மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,000 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
சில தினங்களாக வட மாநிலங்களில் கன மழை பெய்து வருகின்றன. குறிப்பாக மலை பிரதேசமான உத்தரகண்ட் மாநிலத்தில் மழையின் கோர தாண்டவத்தால் பல லட்ச கணக்கானோர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர். மேலும் மலைச்சரிவுகள் ஆங்காங்கே ஏற்பட்டு மக்களின் உயிரை காவு வாங்குகின்றன. இதுவரை 500 சாலைகள், 170 பாலங்கள் ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளன. மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை, பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டனர். பின்னர் மாநில முதல்வர் விஜய் பகுகுணாவை டேராடூனில் உள்ள தலைமைச் செயலகத்தில் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து வெள்ள நிவாரணம் குறித்து விவாதித்தார். இதனை தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் பேசியதாவது, நாங்கள் வெள்ளச் சேதத்தை நேரில் பார்த்தோம். அது மிகவும் மனவேதனை அளிப்பதாக இருந்தது. வெள்ள பாதிப்புக்கு 102 பேர் உயிரிழந்து விட்டதாக சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவித்தபோதிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் ஆகிய வசதிகள் போர்கால அடிப்படையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. உத்தரகண்ட் பேரழிவு நிவாரணமாக ரூ.1,000 கோடி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ரூ.145 கோடி உடனடியாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். மாநிலத்தில் தேசிய பேரழிவு மீட்புப் படையைச் சேர்ந்த பல்வேறு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்திய விமானப்படை 18 ஹெலிகாப்டர்களையும் ஒரு சி-130 ரக விமானத்தையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
|