இந்தியாவில் சுமார் 60 கோடி மக்கள் சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாமல் வசிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
மக்களுக்கு கழிப்பறையின் சுகாதாரத்தையும், அவசியத்தையும் உணர்த்தும் விதமாக, ஆண்டு தோறும் நவம்பர் 19ம் தேதி, உலக கழிப்பறை தினம் கடைபிடிக்கப்படுகிறது. நேற்று கடைபிடிக்கப்பட்ட இந்த தினம் குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகம் முழுவதும், சுமார் 250 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. இதில் இந்தியாவில் மட்டும், 60 கோடி பேர், கழிப்பறை வசதி இல்லாமல் வசிக்கின்றனர். சுகாதாரமான கழிப்பறை வசதி கொண்ட நாடுகளில், சிங்கப்பூர் முதலிடம் வகிப்பதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு, சிங்கப்பூரில், நேற்று நடந்த, உலக கழிப்பறை தின மாநாட்டில், அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் பூ பேசியதாவது, சுகாதாரமான கழிப்பறை இல்லாததால் தான், பெரும்பாலான தொற்று நோய்கள் பரவுகின்றன. இதனால், மருத்துவ செலவினங்கள் அதிகரிக்கின்றன. கழிப்பறை வசதி இல்லாததால், தினமும் உலக முழுவதும், சுமார் 2,000 குழந்தைகள, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்களால் இறக்கின்றனர் என கிரேஸ் பூ தெரிவித்தார்.
|