தமிழகத்துக்கு சோறுபோடும் தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்துக்கும் செம்பனார் கோயிலுக்கும் இடையில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் தில்லையாடி. இந்த கிராமத்தில் நெசவுத்தொழில் செய்து வந்த முனுசாமி&மங்கம்மாள் தம்பதியின் மகள் தான் வள்ளியம்மை. இயற்கை பொய்து காவிரி காய்ந்தது. உழைக்கும் மக்களுக்கு ஆடை தந்த நெசவாளர்களின் வயிறு வரண்டது. இந்தியாவைப்போலவே தென் ஆப்பிரிக்காவையும் அடிமைப்படுத்தி இருந்த ஆங்கிலேயர்கள் இயற்கை வளமிக்க அந்த நாட்டில் பண்ணைகளையும் தொழிற்சாலைகளையும் நிறுவினர். அந்த தொழிற்சாலைகளில் கூலி வேலைக்கு தஞ்சை நெசவாளர்கள் சென்றனர். அப்படி சென்றவர்களில் முனுசாமி& மங்கம்மாள் தம்பதியும் ஒருவர். அவர்கள் தென் ஆப்பிரிக்கா சென்றபோது மங்கம்மாள் கர்ப்பிணியாக இருந்தார். தென் ஆப்பிரிக்கா, ஜோகன்ஸ் பர்க் நகரில் பண்ணையில் வேலை பார்த்துவந்த முனுசாமி அத்துடன் காய்கறி கடையும் நடத்திவந்தார்.
1898ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி, வள்ளியமை பிறந்தார். வள்ளியம்மை குழந்தைக்கான அனைத்து குறும்புகளுடன் வளர்ந்தார். இந்தியக் கூலிகளை ஆப்பிரிக்க நீக்ரோக்களையும் ஆங்கில அரசு கொடுமை படுத்தியது. இந்தியக் கூலிகளை ஆங்கிலேயர்கள் நாயிற் கடையனாய் மதித்தனர். ஆங்கிலேயர்கள் சாப்பிடும் ஹோட்டல், பள்ளி என அனைத்து இடங்களிலும் இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். ஒரு சிலர் இதைவிட நமக்கு நற்கதி இல்லை என்று கருதி அடிமை மோகத்தில் வாழ்ந்தார்கள். தாதா அப்துல்லா என்பவர் மீது ஒரு கம்பெனி வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் ஆஜராக சாதாரண இளைஞராக இருந்த மகாத்மா காந்தி அழைக்கப்பட்டார். லண்டனில் சட்டம் படித்த மகாத்தமா, ஒரு திறமையான வழக்கறிஞர் என்பதை தாதா அப்துல்லா அறிந்திருந்தார். வழக்கிற்காக வந்த இடத்தில் ஆப்பிரிக்கர்களும் இந்தியர்களும் எப்படி அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட தீமைகளையும் கண்டு கொதித்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டங்களை தொடங்கினார் காந்தி. அத்தகையை போராட்டங்களுக்கு முனுசாமி தனது மகள் வள்ளியம்மையையும் அழைத்துச்சென்றார். காந்தியின் தேசப்பற்று மிக்க உரைகள் வள்ளியம்மை மனதில் விடுதலை வேட்கையை ஏற்படுத்தியது.
‘‘தென்னாப்பிரிக்காவில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் மட்டுமே சட்ட ரீதியான கணவன் & மனைவிகள். மற்ற முறைப்படி நடக்கும் திருமணங்கள் செல்லாது’’ என்று தீர்ப்பு வந்தது. இந்துக்கள், முஸ்லீம்கள் திருமணமான பெண்கள் சட்டப்பூர்வமான கணவன், மனைவி இழந்ததனர். இதனால் இந்தியர்களுக்கு பிறந்த குழந்தை வாரிசு உரிமையைக்கூட இழந்தது. இந்தக் கொடுமை இந்திய குடும்ப பெண்களை கொதிப்படையச் செய்தது. இந்த கொடுமையை எதிர்த்து போராட நாடு முழுவதும் உள்ள இந்தியர் ஓர் அணியாகத் திரண்டு கண்டனக் கூட்டங்கள் நடந்தன. அந்தக் கூட்டங்களில் அதிகளவில் பெண்கள் கலந்து கொண்டனர். 1913ம் ஆண்டு டால்ஸ்டாய் பண்ணைக் கூட்டத்தில் மகாத்மா காந்தி கூறுகையில், ‘‘ஜெயிலுக்கு சென்றால் உங்களுக்கு சரியான சாப்பாடு கிடைக்காது. கிடைக்கிற சாப்பாடும் உங்களுக்கு போதுமானதாக இருக்காது. சிறையில் தரும் துணிகளைத்தான் நீங்கள் அணிய வேண்டும். நிச்சயம் அவை உங்களுக்கு உகந்ததாக இருக்காது. உங்களுக்கு கடுமையான வேலைகள் தருவார்கள். அதை சரியாக செய்யாவிட்டால் உங்களை வார்டன்கள் அடித்து துன்புறுத்துவார்கள். மோசமான வார்த்தைகளால் திட்டுவார்கள். படுக்கவும் குளிக்கவும் மோசமான சூழ்நிலைதான் இருக்கும். வாந்தி வரவழைக்கும். சரியான மருத்துவ வசதி இருக்காது. இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியுமா? யோசியுங்கள்’’ என்றார்.
காந்தி பேசிய இந்தக் கூட்டத்தில் மொத்தம் 12 பெண்கள் இருந்தனர். அவர்களில் வள்ளியம்மையும் ஒருவர். மகாத்மா நினைத்ததற்கு மாறாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு, பெண்களை கைது செய்ய யோசித்தது. இக் கால கட்டத்தில் மகாத்மாவுக்கு வேறு ஒரு யோசனை தோன்றியது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ‘‘நேட்பிலிக் நியூ காலனி’’ என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கங்கள் அதிகளவில் இருந்தன. அதில் இந்தியத் தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்துவந்தனர். இந்திய தொழிலாளருக்களுக்கு வெள்ளை அரசாங்கம் மூன்று பவுன் தலைவரி விதித்தது. ஏற்கெனவே குறைந்த கூலிக்கு அடிமைகளாக வேலை பார்த்துவந்த இந்தியக் கூலிகளுக்கு அது பெரும் சுமையாக இருந்தது. காந்தி, அவர்களையும் போராட்டத்திற்கு தயார் படுத்தினார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முக்கிய மாணவர் வள்ளியம்மை. போராட்டத்தின் போது காந்தி வள்ளியம்மையைப் பார்த்து
‘‘இந்த சிறு வயதில் போராட்டத்திற்கு வந்திருக்கிறாயே இதன் மூலம் உனக்கு கிடைக்கும் கஷ்டத்தை நீ தாங்கிக் கொள்வாயா?’’
‘‘நம் மக்கள் நலனுக்காக நான் எந்தக் கஷ்டங்களையும் ஏற்ற சித்தமாக இருக்கிறேன்’’ என்று கூறினார் வள்ளியம்மை.
இந்தப் பதில் காந்திக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. 1913ஆம் ஆண்டு அக்டோபர் 20அம் நாள் மகாத்மாகாந்தி, பெண்கள் சத்தியாக்கிரக படை ஜோகன்ஸ்பர்க் நகரில் இருந்து நியூ காசில் நகருக்குப் புறப்பட்டது. இந்தப் படையில் இளம் வீராங்கணை வள்ளியம்மையும் அவரது தாயும் பங்கேற்றனர். சார்லஸ் டவுன், டண்டி, டர்பன் ஆகிய நகரங்களில் இந்தப் படை இரவு தங்கிச்சென்றது. பகல் முழுவதும் வள்ளியம்மை வீர முழக்கமிட்டப்படி வந்தார். இரவில் சத்தியா கிரகத்தில் பங்கேற்ற பெண்களுக்கு உணவு பரிமாறுவது. வயது முதிர்ந்த பெண்களுக்கு கை, கால்கள் அமுக்கி விடுவது உடல் நிலை பாதித்த பெண்களுக்கு தேவையான மருந்துகள் தருவது என கிட்டத்தட்ட செவிலிப் பெண்ணைப்போல் பணியாற்றினார்.
சத்தியாகிரகப் போராட்டக்காரர்கள் திட்டமிட்டபடி நியூகாசில் நகரை அடைந்தனர். தொழிலாளர்கள் பலரை போராட்டத்திற்கு திரட்டினர். அங்கிருந்த தமிழர்களிடம் வீரமாக தமிழில் பேசி அவர்களை போராட்டத்துக்கு தயார்படுத்தினார் வள்ளியம்மை. சிரிய பெண்ணுக்கே இத்தகைய துணிவா? என்று வள்ளியம்மையின் பேச்சை கேட்டவர்கள் ஆச்சர்யமடைந்தனர். அதற்கும் மேலும் இவர்களைவிட்டால் பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டும் என்று கருதிய ஆங்கில அரசு அவர்களை 1813ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி டிரான்ஸ்வால் நகரில் அனைரையும் கைதுசெய்தது. கைது செய்யப்பட்ட அனைவருக்கும் 3 மாத கடுங்காவல் தண்டனை விதித்தது. ‘‘பிட்டர்ஸ் பர்க்’’ என்ற நகரத்தில் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பெணகள் சிறையில் அடைக்கப்பட்டதும் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண்கள் கொலைகாரர்கள், கொள்ளையர்கள், திருடர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டனர். மோசமான உணவு கொடுத்து அனைவரும் வேலை வாங்கப்பட்டனர்.
சிறையில் வள்ளியம்மையை காந்தி சந்தித்துப் பேசினார்.
‘‘நீ சிறை சென்றதற்கும் நோயுற்றதற்கும் வருந்துகிறாயா?’’
‘‘வருந்துவதா? மீண்டும் நமது உரிமைகளுக்காக சிறை செல்லவும் தேவையானால் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன்’’ என்றாள்.
இந்தியன் ஒப்பீனியன் என்ற இதழில் காந்தி வள்ளியம்மை குறித்து எழுதுதியது:
‘‘இந்தியாவின் புனித மகள் ஒருத்தியை இழந்துவிட்டதற்காக வருந்துகிறோம். ஏன் எதற்கு என்று கேட்காலம், தனது கடமையை உணர்ந்து ஆற்றிய காரியை வள்ளியம்மை. மாதர்களுக்கு அணிகலன்களான துன்பத்தை சகிக்கும் மனோபாவம், தன்மானம், நல்லொழுக்கம் ஆகியவற்றின் முன்னுதாரணம். நம்பிக்கைதான் அவளது ஆயுதம். எனக்கு இருக்கும் கல்வியறிவு அவளுக்கு இல்லை. சத்தியாகிரகம் என்றால் என்னவென்று கூட வள்ளியம்மைக்குத் தெரியாது. சத்தியாகிரகத்தினால் என்ன நன்மை கிட்டும் என்பது கூட அவளுக்கு தெரியாது. ஆனால் தனது தாய்நாட்டு மக்களுக்காக எல்லையில்லாத உற்சாகத்தோடு அவள் சிறை சென்றாள்.’’ வள்ளியமை சிறையிலேயே நோயுற்றார். அவரது உடல் நிலையை காரணம் காட்டி கடிதம் கொடுத்தால் விடுவிக்கப்படுவார் என்னும் நிலை இருந்தது. வள்ளியம்மை கடிதம் கொடுத்து விடுதலைபெற விரும்பவில்லை. 1914ஆம் ஆண்டு 22ஆம் நாள் வள்ளியம்மையின் உயிர் பிரிந்தது. வள்ளியம்மையின் இறப்பு குறித்து காந்தி கூறுகையில்,
‘‘என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மை மரணம் எனக்கு பேரிடியாக இருந்தது’’ என்றார்.
‘‘வள்ளியம்மை தனது சேவையைக் கொண்டு தனக்கென ஓர் ஆலயத்தை அமைத்துக் கொண்டாள். அவளுடைய புனித உருவம் அனைவர் உள்ளங்களிலும் பதிந்து நிற்கும், இந்தியர் வாழும் வரை தென்னாப்பிரிக்க சத்தியாகிரக வரலாற்றில் வள்ளியம்மை பெயரும் நிலைத்து நிற்கும்.’’ என்று காந்தி குறிப்பிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில் நடந்த போராட்டத்தில் வள்ளியம்மை ஒரு விதையாக இருந்துள்ளார். (காலம் :1898 - 22.2.1914)
நன்றி : சூர்யா சரவணன்
|