தமானொன்று புகுந்துஇனிதுவிளையாட நின்னன்பின்வழிநின்று சிலைபிடித்துஎம்பிரான்ஏக பின்னேஅங்குஇலக்குமணன் பிரிந்ததும்ஓரடையாளம். 7.
325: மைத்தகுமாமலர்க்குழலாய். வைதேவீ. விண்ணப்பம் ஒத்தபுகழ்வானரக்கோன் உடனிருந்துநினைத்தேட அத்தகுசீரயோத்தியர்கோன் அடையாளமிவைமொழிந்தான் இத்தகையால்அடையாளம் ஈதுஅவன்கைமோதிரமே. 8.
326: திக்குநிறைபுகழாளன் தீவேள்விச்சென்றநாள் மிக்கபெருஞ்சபைநடுவே வில்லிறுத்தான்மோதிரம்கண்டு ஒக்குமால்அடையாளம் அனுமான். என்றுஉச்சிமேல் வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள்சீதையுமே. (2) 9.
327: வாராரும்முலைமடவாள் வைதேவிதனைக்கண்டு சீராரும்திறலனுமன் தெரிந்துரைத்தஅடையாளம் பாராரும்புகழ்ப்புதுவைப் பட்டர்பிரான்பாடல்வல்லார் ஏராரும்வைகுந்தத்து இமையவரோடுஇருப்பாரே. (2) 10.
நான்காம்பத்து
முதல் திருமொழி - கதிராயிரம்
(ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம்
328:
கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்தநீள்முடியன் எதிரில்பெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல் அதிரும்கழற்பொருதோள் இரணியனாகம்பிளந்துஅரியாய் உதிரமளைந்தகையோடிருந்தானை உள்ளவாகண்டாருளர். (2) 1.
329: நாந்தகம்சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம் ஏந்துபெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல் காந்தள்முகிழ்விரல்சீதைக்காகிக் கடுஞ்சிலைசென்றிறுக்க வேந்தர்தலைவஞ்சனகராசன்தன் வேள்வியில்கண்டாருளர். 2.
330: கொலையானைக்கொம்புபறித்துக் கூடலர்சேனைபொருதழிய சிலையால்மராமரமெய்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல் தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று தடவரைகொண்டடைப்ப அலையார்கடற்கரைவீற்றிருந்தானை அங்குத்தைக்கண்டாருளர். 3.
331: தோயம்பரந்தநடுவுசூழலில் தொல்லைவடிவுகொண்ட மாயக்குழவியதனைநாடுறில் வம்மின்சுவடுரைக்கேன் ஆயர்மடமகள்பின்னைக்காகி அடல்விடையேழினையும் வீயப்பொருதுவியர்த்துநின்றானை மெய்ம்மையேகண்டாருளர். 4.
332: நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் முறையால் சீரேறுவாசகஞ்செய்யநின்ற திருமாலைநாடுதிரேல் வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு தேரேற்றி சேனைநடுவுபோர்செய்யச் சிக்கெனக்கண்டாருளர். 5.
333: பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்சப் புணர்முலைவாய்மடுக்க வல்லானை மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல் பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர். 6.
334: வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன் உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன் வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித் தேர்மிசைமுன்புநின்று கள்ளப்படைத்துணையாகிப் பாரதம்கைசெய்யக்கண்டாருளர். 7.
335: நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற அரசர்கள்தம்முகப்பே நாழிகைபோகப்படைபொருதவன் தேவகிதன்சிறுவன் ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்பச் சயத்திரதன்தலையை பாழிலுருளப்படைபொருதவன் பக்கமேகண்டாருளர். 8.
336: மண்ணும்மலையும்மறிகடல்களும் மற்றும்யாவுமெல்லாம் திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல் எண்ணற்கரியதோரேனமாகி இருநிலம்புக்கிடந்து வண்ணக்கருங்குழல்மாதரோடு மணந்தானைக்கண்டாருளர். 9.
337: கரியமுகில்புரைமேனிமாயனைக் கண்டசுவடுரைத்து புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி விளைகழனிப்புதுவை திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும் பரவுமனமுடைப்பத்தருள்ளார் பரமனடிசேர்வர்களே. (2) 10.
இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு)
கலிநிலைத்துறை
338: அலம்பாவெருட்டாக்கொன்று திரியும்அரக்கரை குலம்பாழ்படுத்துக் குலவிளக்காய்நின்றகோன்மலை சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்களாடும்சீர் சிலம்பாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. (2) 1.
339: வல்லாளன்தோளும் வாளரக்கன்முடியும் தங்கை பொல்லாதமூக்கும் போக்குவித்தான்பொருந்தும்மலை எல்லாவிடத்திலும் எங்கும்பரந்துபல்லாண்டொலி செல்லாநிற்கும்சீர்த் தென்திருமாலிருஞ்சோலையே. 2.
340: தக்கார்மிக்கார்களைச் சஞ்சலம்செய்யும்சலவரை தெக்காநெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை எக்காலமும்சென்று சேவித்திருக்கும்அடியரை அக்கானெறியைமாற்றும் தண்திருமாலிருஞ்சோலையே. 3.
341: ஆனாயர்கூடி அமைத்தவிழவை அமரர்தம் கோனார்க்கொழியக் கோவர்த்தனத்துச்செய்தான்மலை வானாட்டில்நின்று மாமலர்க்கற்பகத்தொத்திழி தேனாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. 4.
342: ஒருவாரணம் பணிகொண்டவன்பொய்கையில் கஞ்சன்தன் ஒருவாரணம் உயிருண்டவன்சென்றுறையும்மலை கருவாரணம் தன்பிடிதுறந்தோட கடல்வண்ணன் திருவாணைகூறத்திரியும் தண்திருமாலிருஞ்சோலையே. 5.
343: ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை ஆவத்தனமென்று அமரர்களும்நன்முனிவரும் சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. 6.
344: மன்னர்மறுக மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல் முன்னங்குநின்று மோழையெழுவித்தவன்மலை கொன்னவில்கூர்வேற்கோன் நெடுமாறன்தென்கூடற்கோன் தென்னன்கொண்டாடும் தென்திருமாலிருஞ்சோலையே. 7.
345: குறுகாதமன்னரைக் கூடுகலக்கி வெங்கானிடைச் சிறுகால்நெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை அறுகால்வரிவண்டுகள் ஆயிரநாமம்சொல்லி சிறுகாலைப்பாடும் தென்திருமாலிருஞ்சோலையே. 8.
346: சிந்தப்புடைத்துச் செங்குருதிகொண்டு பூதங்கள் அந்திப்பலிகொடுத்து ஆவத்தனம்செய்அப்பன்மலை இந்திரகோபங்கள் எம்பெருமான்கனிவாயொப்பான் சிந்தும்புறவில் தென்திருமாலிருஞ்சோலையே. 9.
347: எட்டுத்திசையும் எண்ணிறந்தபெருந்தேவிமார் விட்டுவிளங்க வீற்றிருந்தவிமலன்மலை பட்டிப்பிடிகள் பகடுறிஞ்சிச்சென்று மாலைவாய்த் தெட்டித்திளைக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. 10.
348: மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை கருதியுறைகின்ற கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை விரதம்கொண்டேத்தும் வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல் கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பார்களே. (2) 11.
மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை (திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு)
கலிநிலைத்துறை
349: உருப்பிணிநங்கைதன்னைமீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற உருப்பனையோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்டஉறைப்பன்மலை பொருப்பிடைக்கொன்றைநின்று முறியாழியும்காசும்கொண்டு விருப்பொடுபொன்வழங்கும் வியன்மாலிருஞ்சோலையதே. (2) 1.
350: கஞ்சனும்காளியனும் களிறும்மருதும்எருதும் வஞ்சனையில்மடிய வளர்ந்தமணிவண்ணன்மலை நஞ்சுமிழ்நாகமெழுந்தணவி நளிர்மாமதியை செஞ்சுடர்நாவளைக்கும் திருமாலிருஞ்சோலையதே. 2.
351: மன்னுநரகன்தன்னைச் சூழ்போகிவளைத்தெறிந்து கன்னிமகளிர்தம்மைக் கவர்ந்தகடல்வண்ணன்மலை புன்னைசெருந்தியொடு புனவேங்கையும்கோங்கும்நின்று பொன்னரிமாலைகள்சூழ் பொழில்மாலிருஞ்சோலையதே. 3.
352: மாவலிதன்னுடைய மகன்வாணன்மகளிருந்த காவலைக்கட்டழித்த தனிக்காளைகருதும்மலை கோவலர்கோவிந்தனைக் குறமாதர்கள் பண்குறிஞ்சிப் பாவொலிபாடிநடம்பயில் மாலிருஞ்சோலையதே. 4.
353: பலபலநாழம்சொல்லிப்பழித்த சிசுபாலன்தன்னை அலவலைமைதவிர்த்த அழகன்அலங்காரன்மலை குலமலைகோலமலை குளிர்மாமலைகொற்றமலை நிலமலைநீண்டமலை திருமாலிருஞ்சோலையதே. (2) 5.
354: பாண்டவர்தம்முடைய பாஞ்சாலிமறுக்கமெல்லாம் ஆண்டுஅங்குநூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை பாண்தகுவண்டினங்கள் பண்கள்பாடிமதுப்பருக தோண்டலுடையமலை தொல்லைமாலிருஞ்சோலையதே. 6.
355: கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து அரக்கர்தங்கள் இனம்கழுவேற்றுவித்த எழில்தோள்எம்மிராமன்மலை கனம்கொழிதெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல்ஞாலமெல்லாம் இனம்குழுவாடும்மலை எழில்மாலிருஞ்சோலையதே. 7.
356: எரிசிதறும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய வரிசிலைவாயில்பெய்து வாய்க்கோட்டம்தவிர்த்துகந்த அரையனமரும்மலை அமரரொடுகோனும்சென்று திரிசுடர்சூழும்மலை திருமாலிருஞ்சோலையதே. 8.
357: கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்து மீட்டுமதுண்டுமிழ்ந்து விளையாடுவிமலன்மலை ஈட்டியபல்பொருள்கள் எம்பிரானுக்குஅடியுறையென்று ஓட்டரும்தண்சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே. 9.
358: ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம்மின்னிலக ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன்ஆளும்மலை ஆயிரமாறுகளும் சுனைகள்பலவாயிரமும் ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே. (2) 10.
359: மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையை நாலிருமூர்த்திதன்னை நால்வேதக்கடலமுதை மேலிருங்கற்பகத்தை வேதாந்தவிழுப்பொருளில் மேலிருந்தவிளக்கை விட்டுசித்தன்விரித்தனவே. (2) 11.
நான்காம் திருமொழி - நாவகாரியம் (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
360: நாவகாரியம்சொல்லிலாதவர் நாள்தொறும்விருந்தோம்புவார் தேவகாரியம்செய்து வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர் மூவர்காரியமும்திருத்தும் முதல்வனைச்சிந்தியாத அப் பாவகாரிகளைப்படைத்தவன் எங்ஙனம்படைத்தான்கொலோ. (2) 1.
361: குற்றமின்றிக்குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனுகூலராய் செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் துற்றியேழுலகுண்ட தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர் பெற்றதாயர்வயிற்றினைப் பெருநோய்செய்வான்பிறந்தார்களே. 2.
362: வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி நிழலெழும் திண்ணைசூழ் திருக்கோட்டியூர்த் திருமாலவன்திருநாமங்கள் எண்ணக்கண்டவிரல்களால் இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய் உண்ணக்கண்டதம்ஊத்தைவாய்க்குக் கவளமுந்துகின்றார்களே. 3.
363: உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடவன்னங்கள் நிரைகணம்பரந்தேறும் செங்கமலவயல்திருக்கோட்டியூர் நரகநாசனைநாவிற்கொண்டழையாத மானிடசாதியர் பருகுநீரும்உடுக்குங்கூறையும் பாவம்செய்தனதாங்கொலோ. 4.
364: ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு தூமலர்சாடிப்போய் தீமைசெய்துஇளவாளைகள் விளையாடுநீர்த்திருக்கோட்டியூர் நேமிசேர்தடங்கையினானை நினைப்பிலாவலிநெஞ்சுடை பூமிபாரங்களுண்ணும்சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே. 5.
365: பூதமைந்தொடுவேள்வியைந்து புலன்களைந்துபொறிகளால் ஏதமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் நாதனைநரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய பாததூளிபடுதலால் இவ்வுலகம்பாக்கியம்செய்ததே. 6.
366: குருந்தமொன்றொசித்தானொடும்சென்று கூடியாடிவிழாச்செய்து திருந்துநான்மறையோர் இராப்பகல்ஏத்திவாழ்திருக்கோட்டியூர் கருந்தடமுகில்வண்ணனைக் கடைக்கொண்டுகைதொழும்பத்தர்கள் இருந்தவூரிலிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய்தார்கொலோ. 7.
367: நளிர்ந்தசீலன்நயாசலன் அபிமனதுங்கனை நாள்தொறும் தெளிந்தசெல்வனைச்சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர் குளிர்ந்துறைகின்றகோவிந்தன் குணம்பாடுவாருள்ளநாட்டினுள் விளைந்ததானியமும் இராக்கதர்மீதுகொள்ளகிலார்களே. 8.
368: கொம்பினார்பொழில்வாய் குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர் செம்பொனார்மதிள்சூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர் நம்பனைநரசிங்கனை நவின்றேத்துவார்களைக்கண்டக்கால் எம்பிரான்தனசின்னங்கள் இவரிவரென்றுஆசைகள்தீர்வனே. 9.
369: காசின்வாய்க்கரம்விற்கிலும் கரவாதுமாற்றிலிசோறிட்டு தேசவார்த்தைபடைக்கும் வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் கேசவா. புருடோ த்தமா. கிளர்சோதியாய். குறளா. என்று பேசுவார்அடியார்கள் எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே. 10.
370: சீதநீர்புடைசூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர் ஆதியானடியாரையும் அடிமையின்றித்திரிவாரையும் கோதில்பட்டர்பிரான் குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல் ஏதமின்றிஉரைப்பவர்கள் இருடீகேசனுக்காளரே. (2) 11.
ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
371: ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி வாசவார்குழலாளென்றுமயங்கி மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே கேசவா. புருடோ த்தமா. என்றும் கேழலாகியகேடிலீ. என்றும் பேசுவாரவர்எய்தும்பெருமை பேசுவான்புகில்நம்பரமன்றே. (2) 1.
372: சீயினால்செறிந்தேறியபுண்மேல் செற்றலேறிக்குழம்பிருந்து எங்கும் ஈயினால்அரிப்புண்டுமயங்கி எல்லைவாய்ச்சென்றுசேர்வதன்முன்னம் வாயினால்நமோநாரணாவென்று மத்தகத்திடைக்கைகளைக்கூப்பி போயினால்பின்னைஇத்திசைக்குஎன்றும் பிணைக்கொடுக்கிலும்போகவொட்டாரே. 2.
373: சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில் சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து ஆர்வினவிலும்வாய்திறவாதே அந்தகாலம்அடைவதன்முன்னம் மார்வமென்பதோர்கோயிலமைத்து மாதவனென்னும்தெய்வத்தைநட்டி ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு அரவதண்டத்தில்உய்யலுமாமே. 3.
374: மேலெழுந்ததோர்வாயுக்கிளர்ந்து மேல்மிடற்றினைஉள்ளெழவாங்கி காலுங்கையும்விதிர்விதிர்த்தேறிக் கண்ணுறக்கமதாவதன்முன்னம் மூலமாகியஒற்றையெழுத்தை மூன்றுமாத்திரைஉள்ளெழவாங்கி வேலைவண்ணனைமேவுதிராகில் விண்ணகத்தினில்மேவலுமாமே. 4.
375: மடிவழிவந்துநீர்புலன்சோர வாயிலட்டியகஞ்சியும்மீண்டே கடைவழிவாரக்கண்டமடைப்பக் கண்ணுறக்கமதாவதன்முன்னம் தொடைவழிஉம்மைநாய்கள்கவரா சூலத்தால்உம்மைப்பாய்வதும்செய்யார் இடைவழியில்நீர்கூறையும்இழவீர் இருடீகேசனென்றேத்தவல்லீரே. 5.
376: அங்கம்விட்டவையைந்துமகற்றி ஆவிமூக்கினில்சோதித்தபின்னை சங்கம்விட்டவர்கையைமறித்துப் பையவேதலைசாய்ப்பதன்முன்னம் வங்கம்விட்டுலவும்கடற்பள்ளிமாயனை மதுசூதனனைமார்பில் தங்கவிட்டுவைத்து ஆவதோர்கருமம் சாதிப்பார்க்குஎன்றும்சாதிக்கலாமே. 6.
377: தென்னவன்தமர்செப்பமிலாதார் சேவதக்குவார்போலப்புகுந்து பின்னும்வன்கயிற்றால்பிணித்தெற்றிப் பின்முன்னாகஇழுப்பதன்முன்னம் இன்னவன்இனையானென்றுசொல்லி எண்ணிஉள்ளத்திருளறநோக்கி மன்னவன்மதுசூதனென்பார் வானகத்துமன்றாடிகள்தாமே. 7.
378: கூடிக்கூடிஉற்றார்கள்இருந்து குற்றம்நிற்கநற்றங்கள்பறைந்து பாடிப்பாடிஓர்பாடையிலிட்டு நரிப்படைக்குஒருபாகுடம்போலே கோடிமூடியெடுப்பதன்முன்னம் கௌத்துவமுடைக்கோவிந்தனோடு கூடியாடியஉள்ளத்தரானால் குறிப்பிடம்கடந்துஉய்யலுமாமே. 8.
379: வாயொருபக்கம்வாங்கிவலிப்ப வார்ந்தநீர்க்குழிக்கண்கள்மிழற்ற தாய்ஒருபக்கம்தந்தைஒருபக்கம் தாரமும்ஒருபக்கம்அலற்ற தீஓருபக்கம்சேர்வதன்முன்னம் செங்கண்மாலொடும்சிக்கெனச்சுற்ற மாய் ஒருபக்கம்நிற்கவல்லார்க்கு அரவதண்டத்தில்உய்யலுமாமே. 9.
380: செத்துப்போவதோர்போதுநினைந்து செய்யும்செய்கைகள்தேவபிரான்மேல் பத்தராயிறந்தார்பெறும்பேற்றைப் பாழித்தோள்விட்டுசித்தன்புத்தூர்க்கோன் சித்தம்நன்கொருங்கித்திருமாலைச் செய்தமாலைஇவைபத்தும்வல்லார் சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல் சென்றசிந்தைபெறுவர்தாமே. (2) 10.
ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்)
கலித்துறை
381: காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும் ஆசையினால் அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள். கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ நாயகன்நாரணன் தம்அன்னைநரகம்புகாள். (2) 1.
382: அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால் மங்கியமானிடசாதியின் பேரிடும்ஆதர்காள். செங்கணெடுமால். சிரீதரா. என்றுஅழைத்தக்கால் நங்கைகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 2.
383: உச்சியில்எண்ணெயும் சுட்டியும்வளையும்உகந்து எச்சம்பொலிந்தீர்காள். எஞ்செய்வான்பிறர்பேரிட்டீர்? பிச்சைபுக்காகிலும் எம்பிரான்திருநாமமே நச்சுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 3.
384: மானிடசாதியில்தோன்றிற்று ஓர்மானிடசாதியை மானிடசாதியின்பேரிட்டால் மறுமைக்கில்லை வானுடைமாதவா. கோவிந்தா. என்றுஅழைத்தக்கால் நானுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 4.
385: மலமுடையூத்தையில்தோன்றிற்று ஓர்மலவூத்தையை மலமுடையூத்தையின்பேரிட்டால் மறுமைக்கில்லை குலமுடைக்கோவிந்தா. கோவிந்தா. என்றுவழைத்தக்கால் நலமுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 5.
386: நாடும்நகரும்அறிய மானிடப்பேரிட்டு கூடியழுங்கிக் குழியில்வீழ்ந்துவழுக்கதே சாடிறப்பாய்ந்ததலைவா. தாமோதரா. என்று நாடுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். 6.
387: மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள். கண்ணுக்கினிய கருமுகில்வண்ணன்நாமமே நண்ணுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். 7.
388: நம்பிநம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால் நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம் செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால் நம்பிகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 8.
389: ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் உங்கள் மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு கோத்துக்குழைத்துக் குணாலமாடித்திரிமினோ நாத்தகுநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 9.
390: சீரணிமால் திருநாமமேயிடத்தேற்றிய வீரணிதொல்புகழ் விட்டுசித்தன்விரித்த ஓரணியொண்தமிழ் ஒன்பதோடொன்றும்வல்லவர் பேரணிவைகுந்தத்து என்றும்பேணியிருப்பரே. (2) 10.
ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
391: தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்தடிந்த எம்தாசரதிபோய் எங்கும்தன்புகழாவிருந்துஅரசாண்ட எம்புருடோ த்தமனிருக்கை கங்கைகங்கையென்றவாசகத்தாலே கடுவினைகளைந்திடுகிற்கும் கங்கையின்கரைமேல்கைதொழநின்ற கண்டமென்னும்கடிநகரே. (2) 1.
392: சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வாய்ச் சந்திரன்வெங்கதிர்அஞ்ச மலர்ந்தெழுந்தணவுமணிவண்ணவுருவின் மால்புருடோ த்தமன்வாழ்வு நலம்திகழ்சடையான்முடிக்கொன்றைமலரும் நாரணன்பாதத்துழாயும் கலந்திழிபுனலால்புகர்படுகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 2.
393: அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து அங்கு எதிர்முகவசுரர்தலைகளையிடறும் எம்புருடோ த்தமனிருக்கை சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில் சங்கரன்சடையினில்தங்கி கதிர்முகமணிகொண்டிழிபுனல்கங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 3.
394: இமையவர்இறுமாந்திருந்தரசாள ஏற்றுவந்தெதிர்பொருசேனை நமபுரம்நணுகநாந்தகம்விசிறும் நம்புருடோ த்தமன்நகர்தான் இமவந்தம்தொடங்கிஇருங்கடலளவும் இருகரைஉலகிரைத்தாட கமையுடைப்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 4.
395: உழுவதோர்படையும்உலக்கையும்வில்லும் ஒண்சுடராழியும்சங்கும் மழுவொடுவாளும்படைக்கலமுடைய மால்புருடோ த்தமன்வாழ்வு எழுமையும்கூடிஈண்டியபாவம் இறைப்பொழுதளவினில்எல்லாம் கழுவிடும்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 5.
396: தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம் சலசலபொழிந்திடக்கண்டு மலைப்பெருங்குடையால்மறைத்தவன்மதுரை மால்புருடோ த்தமன்வாழ்வு அலைப்புடைத்திரைவாய்அருந்தவமுனிவர் அவபிரதம்குடைந்தாட கலப்பைகள்கொழிக்கும்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 6.
397: விற்பிடித்திறுத்துவேழத்தைமுருக்கி மேலிருந்தவன்தலைசாடி மற்பொருதெழப்பாய்ந்துஅரையனயுதைத்த மால்புருடோ த்தமன்வாழ்வு அற்புதமுடையஅயிராவதமதமும் அவரிளம்படியரொண்சாந்தும் கற்பகமலரும்கலந்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 7.
398: திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து தன்மைத்துனன்மார்க்காய் அரசினையவியஅரசினையருளும் அரிபுருடோ த்தமனமர்வு நிரைநிரையாகநெடியனயூபம் நிரந்தரம்ஒழுக்குவிட்டு இரண்டு கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கை கண்டமென்னும்கடிநகரே. 8.
399: வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம்துவரைஅயோத்தி இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோ த்தமனிருக்கை தடவரையதிரத்தரணிவிண்டிடியத் தலைப்பற்றிக்கரைமரம்சாடி கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. (2) 9.
400: மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய எம்புருடோ த்தமனிருக்கை மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி மூன்றினில்மூன்றுருவானான் கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. (2) 10.
401: பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து உறைபுருடோ த்தமனடிமேல் வெங்கலிநலியாவில்லிபுத்தூர்க்கோன் விட்டுசித்தன்விருப்புற்று தங்கியஅன்பால்செய்ததமிழ்மாலை தங்கியநாவுடையார்க்கு கங்கையில்திருமால்கழலிணைக்கீழே குளித்திருந்தகணக்காமே. (2) 11.
எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1)
தரவு கொச்சகக்கலிப்பா
402: மாதவத்தோன்புத்திரன்போய் மறிகடல்வாய்மாண்டானை ஓதுவித்ததக்கணையா உருவுருவேகொடுத்தானூர் தோதவத்தித்தூய்மறையோர் துறைபடியத்துளும்பிஎங்கும் போதில்வைத்ததேன்சொரியும் புனலரங்கமென்பதுவே. (2) 1.
403: பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும் இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்தவுறைப்பனூர் மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார் சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே. 2.
404: மருமகன்தன்சந்ததியை உயிர்மீட்டு, மைத்துனன்மார் உருமகத்தேவீழாமே குருமுகமாய்க்காத்தானூர் திருமுகமாய்ச்செங்கமலம் திருநிறமாய்க்கருங்குவளை பொருமுகமாய்நின்றலரும் புனலரங்கமென்பதுவே. 3.
405: கூந்தொழுத்தைசிதகுரைப்பக் கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டு ஈன்றெடுத்ததாயரையும் இராச்சியமும்ஆங்கொழிய கான்தொடுத்தநெறிபோகிக் கண்டகரைக்களைந்தானூர் தேந்தொடுத்தமலர்ச்சோலைத் திருவரங்கமென்பதுவே. 4.
406: பெருவரங்களவைபற்றிப் பிழகுடையஇராவணனை உருவரங்கப்பொருதழித்து இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர் குருவரும்பக்கோங்கலரக் குயில்கூவும்குளிர்பொழில்சூழ் திருவரங்கமென்பதுவே என்திருமால்சேர்விடமே. 5.
407: கீழுலகில்அசுரர்களைக் கிழங்கிருந்துகிளராமே ஆழிவிடுத்துஅவருடைய கருவழித்தவழிப்பனூர் தாழைமடலூடுரிஞ்சித் தவளவண்ணப்பொடியணிந்து யாழினிசைவண்டினங்கள் ஆளம்வைக்கும்அரங்கமே. 6.
408: கொழுப்புடையசெழுங்குருதி கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய பிழக்குடையஅசுரர்களைப் பிணம்படுத்தபெருமானூர் தழுப்பரியசந்தனங்கள் தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு தெழிப்புடையகாவிரிவந்து அடிதொழும்சீரரங்கமே. 7.
409: வல்லெயிற்றுக்கேழலுமாய் வாளெயிற்றுச்சீயமுமாய் எல்லையில்லாத்தரணியையும் அவுணனையும்இடந்தானூர் எல்லியம்போதுஇருஞ்சிறைவண்டு எம்பெருமான்குணம்பாடி மல்லிகைவெண்சங்கூதும் மதிளரங்கமென்பதுவே. 8.
410: குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல் நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமாலூர் குன்றாடுபொழில்நுழைந்து கொடியிடையார்முலையணவி மன்றூடுதென்றலுமாம் மதிளரங்கமென்பதுவே. 9.
411: பருவரங்களவைபற்றிப் படையாலித்தெழுந்தானை செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல் திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு இருவரங்கமெரித்தானை ஏத்தவல்லாரடியோமே. (2) 10.
ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
412: மரவடியைத்தம்பிக்குவான்பணையம் வைத்துப்போய்வானோர்வாழ செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்து உலகாண்டதிருமால்கோயில் திருவடிதன்திருவுருவும் திருமங்கைமலர்கண்ணும்காட்டிநின்று உருவுடையமலர்நீலம் காற்றாட்டஓசலிக்கும்ஒளியரங்கமே. (2) 1.
413: தன்னடியார்திறத்தகத்துத் தாமரையாளாகிலும்சிதகுரைக்குமேல் என்னடியார்அதுசெய்யார் செய்தாரேல்நன்றுசெய்தாரென்பர்போலும் மன்னுடையவிபீடணற்கா மதிளிலங்கைத்திசைநோக்கிமலர்கண்வைத்த என்னுடையதிருவரங்கற்கன்றியும் மற்றொருவர்க்குஆளாவரே? (2) 2.
414: கருளுடையபொழில்மருதும் கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும் உருளுடையசகடரையும்மல்லரையும் உடையவிட்டுஓசைகேட்டான் இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு ஏற்றிவைத்துஏணிவாங்கி அருள்கொடுத்திட்டுஅடியவரை ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே. 3.
415: பதினாறாமாயிரவர் தேவிமார்பணிசெய்ய துவரையென்னும் அதில்நாயகராகிவீற்றிருந்த மணவாளர்மன்னுகோயில் புதுநாண்மலர்க்கமலம் எம்பெருமான்பொன்வயிற்றில்பூவேபோல்வான் பொதுநாயகம்பாவித்து இருமாந்துபொன்சாய்க்கும்புனலரங்கமே. 4.
416: ஆமையாய்க்கங்கையாய் ஆழ்கடலாய்அவனியாய்அருவரைகளாய் நான்முகனாய்நான்மறையாய் வேள்வியாய்த்தக்கணையாய்த்தானுமானான் சேமமுடைநாரதனார் சென்றுசென்றுதுதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில் பூமருவிப்புள்ளினங்கள் புள்ளரையன்புகழ்குழறும்புனலரங்கமே. 5.
417: மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து அவர்களையேமன்னராக்கி உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட உயிராளன்உறையும்கோயில் பத்தர்களும்பகவர்களும் பழமொழிவாய்முனிவர்களும்பரந்தநாடும் சித்தர்களும்தொழுதிறைஞ்சத் திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே. 6.
418: குறட்பிரமசாரியாய் மாவலியைக்குறும்பதக்கிஅரசுவாங்கி இறைப்பொழிதில்பாதாளம்கலவிருக்கை கொடுத்துகந்தஎம்மான்கோயில் எறிப்புடையமணிவரைமேல் இளஞாயிறுஎழுந்தாற்போல்அரவணையின்வாய் சிறப்புடையபணங்கள்மிசைச் செழுமணிகள்விட்டெறிக்கும்திருவரங்கமே. 7.
419: உரம்பற்றிஇரணியனை உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க வாயலரத்தெழித்தான்கோயில் உரம்பெற்றமலர்க்கமலம் உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட வரம்புற்றகதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே. 8.
420: தேவுடையமீனமாய்ஆமையாய்ஏனமாய் அரியாய்க்குறளாய் மூவுருவினிராமனாய்க் கண்ணனாய்க்கற்கியாய்முடிப்பாங்கோயில் சேவலொடுபெடையன்னம் செங்கமலமலரேறிஊசலாடி பூவணைமேல்துதைந்தெழு செம்பொடியாடிவிளையாடும்புனலரங்கமே. 9.
421: செருவாளும்புள்ளாளன்மண்ணாளன் செருச்செய்யும்நாந்தகமென்னும் ஒருவாளன் மறையாளன்ஓடாதபடையாளன் விழுக்கையாளன் இரவாளன்பகலாளன்என்னையாளன் ஏழுலகப்பெரும்புரவாளன் திருவாளன்இனிதாகத் திருக்கண்கள்வளர்கின்றதிருவரங்கமே. 10.
422: கைந்நாகத்திடர்கடிந்த கனலாழிப்படையுடையான்கருதும்கோயில் தென்னாடும்வடநாடும்தொழநின்ற திருவரங்கம்திருப்பதியின்மேல் மெய்ந்நாவன்மெய்யடியான் விட்டுசித்தன்விரித்ததமிழுரைக்கவல்லார் எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ் இணைபிரியாதிருப்பர்தாமே. (2) 11.
பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
423: துப்புடையாரைஅடைவதெல்லாம் சோர்விடத்துத்துணையாவரென்றே ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன் ஆனைக்குநீஅருள்செய்தமையால் எய்ப்புஎன்னைவந்துநலியும்போது அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன் அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன் அரங்கத்தரவணைப்பள்ளியானே. (2) 1.
424: சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய் சங்கொடுசக்கரமேந்தினானே. நாமடித்துஎன்னைஅனேகதண்டம் செய்வதாநிற்பர்நமன்தமர்கள் போமிடத்துஉன்திறத்துஎத்தனையும் புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன் அரங்கத்தரவணைப்பள்ளியானே. 2.
425: எல்லையில்வாசல்குறுகச்சென்றால் எற்றிநமன்தமர்பற்றும்போது நில்லுமினென்னும்உபாயமில்லை நேமியும்சங்கமும்ஏந்தினானே. சொல்லலாம்போதேஉன்நாமமெல்லாம் சொல்லினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும் அல்லல்படாவண்ணம்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. 3.
426: ஒற்றைவிடையனும்நான்முகனும் உன்னையறியாப்பெருமையோனே. முற்றஉலகெல்லாம்நீயேயாகி மூன்றெழுத்தாயமுதல்வனேயா. அற்றதுவாணாள்இவற்கென்றெண்ணி அஞ்சநமன்தமர்பற்றலுற்ற அற்றைக்கு, நீஎன்னைக்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. 4.
427: பையரவினணைப் பாற்கடலுள் பள்ளிகொள்கின்றபரமமூர்த்தி. உய்யஉலகுபடைக்கவேண்டி உந்தியில்தோற்றினாய்நான்முகனை வையமனிசரைப்பொய்யென்றெண்ணிக் காலனையும்உடனேபடைத்தாய் ஐய. இனிஎன்னைக்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. 5.
428: தண்ணெனவில்லைநமன்தமர்கள் சாலக்கொடுமைகள்செய்யாநிற்பர் மண்ணொடுநீரும்எரியும்காலும் மற்றும்ஆகாசமுமாகிநின்றாய். எண்ணலாம்போதேஉன்நாமமெல்லாம் எண்ணினேன், என்னைக்குறிக்கொண்டுஎன்றும் அண்ணலே. நீஎன்னைக்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. 6.
429: செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற தேவர்கள்நாயகனே. எம்மானே. எஞ்சலிலென்னுடையின்னமுதே. ஏழுலகுமுடையாய். என்னப்பா. வஞ்சவுருவின்நமன்தமர்கள் வலிந்துநலிந்துஎன்னைப்பற்றும்போது அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. 7.
430: நான்ஏதும்உன்மாயமொன்றறியேன் நமன்தமர்பற்றிநலிந்திட்டு இந்த ஊனேபுகேயென்றுமோதும்போது அங்கேதும் நான்உன்னைநினைக்கமாட்டேன் வானேய்வானவர்தங்களீசா. மதுரைப்பிறந்தமாமாயனே. என் ஆனாய். நீஎன்னைக்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. 8.
431: குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா. கோநிரைமேய்த்தவனே. எம்மானே. அன்றுமுதல் இன்றறுதியா ஆதியஞ்சோதிமறந்தறியேன் நன்றும்கொடியநமன்தமர்கள் நலிந்துவலிந்துஎன்னைப்பற்றும்போது அன்றங்குநீஎன்னைக்காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே. 9.
432: மாயவனைமதுசூதனனை மாதவனைமறையோர்களேத்தும் ஆயர்களேற்றினைஅச்சுதனை அரங்கத்தரவணைப்பள்ளியானை வேயர்புகழ்வில்லிபுத்தூர்மன் விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும் தூயமனத்தனராகிவல்லார் தூமணிவண்ணனுக்காளர்தாமே. (2) 10.
ஐந்தாம் பத்து
முதல் திருமொழி - வாக்குத்தூய்மை
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
433: வாக்குத்தூய்மையிலாமையினாலே மாதவா. உன்னைவாய்க்கொள்ளமாட்டேன் நாக்குநின்னையல்லால்அறியாது நானதஞ்சுவன்என்வசமன்று மூர்க்குப்பேசுகின்றானிவனென்று முனிவாயேலும்என்நாவினுக்குஆற்றேன் காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர் காரணா. கருளக்கொடியானே. (2) 1.
434: சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன் சங்குசக்கரமேந்துகையனே. பிழைப்பராகிலும்தம்மடியார்சொல் பொறுப்பது பெரியோர்கடனன்றே விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால் வேறொருவரோடுஎன்மனம்பற்றாது உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய் ஊழியேழுலகுண்டுமிழ்ந்தானே. 2.
435: நன்மைதீமைகளொன்றும்அறியேன் நாரணா. என்னும்இத்த்னையல்லால் புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசிப் புகழ்வானன்றுகண்டாய்திருமாலே. உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன் ஓவாதேநமோநாரணா. என்பன் வன்மையாவதுஉன்கோயிலில்வாழும் வைட்டணவனென்னும்வன்மைகண்டாயே. 3.
436: நெடுமையால்உலகேழுமளந்தாய். நின்மலா. நெடியாய். அடியேனைக் குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா கூறைசோறுஇவைவேண்டுவதில்லை அடிமையென்னுமக்கோயின்மையாலே அங்கங்கேஅவைபோதரும்கண்டாய் கொடுமைக்கஞ்சனைக்கொன்று நின்தாதை கோத்தவன்தளைகோள்விடுத்தானே. 4.
437: தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடை துடவையும்கிணறும்இவையெல்லாம் வாட்டமின்றிஉன்பொன்னடிக்கீழே வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன் நாட்டுமானிடத்தோடுஎனக்குஅரிது நச்சுவார்பலர்கேழலொன்றாகி கோட்டுமண்கொண்டகொள்கையினானே. குஞ்சரம்வீழக்கொம்பொசித்தானே. 5.
438: கண்ணா. நான்முகனைப்படைத்தானே. காரணா. கரியாய். அடியேன்நான் உண்ணாநாள்பசியாவதொன்றில்லை ஓவாதேநமோநாரணாவென்று எண்ணாநாளும்இருக்கெசுச்சாம வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம் நண்ணாநாள் அவைதத்துறுமாகில் அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே. 6.
439: வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை மெத்தையாகவிரித்து அதன்மேலே கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம் காணலாங்கொல் என்றாசையினாலே உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி உரோமகூபங்களாய் கண்ணநீர்கள் துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன் சொல்லாய்யான்உன்னைத்தத்துறுமாறே. 7.
440: வண்ணமால்வரையேகுடையாக மாரிகாத்தவனே. மதுசூதா. கண்ணனே. கரிகோள்விடுத்தானே. காரணா. களிறட்டபிரானே. எண்ணுவாரிடரைக்களைவானே. ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே. நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும் நன்மையேஅருள்செய்எம்பிரானே. 8.
441: நம்பனே. நவின்றேத்தவல்லார்கள் நாதனே. நரசிங்கமதானாய். உம்பர்கோனுலகேழும்அளந்தாய் ஊழியாயினாய். ஆழிமுன்னேந்தி கம்பமாகரிகோள்விடுத்தானே. காரணா. கடலைக்கடைந்தானே. எம்பிரான். என்னையாளுடைத்தேனே. ஏழையேனிடரைக்களையாயே. 9.
442: காமர்தாதைகருதலர்சிங்கம் காணவினியகருங்குழல்குட்டன் வாமனன்என்மரகதவண்ணன் மாதவன்மதுசூதனன்தன்னை சேமநன்கமரும்புதுவையர்கோன் விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும் நாமமென்றுநவின்றுரைப்பார்கள் நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே. (2) 10.
இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
443: நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும் கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின் மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார் பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. (2) 1.
444: சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன்பொறியொற்றி வைத்தஇலச்சினைமாற்றித் தூதுவர்ஓடியொளித்தார் முத்துத்திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர்முதல்வன் பத்தர்க்கமுதன்அடியேன் பண்டன்றுபட்டினம்காப்பே. 2.
445: வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி கயிற்றும்அக்காணிகழித்துக் காலிடைப்பாசம்கழற்றி எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னைப் பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே. 3.
446: மங்கியவல்வினைநோய்காள். உமக்கும்ஓர்வல்வினைகண்டீர் இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின் சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர் பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 4.
447: மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர். பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 5.
448: உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின் பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர் அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள். உமக்குஇங்குஓர் பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 6.
449: கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே. 7.
450: ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில் பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே. 8.
451: உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே. சங்கே. அறவெறிநாந்தகவாளே. அழகியசார்ங்கமே. தண்டே. இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள். பறவையரையா. உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின். (2) 9.
452: அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும் அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து பரவைத்திரைபலமோதப் பள்ளிகொள்கின்றபிரானை பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே. (2) 10.
மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
453: துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்து புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டோ ? மக்களறுவரைக்கல்லிடைமோத இழந்தவள்தன்வயிற்றில் சிக்கெனவந்துபிறந்துநின்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். (2) 1.
454: வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால் ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லை அளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையெந்தாய். 2.
455: உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன், இனிப்போய்ஒருவன் தனக்குப்பணிந்து கடைத்தலைநிற்கை நின்சாயையழிவுகண்டாய் புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி உன்பொன்னடிவாழ்கவென்று இனக்குறவர்புதியதுண்ணும் எழில்திருமாலிருஞ்சோலையெந்தாய். (2) 3.
456: காதம்பலவும்திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லைநீரில்லை உன் பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம் நான்எங்கும்காண்கின்றிலேன் தூதுசென்றாய். குருபாண்டவர்க்காய் அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று பேதஞ்செய்துஎங்கும்பிணம்படைத்தாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 4.
457: காலுமெழாகண்ணநீரும்நில்லா உடல்சோர்ந்துநடுங்கி குரல் மேலுமெழாமயிர்க்கூச்சுமறா எனதோள்களும்வீழ்வொழியா மாலுகளாநிற்கும்என்மனனே. உன்னைவாழத்தலைப்பெய்திட்டேன் சேலுகளாநிற்கும்நீள்சுனைசூழ் திருமாலிருஞ்சோலையெந்தாய். 5.
458: எருத்துக்கொடியுடையானும் பிரமனும்இந்திரனும் மற்றும் ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு மருந்தறிவாருமில்லை மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா. மறுபிறவிதவிரத் திருத்தி உங்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய். 6.
459: அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி உன்பேரருளால் இக்கரையேறியிளைத்திருந்தேனை அஞ்சலென்றுகைகவியாய் சக்கரமும்தடக்கைகளும் கண்களும்பீதகவாடையொடும் செக்கர்நிறத்துச்சிவப்புடையாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 7.
460: எத்தனைகாலமும்எத்தனையூழியும் இன்றொடுநாளையென்றே இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன் இனிஉன்னைப்போகலொட்டேன் மைத்துனன்மார்களைவாழ்வித்து மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய். சித்தம்நின்பாலதறிதியன்றே திருமாலிருஞ்சோலையெந்தாய். 8.
461: அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன் இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே? சென்றங்குவாணனைஆயிரந்தோளும் திருச்சக்கரமதனால் தென்றித்திசைதிசைவீழச்செற்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 9.
462: சென்றுலகம்குடைந்தாடும்சுனைத் திருமாலிருஞ்சோலைதன்னுள் நின்றபிரான் அடிமேல்அடிமைத்திறம் நேர்படவிண்ணப்பஞ்செய் பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும் புதுவைக்கோன்விட்டுசித்தன் ஒன்றினோடொன்பதும்பாடவல்லார் உலகமளந்தான்தமரே. (2) 10.
நாலாம் திருமொழி - சென்னியோங்கு (எம்பெருமான் தமது திருவுள்ளத்திற் புகுந்தமையால் ஆழ்வார் தாம் பெற்ற நன்மைகளைக் கூறி உகத்தல்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
463: சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய். உலகு தன்னைவாழநின்றநம்பீ. தாமோதரா. சதிரா. என்னையும்என்னுடைமையையும் உஞ்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே? (2) 1.
464: பறவையேறுபரம்புருடா. நீஎன்னைக்கைக்கொண்டபின் பிறவியென்னும்கடலும்வற்றிப் பெரும்பதமாகின்றதால் இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால் அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே. 2.
465: எம்மனா. என்குலதெய்வமே. என்னுடையநாயகனே. நின்னுளேனாய்ப்பெற்றநன்மை இவ்வுலகினில்ஆர்பெறுவார்? நம்மன்போலேவீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ளபாவமெல்லாம் சும்மெனாதேகைவிட்டோ டித் தூறுகள்பாய்ந்தனவே. 3.
466: கடல்கடைந்துஅமுதம்கொண்டு கலசத்தைநிறைத்தாற்போல் உடலுருகிவாய்திறந்து மடுத்துஉன்னைநிறைத்துக்கொண்டேன் கொடுமைசெய்யும்கூற்றமும் என்கோலாடிகுறுகப்பெறா தடவரைத்தோள்சக்கரபாணீ. சார்ங்கவிற்சேவகனே. 4.
467: பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழவுரைத்தாற்போல் உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால் மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன் உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன் என்னையும்உன்னிலிட்டேன் என்னப்பா. என்னிருடீகேசா. என்னுயிர்க்காவலனே. 5.
468: உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமல்எல்லாம் என்னுடையநெஞ்சகம்பால் சுவர்வழிஎழுதிக்கொண்டேன் மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட இராமநம்பீ. என்னிடைவந்துஎம்பெருமான். இனியெங்குப்போகின்றதே? 6.
469: பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல் திருப்பொலிந்தசேவடி எஞ்சென்னியின்மேல்பொறித்தாய் மருப்பொசித்தாய். மல்லடர்த்தாய். என்றென்றுஉன்வாசகமே உருப்பொலிந்தநாவினேனை உனக்குஉரித்தாகினையே. 7.
470: அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என் மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான். நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்குக் கண்கள்அசும்பொழுக நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே. 8.
471: பனிக்கடலில்பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன் மனக்கடலில்வாழவல்ல மாயமணாளநம்பீ. தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேஎன்றென்று உனக்கிடமாயிருக்க என்னைஉனக்குஉரித்தாக்கினையே. (2) 9.
472: தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல் சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி. வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும் இடவகைகள்இகழ்ந்திட்டு என்பால்இடவகைகொண்டனையே. (2) 10.
473: வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே கோயில்கொண்டகோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே. (2) 11.
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
|