கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி சட்டபேரவையில் நடைபெற்ற தேமுதிக எம்.எல்.ஏக்கள் மோதல் பிரச்சனை தொடர்பான சட்ட மன்ற அவை குழுவின் அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கைகலப்பில் ஈடுபட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், பார்த்தசாரதி, முருகேசன், கு.நல்லதம்பி, எஸ்.செந்தில்குமார், ஆர்.அருள்செல்வன் ஆகிய ஆறு பேரை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டது. எதிர்கட்சி எம்.எல்.ஏக்களின் நீக்கத்தை கண்டித்து நேற்று சட்ட பேரவையில் திமுக, புதிய தமிழகம், காங்கிரஸ் போன்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆறு எம்.எல்.ஏக்களின் மாதச் சம்பளம், படிகள் உள்ளிட்ட சலுகைகள் எதையும் பெற முடியாது. மேலும், மாநிலங்களவைத் தேர்தல் போன்ற தருணங்களில் வாக்களிக்கும் வாய்ப்பும் பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது.
|