|
||||||||
வேண்டும் சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு -லோக்சட்டா |
||||||||
வேண்டும் சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு - லோக்சத்தா கட்சி
5 வருடத்திற்கு ஒரு முறையோ இல்லை அதைவிட குறைவான காலத்திலோ ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் வருகிறது. பிரச்சாரங்கள், கணிப்புகள், மக்கள் பிரச்சனைகள், கட்கிகள், வேட்பாளர்கள், முடிவுகள் என ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்னும் ஒரு கட்சி அதன் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆட்சி கட்டிலில் அமர்கிறது. ஆளுங்கட்சியில் இல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற கட்சி உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்கள், சட்டமன்ற கூட்டத்தில் பங்கெடுக்க வேண்டிய முக்கிய கடைமையை பெறுகிறார்கள்.
பெரும்பாலான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் மக்களை சந்திக்க வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பெரும்பான்மையாக உள்ளது. அதுவே உண்மையும் கூட. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் மக்களை சந்திக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் தன் மக்களின், தன் தொகுதியின் பிரச்சனைகளை அவர் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதே அதன் அர்த்தம். தெரிந்துகொள்வதன் அவசியம் என்ன?
தன் தொகுதி பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேசுவதும் அதற்கான தீர்வை அந்தத் துறை சார்ந்த அமைச்சரிடம் பெறுவதுமே அவரின் ஒரே அடிப்படையான வேலை. அதற்காக மட்டுமே அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அந்த கடைமை சரியாக நிறைவேறுகிறதா..? அதனை தெரிந்துகொள்ளும் உரிமை எனக்கு இருந்தாலும் தெரிந்துகொள்ள முடிகிறதா..? உண்மையை சொல்ல வேண்டுமெனில் அந்த கடைமை நிறைவேறலாம், இல்லை நிறைவேறாமல் இருக்கலாம். காரணம், என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என் தொகுதி பிரச்சனயை பேசுகிறாரா, பேசினாரா இல்லை எப்பொழுதேனும் பேசுவாரா என்பதை என்னால் பார்க்க முடியாது. உலகத்தின் மூலையில் நடக்கும் செயல் அனைத்தும் இன்று தொழில் நுட்பத்தின் துணையோடு என் வீட்டு வரவேற்பறையில் நேரடியாகவும், பதிவாகவும் தெரியும்பொழுது என் வீதிக்கு தரமான சாலை வருமா என்பதும், என் வீட்டிற்கு குடிநீர் வசதி கிடைக்குமா என்பதும் எனக்கு தெரியாது.
ஏன்? தொழில்நுட்பத்தில் ஏதேனும் குறைபாடா..? இல்லை. கண்டிப்பாக இல்லை. இந்திய பாராளுமன்றத்தின் ராஜ்ய சபாவிற்கும், லோக் சபாவிற்கும் பிரத்யேக தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளன. ஆந்திர சட்டமன்றம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கர்நாடக சட்டமன்ற ஒளிபரப்பு அனைத்து தனியார் தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்படுகிறது. கேரளா ஒரு படி மேலே சென்று கேரள முதல்வரின் அலுவலகம் 24 மணிநேரமும் நேரடி ஒளிபரப்பில் உள்ளது.
1996 ஆம் ஆண்டு திரு.பி.ஏ.சங்மா அவர்களின் தலைமையிலான ஒரு குழு சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப தேவையான கட்டமைப்புகளை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்தது.
நம்மை சுற்றி இருக்கும் மாநில சட்டமன்றங்கள் இவ்வாறு இருக்க நம் தமிழகம்? தமிழகத்தில் 'கவர்னர் உரை', 'பட்ஜெட் தாக்கல்' இவை இரண்டு மட்டுமே நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எங்கள் லோக் சத்தா கட்சி ஒரு சில தனியார் தொலைகாட்சிகளிடம் பேசிய பொழுது மாநில அரசு ஒவ்வொரு சட்டமன்ற தொடரின் பொழுதும் குறிப்பிட்ட சில பதிவுகளை மட்டுமே வழங்கி வருவது தெரிய வந்தது. ஏன் இந்த பாரபட்சம்? அல்லது நாம் தெரிந்துக்கொள்ள வேண்டாத செயல் எதுவும் அங்கே அரங்கேறுகிறதா..?
கர்நாடக சட்டமன்றத்தில் நடந்த வெறுக்கத்தக்க காட்சிகளை நாடறியும். தமிழக எதிர்க்கட்சி தலைவர் 10 நாட்கள் சட்டமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார். பட்ஜெட் கூட்டத் தொடரில் அவர் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே 10 நாட்கள் இடைநீக்கம் என செய்தி கசிகிறது. தி.மு.கவை சேர்ந்த ஒருவர் சட்டமன்ற நிகழ்வுகளை தன்னுடைய கைபேசியில் பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறார். இன்றைய முதல்வரும், முன்னாள் முதல்வரும் கடைசியாக சட்டமன்றத்தில் என்று சந்தித்தனர் என ஏழை வாக்காளன் வானம் பார்த்து நிற்கிறான். என் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்திற்கு ஒழுங்காக சென்று இதுவரை பேசினாரா என கண்டறிய நான் தொடர்ந்து முயற்சிக்கிறேன்..........
உடனடித் தேவை சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு. |
||||||||
by Partha on 21 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|