LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இவர்களுக்குப் பின்னால் (Behind These People)

இவர்களுக்குப் பின்னால் (ஜென்னிமார்க்ஸ் ) - பகுதி 4

 

இவர்களுக்குப் பின்னால் (கஸ்தூரிபாய் காந்தி) - பகுதி 4  
behind-these-people-ganthi-kasthuribai-4
சூர்யா சரவணன் 

இவர்களுக்குப் பின்னால் (ஜென்னிமார்க்ஸ் ) - பகுதி 4  


-சூர்யா சரவணன்

 

மார்க்ஸ், உன்னை விட்டு ஜென்னியைப் பிரிப்பது என்பது எந்த ஓர் அரசிளங்குமாரனாலும் முடியாத காரியம். இதைப் பற்றி எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை. நீயும் அதை நிச்சயமாக நம்பு. அவள் தன்னுடைய உடலையும் ஆத்மாவையும் உன்னிலே ஐக்கியப் படுத்திவிட்டாள். ஜென்னி, மகத்தான தியாகத்தை செய்திருக்கிறாள். அவளைப் போல் சம வயதுள்ள எந்தப் பெண்ணும் இது போன்ற தியாகத்தை செய்ய முடியாது. இதனை நீ மறக்கவே கூடாது.  

                 மார்க்ஸின் தந்தை லுட்விக் 

 

 

 


 

 

      ஜென்னியைப் பார்ப்பவர்கள் இவளைத் திருமணம் செய்து கொள்ளும் பாக்கியம் நமக்கு கிடைக்காதா என்று ஏங்குவார்கள். ஜென்னி பரம்பரை பிரபு வம்சத்தைச் சேர்ந்தவளாக இருந்ததால் பிறப்பிலேயே தேவதையைப்போல் இருந்தாள். அழகு மட்டுமல்ல. வீட்டுக்கு மூத்தவளாக இருந்ததால், குடும்பத்தின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தாள். அனைவரிடமும் கனிவுடன் பழகும் குணவதியாக இருந்தாள். அங்காடித் தெருக்களுக்கும், திருச்சபைக்கும் ஜென்னி வரும்போது, அவளது பார்வை நம் மீது படாதா? என்று விடலைகள் ஏங்குவர்.  

 

மார்க்ஸ் யூதர்களுக்கே உண்டான கருமை நிறம், குரூபி, முரடன், அறிஞர் ஆவதற்கான எந்தவிதமான அறிகுறியும் தோற்றத்தில் இல்லாதவன்.  

 

ஜென்னிக்கும் மார்க்சுக்கும் காதல் ஏற்பட்டது என்றால் நம்பமுடிகிறதா? மார்க்ஸ், ஜென்னி இருவருக்கும் காதல் ஏற்பட காரணமாக இருந்தவர்கள் மூன்று பேர். ஒருவர் ஜென்னியின் தோழி சோபியா. இவள் மார்க்சின் சகோதரி. இரண்டாவது ஜென்னியின் தந்தை லட்விக் ல்£ன் வெஸ்ட்பாலென். மூன்றாவது ஷேக்ஸ்பியர்.  

 

ஜென்னியின் வீடும் மார்க்சின் வீடும் அருகருகில் இருந்ததால் இருவரின் குடும்பமும் நெருங்கிப் பழகிவந்தது. ஜென்னியின் முன்னோர்கள் பணக்காரர்கள். ராணுவம், மற்றும் அரசு வேலை செய்தவர்கள என்பதாலும் பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததாலும் நிரந்தர வருமானமும் ஆஸ்தியும் இருந்தன. கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1814ல் ஜென்னி பிறந்தாள்.  

 

லட்விக் லான் வெஸ்ட் பாலென்னுக்கு மார்க்சின் மீது அலாதிப்பிரியம் இருந்தது. லட்விக், கலை ஆர்வம் நிரம்பியவராக இருந்தார். மார்க்சை அழைத்து கிரேக்க காவியங்கள், ஷேக்ஸ்பியர் நாடகங்கள் ஆகியவற்றை விவாதிப்பார். மார்க்ஸ், ஷேக்ஸ்பியரின் நாடகங்களை உணர்ச்சிப் பூர்வமாக நடித்துக் காட்டுவார்.  

 

 

மார்க்சின் சகோதரியான சோபியாவும் ஜென்னியும் நெருங்கிய தோழிகள்.  மார்க்சுக்கு, ஜென்னியின் மீது காதல் பிறந்தது. ஜென்னியின் மீது இருந்த காதலை மார்க்ஸ் உடனடியாக வெளிப்படுத்தவில்லை. ஜென்னி தனது காதலை ஒத்துக் கொள்வாளா என்ற சந்தேகம் மார்க்சுக்கு இருந்தது. ஆனால், ஜென்னி மார்க்சின் மேல் இருந்த காதலை மூடி மறைக்கவில்லை.

 

மார்க்சின் உறுதியான மனப்பான்மை, அடக்கியாளும் தன்மை, ஒழுக்கத்திற்கு உயர்வு கொடுத்துப் பேசுகிற தன்மை ஆகியவை ஜென்னியை கவர்ந்தன.

 

1836 ஆம் ஆண்டு ஜென்னியும், மார்க்சும் திருமணம் செய்து கொள்ள ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டனர். மார்க்ஸ், ஜென்னியில் காதல் விவகாரம் மார்க்சின் தந்தை லுட்விக்கு தெரிந்தது. அவருக்கு மார்க்சின் மீது கவலை அதிகரித்தது. ஒரு மத்திய தர குடும்பத்தை சேர்ந்த நமது மகனுக்கு ஜென்னி கிடைப்பாளா? இந்த விவகாரம் ஜென்னியின் தந்தைக்கு தெரிந்தால் என்னவாகும் என்றெல்லாம் கவலை அதிகரித்தது. ஆனால் மார்க்ஸ் ஒரு பிடிவாதக்காரன். எதைச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறானோ அதை செய்து முடித்துவிடுவான் என்பதில் நம்பிக்கை இருந்தது.

 

1836ல் கார்ல் மார்க்ஸ் தனது மேல் படிப்பிற்காக பெர்லின் சர்வகலா சாலைக்கு சென்றார். நன்றாக படித்து, தான் சுயமாக சம்பாதிக்கும் திறன் ஏற்படும் வரையில் திருமணம் செய்து கொள்ளப் போவது இல்லை என்று இருவரும் சங்கல்பம் செய்து கொண்டார்கள். அதனால் ஜென்னி, மார்க்சுக்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

 

என் மகன் உனக்கு உகந்தவன் இல்லை. அவனை நீ மறந்து விடு என்று லுட்விக், ஜென்னியிடம் கூறினார். ஆனால் அதை ஏற்க ஜென்னி மறுத்துவி¢ட்டாள்.

 

ஜென்னியின் காதல் குறித்து மார்க்சின் தந்தை தனது மகனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில்:

 

ஜென்னியிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவள் மனம் நிம்மதி அடையும் வகையில் நான் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்னால் முடிந்த வரையில் ஜென்னியிடம் பேசினேன். ஆனால் எல்லா விஷயங்களையும் நான் அவளிடத்தில் நேர்முகமாகச் சொல்ல முடியாதல்லவா? அவளுடைய பெற்றோர்கள், ¢ந்த விவாக நிச்சயத்தைப் பற்றி அபிப்பிராயப்படுவார்கள் என்பது எனக்குத் தெரியாது. உற்றாரும் உறவினரும் சொல்வதை நாம் புறக்கணித்துவிட முடியாது அல்லவா.....? ஜென்னி, உன்னை விவாகம் செய்து கொள்வதன் மூலமாக மகத்தான தியாகத்தை செய்தவளாகிறாள். இதை நீ மறந்து விடுவாயானால் உனக்கு வாழ்க்கையில் பல சங்கடங்கள் உண்டாகும். உன் மனதை நீ பரிசோதனை செய்து பார். நீ ஒர் இளைஞனாயிருந்த போதிலும் உலகத்தினரால் அது, நீ உறுதியாக நடந்து கொள்வதிலும், உன்னுடைய முயற்சியிலுமே இருக்கிறது.

 

மார்க்ஸ், உன்னை விட்டு ஜென்னியைப் பிரிப்பது என்பது எந்த ஓர் அரசிளங்குமாரனாலும் முடியாத காரியம் . இதைப் பற்றி எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை. நீயும் அதை நிச்சயமாக நம்பு. அவள் தன்னுடைய உடலையும் ஆத்மாவையும் உன்னிலே ஐக்கியப் படுத்திவிட்டாள். இந்த விஷயத்தில் அவள் மகத்தான தியாகத்தை செய்திருக்கிறாள். அவளைப் போல் சம வயதுள்ள எந்தப் பெண்ணும் இது போன்ற தியாகத்தை செய்ய முடியாது. இதனை நீ மறக்கவே கூடாது’’

என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

ஜென்னிக்கு மார்க்சின் கடிதங்கள்தான் சிறிது நிம்மதி அளித்து வந்தன. ஆனால் மார்க்சோ படிப்பிலேயே மூழ்கிவிடுவான். ஜென்னிக்கு கடிதம் எழுத மாட்டான். ஆனால் ஜென்னி மார்க்சின் கடிதத்திற்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பாள்.

 

ஆனால் மார்க்ஸ் கடிதம் எழுதவில்லையே தவிர நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தனது காதலி ஜென்னியைப் பற்றி காதல் கவிதைகளை எழுதினார். அந்த கவிதைகளை 1836ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஜென்னிக்கு அனுப்பி வைத்தான். காதலனின் அன்பு கிடைத்து விட்டதே என்ற மகிழ்ச்சியில் ஜென்னி பூரித்தாள்.

 

1836ம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் மேல் படிப்புக்காக பெர்லின் சர்வகலாசாலையில் சேர்ந்தார். அந்த காலத்தில் பெர்லின் சர்வகலா சாலையை கலைஞானமும் சத்தியமும் சேர்ந்து வாழ்கின்ற கோயில் என்று கூறுவார்கள்.

 

தத்துவ சாஸ்திரம், சட்டம், சரித்திரம், பூகோளம், இலக்கியம் ஆகிய பாடங்களைப் படித்தான். இரவு பகலாகப் படித்தார். படித்த நூல்களிலிருந்து குறிப்பெடுத்துக் கொள்வார். கிரேக்க காவியங்களில் தனக்கு பிடித்தவற்றை மனப்பாடம் செய்வார். மார்க்சின் தந்தை சட்டப் பாடத்தில் கவனம் செலுத்துமாறு வற்புறுத்தினார். ஆனால் மார்க்சோ தத்துவ சாஸ்திரத்தில் கவனம் செலுத்தினார். தத்துவ ஞானத்துடன்  மல்யுத்தமும் கற்றார்.

 

 பெர்லின் சர்வகலா சாலையில் மார்க்சின் படிப்பு முடிந்தது. ஜீனா என்ற ஊரில் இருந்த சர்வகலா சாலைக்கு அனுப்பிய இயற்கையின் தத்துவவியல் குறித்து டெமாக்ரிட்சிக்கும், எபிக்யூரஸ்க்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ற தலைப்பில் மார்க்ஸ் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்காக அவருக்கு 1841ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஆனால் மார்க்ஸ் அந்த டாக்டர் பட்டத்தை தனது வாழ்நாளில் ஒருமுறை கூட பயன்படுத்தியது கிடையாது. ஏன் டாக்டர் கார்ல் மார்க்ஸ் என்று கூட தனது பெயருக்கு முன்னால் போட்டுக் கொண்டது கிடையாது. நிறைகுடம் தளும்பாது அல்லவா?

 

படிப்பு முடிந்ததும் மார்க்ஸ் பான் சர்வகலாசாலை விரிவுரையாளராக பணியாற்ற விரும்பினார். அதற்காகவே தத்துவ சாஸ்திரத்தில் அதிக கவனம் செலுத்திப் படித்திருந்தார். மார்க்சின் நண்பன் பாவர், பான் சர்வகலாசாலை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். அத்துடன் ஒரு நாத்திகப் பத்திரிகையையும் நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் பிரஷ்ய மன்னராட்சி முற்போக்கு சிந்தனை உடையவர்களின் மீது அடக்கு முறையை ஏவிவிட்டது. இளம் ஹெகலியவாதிகளையும் எதிர்ப்புக் கருத்துடைய விரிவுரையாளர்களையும் பணி நீக்கம் செய்தது. எனவே, மார்க்ஸ் விரிவுரையாளர் ஆக வேண்டும் என்ற  எண்ணத்தை விட்டுவிட்டு ட்ரியருக்கு திரும்பினார்.

 

 

ஜென்னி ஊராரின் அவதூறுகளைத் தாங்கிக் கொண்டு மார்க்சுக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார். ஜெர்மன்&பிரெஞ்ச் மலர் பத்திரிகையின் மூலம் மார்க்சுக்கு நிரந்தர வருமானம் கிடைத்தது. எனவே 1843ஆம் ஆண்டு 13ஆம் தேதி டாக்டர் கார்ல் மார்க்சும், ஜென்னியும் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் கிராயிஷனாக் என்ற ஊரில் திருமணம் செய்து கொண்டனர். அப்பொழுது மார்க்சுக்கு 25 வயது. ஜென்னிக்கு 29 வயது. இருவரும் 9 மாத காலம் தங்கள் திருமண வாழ்வை இன்பமாய் கழித்தனர்.

 

    மார்க்சும், ஜென்னியும் 1843 ஆம் ஆண்டு அக்டோபர் மாத கடைசியில் பாரீஸ் வந்து குடியேறினர். ஜெர்மன், பிரெஞ்ச் மாத இதழ் ஜெர்மனி, பிரெஞ்ச் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட தீர்மானிக்கப்பட்டது. பிரான்ஸில் குடியேறிய ஜெர்மனியர்களுக்கும் ஜெர்மனியைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமுடைய பிரெஞ்சுக் காரர்களுக்கும் இந்த பத்திரிகை சென்று சேர வேண்டும் என்பது பத்திரிகையின் நோக்கமாக இருந்தது.

 

1844 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெர்மன்&பிரெஞ்ச் மலரின் முதல் இதழ் வெளிவந்தது. அதுவே கடைசி இதழாகவும் இருந்தது. மார்க்ஸ் அதில் இரண்டு கட்டுரைகள் எழுதியிருந்தார். ரூஜ், ஹைன் இருவரும் அதில் கட்டுரைகள் எழுதியிருந்தனர். ஜெர்மானிய அரசாங்கமும், ஆஸ்திரிய அரசாங்கமும் இணைந்து இந்த பத்திரிகை தங்கள் எல்லைக்குள் வராதபடி முடக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ரூஜ், மார்க்ஸ், ஹைன் மூவரும் ஜெர்மனிய மண்ணில் காலடி எடுத்து வைத்தால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.  பத்திரிகையின் முதல் இதழிலேயே பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனிடையே, மார்க்சுக்கும், ரூஜ்ஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மார்க்சின் மாதச் சம்பத்தை ரூஜ் நிறுத்திவிட்டார். மேலும்  பிரெஞ்ச்&ஜெர்மன் மலர் நூறு பிரதிகளைக் கொடுத்து விற்று சம்பளப் பணத்தை எடுத்துக் கொள்ளும்படி கூறினார். புதிய குடும்பம், அந்நியநாடு, நிரந்தர வருமானமில்லை என்ன செய்வார் மார்க்ஸ்? ஜார்ஜ்ஜீங்க் என்ற மார்க்சின் நண்பன் ஒருவன் ஜெர்மன்&பிரெஞ்ச் மலரை விலை கொடுத்து வாங்கிக் கொண்டான். ரைன்லாந்து கெஜட்டின் பங்குதாரர் ஒருவர் மார்க்சுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிவைத்தார். அவருக்குச் சமதர்ம சித்தாந்தத்திற்கான சிந்தனை தோன்றியது. நிறைய புத்தகங்களை தேடித் தேடி படித்து குறிப்புகள் எடுத்தார். 1844 ஆம் ஆண்டு 1 ஆம் தேதி மார்க்சுக்கு பெண் குழந்தை பிறந்தது.

 

       ஜென்னியின் கடிதங்கள்

 

    1843 இந்த ஜூன் மாதம் 19ம் தேதி எனது திருமண நாள். நாங்கள் கிரெட்ஸ் நாக்கிலிருந்து ரைன்பால்ஸிற்கு எபர்ன்பர்க் வழியாகச் சென்று பிறகு பாடன் வழியாகத் திரும்பி வந்தோம். பிறகு கிரெட்ஸ் நாக்கில் செப்டம்பர் மாத இறுதிவரையில் தங்கியிருந்தோம். எனதருமைத் தாய் என் சகோதரன் எட்காருடன் டிரியர் திரும்பினார். கார்லும் நானும் அக்டோபர் மாதத்தில் பாரிஸ் வந்தடைந்தோம். ஹெர்வேக்கும் அவர் மனைவியும் வரவேற்றனர்.

பாரிஸில் கார்லும் ரூகேயும் ஜெர்மன்&பிரெஞ்ச் மலர் என்ற பத்திரிகையைப் பதிப்பித்தார்கள். யூலிய் ப்ரோபல் இதன் பிரசுரகர்த்தர். முதல் இதழ் வெளிவந்தவுடனேயே இந்த முயற்சிக்குத் துன்பமான முடிவு ஏற்பட்டது. நாங்கள் செயிண்ட் ஜெர்மன் நகர் புறத்தில் வானோ தெருவில் வசித்து வந்தோம். ரூகே, ஹைனே, ஹெர்வேக், மேய்ரர், தல்ஸ்த்தோய், பக்கூனின், ஆன்னேன்கோவ், பெர்னாய்ஸ் மற்றும் அநேக நண்பர்களுடன் தொடர்பு கொண்டிருந்தோம். சிறு விஷயத்தின் மீது ஏராளமாக வீண் பேச்சும் பூசல்களும் ஏற்பட்டன. எங்கள் சிறு ஜென்னி 1844 மே1ம் தேதி பிறந்தாள். இதற்குப் பிறகு முதன்முதலாக நான் வெளியில் சென்றது லபீட்டின் மரணச் சடங்குகளுக்கே ஆறு வாரங்களுக்குப் பிறகு டிரியர் செல்லும் தபால் வண்டியில் சாகுமா, பிழைக்குமா என்ற ஊசலாட்டத்தில், நோயுற்ற என் குழந்தையுடன் சென்றேன்... செப்டம்பரில் ஒரு ஜெர்மன் நர்சுடன் பாரிசுக்கு திரும்பி வந்தேன். இதற்கிடையில் சிறு ஜென்னிக்கு நான்கு பற்கள் முளைத்துவிட்டன.

 

நான் வீட்டில் இல்லாதிருந்த சமயத்தில் பிரெடெரிக் எங்கெல்ஸ் கார்லை வந்து சந்தித்திருந்தார். இலையுதிர் காலத்திலும் குளிர் காலத்திலும் கார்ல் நூல் எழுதி வந்தார். அந்த நூல் பிராங்க்புர்ட்டில் வெளியிடப்பட்டது. எங்கள் உறவு வட்டத்தில் ஹேஸ், அவர் மனைவி ஏவர்பெக், ரிபென்ட்ரோப், மற்றும் குறிப்பாக ஹைனே, ஹெர்வேக் முதலியோர் இருந்தார்கள். 1845 துவக்கத்தில் திடீரென்று ஒரு போலீஸ் கமிஷனர் எங்கள் வீட்டிற்கு வந்து பிரஷ்ய அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி கிஸோ தயாரித்திருந்த ஒரு வெளியேற்ற உத்தரவைக் காட்டினார். Òகார்ல் மார்க்ஸ் பாரிஸை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்Ó என்று அந்த உத்தரவில் இருந்தது. எனக்குச் சற்று அதிக அவகாசம் கொடுத்திருந்தார்கள். அதைப் பயன்படுத்தி நான் எங்கள் மேஜை நாற்காலி முதலியவற்றையும் துணிகள் சிலவற்றையும் விற்பனை செய்தேன். எனக்கு மிகவும் குறைந்த தொகையே கிடைத்தது. எப்படியும் எங்கள் பயணத்திற்குரிய பணத்தைத் தேட வேண்டியிருந்தது. ஹெர்வேக் தம்பதிகள் என்னை இரண்டு நாட்கள் உபசரித்து வைத்திருந்தார்கள். நோயுடனும் கடுங்குளிரிலும் பிப்ரவரி மாத துவக்கத்தில் கார்லைப் பின்பற்றி பிரஸ்ஜெல்ஸ் சென்றேன். அங்கே Òபுவா சோவாஜ்Ó ஓட்டலில் தங்கியிருந்தோம். இங்குதான் முதல் தடவையாக ஹைன்ஜென், பிரெய்லிக்ராத் இருவரையும் சந்தித்தேன். மே மாதத்தில் டாக்டர் ப்ரோயரிடமிருந்து வாடகைக்கு பெற்ற, போர்ட் டூ லுவேனுக்கு வெளியே அல்யான்ஸ் தெருவிலிருந்த சிறிய வீட்டில் குடிபுகுந்தோம்.

 

  இங்கு நாங்கள் குடி வந்ததுதான் தாமதம். உடனே ஏங்கெல்ஸ் பின் தொடர்ந்து வந்தார். பாரிஸில் தமது நண்பர் டாக்டர் ரொலாண்ட் டேனியல்சுடன் எங்கள் வீட்டிற்கு வருகை தந்திருந்த ஹென்ரிஹ் ப்யூர்கர்ஸ் அங்கு இருந்தார். சில நாட்களுக்குப் பின்னர் ஹேஸ் தன் மனைவியுடன் வந்தார். இந்தச் சிறு ஜெர்மன் நண்பர் வட்டத்தில் செபாஸ்தியான் ஸைலர் என்பவரும் சேர்ந்து கொண்டார். அவர் ஒரு கடிதப் போக்குவரத்து அலுவலகத்தை ஏற்படுத்தினார். இந்தச் சிறு ஜெர்மன் குடியிருப்பில் இருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் வாழலாயினர். பிறகு எங்களுடன் ஜிகோ உட்பட பெல்ஜிய நாட்டவர் சிலர் சேர்ந்துக் கொண்டனர். இதில் பல போலந்து நாட்டவரும் இருந்தார்கள். மாலை நேரங்களில் நாங்கள் சென்ற ஒரு கவர்ச்சிகரமான சிற்றுண்டி விடுதியில் நீல உடை தரித்த முதியவர் லெலெவேலின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது.

 

கோடைகாலத்தில் ஜெர்மன் தத்துவம் பற்றிய விமர்சன நூல் எழுதும் பணியில் ஏங்கெல்ஸ் கார்லுடன் சேர்ந்து ஈடுபட்டார். இந்த நூல் எழுதுவதற்கு வெளித்தூண்டல் தனிநபரும் அவரது உடமையும் என்ற நூலின் வெளியீடேயாகும். இந்த விமர்சன நூல் கனமானதாக இருந்தது. வெஸ்ட்பாலியாவில் பிரசுரிக்க வேண்டியிருந்தது.

 

    இளவேனிற் காலத்தில் யோஸிப் வெய்டெமையர் முதன் முதலாக வருகை தந்து எங்களது விருந்தினராக சில நாட்கள் தங்கினார். ஏப்ரல் மாதத்தில் என் அருமைத் தாயார் தனது நம்பகமான பணிப்பெண்ணை எனக்கு உதவும் பொருட்டு பிரஸ்ஸெல்ஸிற்கு அனுப்பி வைத்தார். அவளுடன் நான் என் தாயாரைப் பார்க்க மீண்டும் ஒரு முறை சென்றேன். 14 மாதக் குழந்தையாக இருந்த ஜென்னியையும் அழைத்துச் சென்றேன். தாயாருடன் ஆறு வாரங்கள் தங்கிவிட்டு லௌரா பிறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக எங்கள் சிறிய குடியிருப்புக்குத் திரும்பிவந்தேன். லௌரா செப்டம்பர் 26ந்தேதி பிறந்தாள். எனது சகோதரர் எட்கார் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குளிர் காலத்தில் எங்களுடன் பிரஸ்ஸெல்சில் தங்கியிருந்தார். அவர் ஸைலர் கடிதப் போக்குவரத:து அலுவலகத்தில் சேர்ந்தார். பின்னால் இளவேனிற் காலத்தில் எமது பிரியமிக்க வில்ஹெல்ம் வோல்ப் இந்த நிறுவனத்தில் சேர்ந்தார். அவர் Òசிறைப் பறவை வோல்ப்Ó என்ற பெயரில் அறிமுகமாகியிருந்தார். ஏனென்றால் அவர் சிலேஸியாவிலுள்ள கோட்டை ஒன்றில் பத்திரிகை சட்டத்தை மீறியதற்காக நான்கு வருடங்கள் அடைபட்டிருந்து அங்கிருந்து தப்பிவந்தவர். அவர் எம்மிடம் வந்தது எங்கள் அருமை Òலூப்புஸ்Ó உடன் கொண்ட நெருங்கிய நட்புறவின் துவக்கமாக இருந்தது. இந்த நட்பு 1864 மே மாதம் அவர் காலமாகும்வரை நீடித்தது. குளிர் காலத்தில் கியோர்க் யூங், டாக்டர் Ô¢லெஹெர் முதலியோர் வருகை தந்தார்கள்.

 

   இதற்கிடையில் புரட்சியின் புயல் மேகங்கள் மேலும் மேலும் அடுக்கடுக்காக உயர்ந்து வந்தன. பெல்ஜிய வானமும் இருண்டிருந்தது. எல்லாவற்றையும்விட பொதுமக்கள் கூட்டத்தின் சமூக அங்கங்களாகிய தொழிலாளர்களை பற்றித்தான் அஞ்சப்பட்டது. அவர்களுக்கு எதிராக போலீஸ், ராணுவம், ஊர்க்காவல்படைகள் எல்லாம் ஏவப்பட்டு செயல்படுவதற்கு தயாராக இருந்தன. தாங்களும் ஆயுத பாணிகளாவதற்கு உரிய நேரம் வந்துவிட்டது என்று ஜெர்மன் தொழிலாளர்கள் முடிவு செய்தார்கள். வாளாயுதங்களும், கைத்துப்பாக்கிகளும் திரட்டப்பட்டன. கார்ல் இவற்றுக்கு விருப்பத்துடன் பணம் கொடுத்தார். ஏனெனில் அப்பொழுதுதான் அவருக்குத் தலைமுறைச் சொத்து வந்திருந்தது. இவற்றில் எல்லாம் சதிகளும் குற்றகரமான திட்டங்களும் இருப்பதாக அரசாங்கம் கண்டது. மார்க்ஸ் பணம் பெறுகிறார், ஆயுதங்கள் வாங்குகிறார். எனவே, அவரை ஒழித்துவிட வேண்டும் என்று எண்ணியது.

 

  நடு இரவில் இரண்டு மனிதர்கள் எங்கள் வீட்டுக்குள்ளே திடீரென வந்தார்கள். கார்லை வரச் சொன்னார்கள். அவர் வந்தவுடன், தாங்கள் போலீஸ் அதிகாரிகள் என்றும், அவரை கைதுசெய்து, விசாரணை செய்ய கொண்டு போவதற்கு வாரண்ட் இருப்பதாகவும் சொன்னார்கள். அவரை வெளியெ கொண்டு போய்விட்டனர். அவர் பின்னால் மிகவும் கவலையுடன் விரைந்து போனேன். செல்வாக்குடைய மனிதர்களைக் கண்டு என்ன  விஷயம் என்று கேட்டறிய முயன்றேன். இருளில் வீடு வீடாகச் சென்று கொண்டிருந்தேன்.

 

  திடீரென்று ஒரு காவல் அதிகாரி என்னைப்பிடித்து, கைது செய்து, இருண்ட சிறைக்குள் தள்ளிவிட்டார். இது வீடற்ற பிச்சைக்காரர்கள், நாடோடிகள், நீசத்தனமான தீய ஒழுக்கப் பெண்கள் ஆகியோர் காவலில் வைக்கப்படும் இடம். நான் ஒரு இருட்டறைக்குள் தள்ளப்பட்டேன். நான் அழுதுகொண்டே உள்ளே நுழைந்தபோது மகிழ்ச்சியற்று துயரத்தில் இருந்த ஒரு சகப்பெண் தன் இடத்தில் எனக்கு இடமளித்தாள். அது ஒரு முரடான பலகையாலான படுக்கை. நான் அதில் படுத்தேன். காலை புலர்ந்ததும் எனக்கு முன் இருந்த ஜன்னலின் வழியே இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் ஒரு வாட்டமுற்ற, சவம் பொன்று வெளிரடைந்திருந்த முகத்தைப் பார்த்தேன். நான் ஜன்னலருகில் சென்று பார்த்தபோது இவர் எங்கள் பழம்பெரும் நண்பர் ஜிகோ என்பதை கண்டறிந்தேன். என்னை அவர் கண்டவுடன் எனக்கு சைகை செய்து கீழ்ப்பக்கத்தை சுட்டிக் காட்டினார். அந்தத் திசையில் நான் பார்த்தேன். காரலை ராணுவ காவலாளிகள் அழைத்துச் செல்லப்பபடுவதைக் கண்டேன். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு விசாரணை செய்யும் நீதிபதி முன் கொண்டு செல்லப்பட்டேன். இரண்டு மணி நேரம் கேள்விகள் கேட்ட பிறஎன்னிடத்திலிருந்து எவ்வித தகவலும் கிட்டாமல் போகவே ராணுவப் போலீசார் என்னை ஒரு வண்டிக்கு அழைத்துச் சென்றனர். மாலையில், பரிதாபத்துக்குரிய என்னுடைய 3 சின்னஞ்சிறு குழந்தைகளிடம் திரும்பினேன். இந்த விவகாரம் பெரிய பரபரப்பினை ஏற்படுத்தியது. எல்லா பத்திரிகைகளும் இது பற்றிய செய்திகளை வெளியிட்டன. சற்று நேரத்திற்குப்பிறகு கார்ல் விடுதலை செய்யப்பட்டார். உடனே பிரஸ்செல்ஸை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டார்.

 

  பாரிஸ் திரும்புவதென்று அவர் ஏற்கனவே உத்தேசித்திருந்தார். லூயி பிலிப் தம்மீது பிறப்பித்திருந்த நாடு கடத்தல் உத்தரவை ரத்து செய்யுமாறு தற்காலிக அரசாங்கத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார். அவருக்கு உடனடியாக ப்ளொக்கோன் கையொப்பமிட்ட பத்திரம் ஒன்று வந்தது. தற்காலிக அரசாங்கம் வெளியேற்ற உத்தரவை ரத்து செய்துவிட்டது என்று பலபடப் புகழ்ந்து எழுதப்பட்டிருந்தது. பாரிஸ் எங்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது. புதிய புரட்சியின் உதய சூரியன் கீழன்றி வேறு எங்கு நாங்கள் இத்தனை கனிவுடன் இயங்க முடியும்? நாங்கள் அங்கு செல்ல வேண்டும். வேறு வழியில்லை என்பதால் உடைமைகளை எல்லாம் அவசர அவசரமாக மூட்டை கட்டினேன். முடிந்தவற்றை விற்றேன். எனது வெள்ளித் தட்டுகள், உயர்ரகத் துணிகள் இருந்த பெட்டிகளை போக்லர் என்னும் புத்தக வியாபாரியிடம் ஒப்படைத்தேன். குறிப்பாக நான் புறப்படுவதற்காக செய்த தயாரிப்புகள் விஷயத்தில் அவர் உதவிகரமாக இருந்து துணைபுரிந்தார். இவ்வாறு மூன்றாண்டுகள் வசித்த பிரஸ்செல்ஸ் நகரை விட்டு புறப்பட்டோம். அன்று குளிரும் மந்தமுமான நாளாக இருந்தது. குழந்தைகளை கதகதப்பாக வைத்துக் கொள்வது கஷ்¢டமாக இருந்தது. கடைசி குழந்தைக்கு ஒரு வயதே முடிந்திருந்தது.

     

    1848 ஆம் ஆண்டுக்குப்பின் தொழிலாளர்கள் தங்களுக்கென்று தனி சங்கங்கள் அமைக்க வேண்டும் என்று கருதினர். அதுவரை ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களும் அரசியல் கட்சிகளின் பின்ணியில் தான் தங்கள் கோரிக்கைகளுக்கு போராட வேண்டிய சூழ்நிலை இருந்தது. தொழிலாளர்கள் ஒவ்வொரு நாட்டிலும் தங்களுக்கென்று தனி சங்கங்கள் அமைத்துக் கொண்டனர்.

 

  1862இல் லண்டனில் உலகப் பொருட்காட்சி நடந்தது. பிரான்ஸில் இருந்து தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். மே 5 ஆம் தேதி லண்டனில் ஒரு கூட்டம் நடந்தது. தொழிலாளர்கள், முதலாளிகளுடன் சமமாக பேச வேண்டும் என்றும் இருவரும் கருத்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்ற நோக்கம் இருந்தது.

 

  இதையடுத்து 1863 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி லண்டனில் ஒரு பெரிய கூட்டம் நடந்தது. ஆனால் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் எதுவும் நிறைவேறவில்லை. பின் 1864 செப்டம்பர் 28 ஆம் தேதி மார்ட்டின் ஹாலில் ஒரு கூட்டம் நடந்தது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், இத்தாலி முதலிய பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்தனர். தற்போதைய சமுதாய நிலையினை மாற்றியமைத்து ஒரு புதிய ஒழுங்கை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். இதில் சர்வதேச தொழிலாளர்கள் சங்கம் ஒன்றை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ‘‘முதல் இண்டர் நேஷனல்’’ உருவானது.

இதன் விதிகள், சட்ட திட்டங்கள் உருவாக்க ஐம்பது பேர் அடங்கிய ஒரு கமிட்டி உருவானது. இதில் மார்க்ஸ் ஜெர்மனிய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். சங்கத்தின் விதிகள், நோக்கங்கள் ஆகியவை குறித்து ஒரு திட்டம் தயாரித்தார். அதன்படி மார்க்ஸின் கைவண்ணத்தில் ‘‘கம்யூனிஸ்ட் அறிக்கை’’ தயாரானது.

 

  சர்வதேச சங்கத்தின் நோக்கம் யாதெனில், தொழிலாளர்கள் ஒன்றுபட்டு வேலை செய்தல், தொழிலாளர்கள் சம்பந்தமான புள்ளி விவரங்கள் சேகரித்தல், ஒரு நாட்டுக்குத் தொழிலாளர்களின் தேவை, தொழிலாளர்களின் நிலை, தொழிலாளர்களின் வேலைத் திட்டங்களை வகுத்தல் அதை மற்ற நாடுகளுக்கும் அறிவித்தல். தொழிலாளர்களின் வேலை விவரங்கள் குறித்து அவ்வப்போது அறிக்கைகள் மற்றும் பத்திரிகைகள் வெளியிடுதல், ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து நாட்டு தொழிலாளர்களும் கூடுதல் என்று நோக்கங்கள் வகுக்கப்பட்டன.

 

    சர்வதேச தொழிலாளர்கள் சங்கம் வேகமாக வளர ஆரம்பித்தன.

ஒவ்வொரு நாளும் கிளைச் சங்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. இந்த சங்கத்தின் செயல்பாடுகளை பார்த்து ஐரோப்பிய வல்லரசு நாடுகள் அஞ்சின. இந்த சங்கத்தின் வளர்ச்சிக்கு காரணம் மார்க்சிஸின் சலியாத உழைப்புத்தான்.

 

     1859ஆம் ஆண்டில் மார்க்ஸ் எழுதிய பொருளாதார கட்டுரைகள் நூலாக வெளிவந்தது. இதற்கு ஏங்கெல் முன்னுரை எழுதியிருந்தார். இந்த நூல் வெளியானவுடன் மார்க்ஸின் புகழ் உலகம் எங்கும் பரவியது. சிந்தனையாளர்கள் மத்தியில் மார்க்ஸ் பிரபலமாகத் தொடங்கினார்.

 

  மார்க்ஸின் 15 ஆண்டுகள் உழைப்பின் பயனாக 1867 செப்டம்பர் 14 ல் மூலதனம் நூலின் முதல்பாகம் வெளியானது. இதுகுறித்து ஏங்கெல்ஸ்க்கு மார்க்ஸ் அதிகாலை 2 மணிக்கு எழுதிய கடிதத்தில்

  ‘‘கடைசியில் இந்த முதல் பாகம் முடிந்தது. இதற்கு நீ ஒருவனே காரணம். என் நன்றியை ஏற்றுக்கொள். எனக்காக நீ தியாகம் செய்யாவிட்டால் இந்த நூலை தயாரித்திருக்க முடியாது என்று வந்தனத்துடனும் அன்புடனும் உன்னை ஆலிங்கனம் செய்து கொள்கிறேன். என் அரிய, உண்மையான நண்பனே உன்னை வாழ்த்துகிறேன்’’ என எழுதித் தனது இதயத்தை வெளிப்படுத்தினார்.

 

   இந்நூல் வெளியானது முதல் அறிஞர்கள் மத்தியில் பேரும் புகழும் மாக்ஸுக்கு கிடைத்தது. அதன்பின் மாக்ஸ் மூலதனத்தின் இரண்டாவது மூன்றாவது பாகங்களை கொண்டு வருவதில் முனைப்புடன் செயல்பட்டார். மார்க்ஸின் அயராத உழைப்பின் காரணமாக தலைவலி, தூக்கமின்மை, அஜீர்ணம் உள்ளிட்ட பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டன. மார்க்ஸின் உழைப்பின் சக்தி மெதுவாக குறைந்து கொண்டே வந்தன.

 

  1868 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி மார்க்ஸின் இரண்டாவது மகள் லாரா, டாக்டரும் மார்க்சீயப் பிரசாரருமான பால் பாபார்க்கை திருமணம் செய்து கொண்டார். 1872 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி மூத்தமகள் ஜென்னி (மூத்த மகள் பெயரும் ஜென்னிதான்) கம்யூனிச கோட்பாட்டில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த சார்லஸ் லாங்கேவைத் திருமணம் செய்து கொண்டார்.

 

  1869 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வர்த்தக நிறுவனத்திலிருந்து ஏங்கெல்ஸ் ஓய்வு பெற்றார். அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு மார்க்ஸ் குடும்பத்துக்கு உதவிசெய்தார். 1870 ஆம் ஆண்டு மான்செஸ்டர் நகரை காலி செய்துவிட்டு மார்க்ஸின் வீட்டின் அருகில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். ஏங்கெல்ஸின் வருகை மார்க்ஸுக்கு உற்சாகத்தை தந்தது. சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு இருவரும் வழிகாட்டி வந்தனர்.

 

  1871 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி, பாரீசில் தொழிலாளிகள் அந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். பாரீஸ் கம்யூன் பிரகடனம் செய்யப்பட்டது. வரலாற்றிலேயே முதல் முறையாக தொழிலாளி வர்க்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.

 

   நாட்கள் கடந்தன. மார்க்ஸையும் ஜென்னியையும் மாறி மாறி நோய்கள் துரத்தின.  1880 ஆம் ஆண்டில் ஜென்னி சுகவீனமடைந்தார். அவரை நுறையீரல் நோய் பாதித்தது.  1881 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மருத்துவர்கள் மார்க்ஸிடம் ஜென்னிக்கு ஈரலில் புற்றுநோய் இருப்பதாக கூறினர். மார்க்ஸுக்குப் பேரிடி விழுந்ததுபோல் இருந்தது.  அவரது இதயம் வெடிக்கும் நிலையில் இருந்து. நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியாது என்பது ஜென்னிக்கு தெரியவந்தும் அவர் நம்பிக்கையை கைவிடவில்லை.

 

   ஜென்னி, மார்க்ஸுக்கு எழுதிய கடிதத்தில்,  ‘‘கிடைக்கும் ஒவ்வொரு துருப்பையும் நான் பற்றிக்கொள்கிறேன். அதன் பிறகு மிகச் சிறந்த மருத்துவரே, நான் இன்னும் சிறிது காலம் வாழ ஆசைப்படுகிறேன்.’’ என எழுதினார். மார்க்ஸ் தனது எழுத்து வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஜென்னியின் அருகில் இருந்தார். இரவு பகலாக வேதனை பட்டுக் கொண்டிருந்த ஜென்னிக்கு மார்க்ஸ் ஆறுதல் கூறினார். அந்த சமயத்தில் மார்க்சுக்கும் நுரையீரலில் நோய் ஏற்பட்டது. இருவரும் சிகிச்சை பெற்றுவந்தனர். மருத்துவரின் ஆலோசனைப்படி இருவரும் தனித்தனியாக சிகிச்சை பெற்று வந்தனர். 1881 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ஜென்னி உயிர் துறந்தார்.

 

   ஜென்னி இறந்தபின் உயிர்நீத்த சில நிமிடங்களில் வீட்டுக்கு வந்த ஏங்கெல்ஸ். ஜென்னியின் உடலை கண்டு கண் கலங்கியிருந்த மார்க்ஸின் நிலையயைப் பார்த்து மிகவும் வருந்தினார். ஜென்னியை பிரிந்த மர்க்ஸும் நடை பிணமாக இருப்பதை உணர்ந்தார். 

 

   ஜென்னியின் மறைவுக்குப்பின் மார்க்ஸ் பதினைந்து மாதங்கள் தான் உயிருடன் இருந்தார். ஜென்னியின் நினைவு மார்க்ஸை வாட்டியது. மார்க்ஸை மீண்டும் மீண்டும் அலைக்களித்தது. 1883 ஆம் ஆண்டு

மார்ச் 14 ஆம் தேதி உலகின் ஒப்பற்ற தலைவன் மார்க்ஸ், தனது சாய்வு நாற்காலியில் மரணமடைந்தார். ஹைகேட் இடுகாட்டில் ஜென்னி, மார்க்ஸின் உடல்கள் புதைக்கப்பட்டன.

 

-தொடரும்.............. 

by Swathi   on 30 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.