கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பன்னாட்டுத் தமிழர் நடுவத்தைச் சேர்ந்தவர்களுடன் கம்போடிய அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குனர் மார்ன் சொப்ஹீப் மற்றும் அத்துறை அதிகாரி பொன் காமரா ஆகியோர், தஞ்சைப் பெரிய கோயில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஆகிய சோழர்கள் மற்றும் பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தொடர்ந்து 5 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது கம்போடிய அரசர்களுக்கும் பல்லவ, சோழ அரசர்களுக்கும் இடையே இருந்த நெருங்கிய தொடர்புகள் கண்டறியப்பட்டன.
இதைத் தொடர்ந்து, கம்போடிய அரசின் கலைப் பண்பாட்டுத் துறை அதிகாரிகளும், பன்னாட்டுத் தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலமும் சென்னை செய்தியாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பின்போது, கம்போடிய அதிகாரிகள் கூறியதாவது:
திருக்குறளை கெமர் மொழியில் மொழிப்பெயர்த்து கம்போடிய பள்ளிப் பாடங்களில் இணைக்கப்படும். ராஜேந்திர சோழனுக்கும், இரண்டாம் நந்திவர்மனுக்கும் கம்போடியாவில் சிலை வைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பன்னாட்டுத் தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கம்போடிய மன்னர்கள் ஒரு தனி ஸ்டைலில் அமருவார்கள், தமிழகத்திலுள்ள சிலைகளில் நந்திவர்ம பல்லவன் அதே ஸ்டைலில் அமர்ந்திருப்பதால் அவர் கம்போடிய மன்னர்தான் என்று எங்களுடன் சுற்றுப்பயணம் செய்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
6-ம் நூற்றாண்டில் கேமர் பேரரசை ஆட்சி செய்த மகேந்திர வர்மன் தான் பல்லவ தேசத்திற்கும் மன்னனாக இருந்ததற்கான அத்துணை அடையாளங்களும் மாமல்ல புரத்தில் இருந்தது கண்டு பெரிதும் ஆச்சரியப்பட்டனர்.
ராஜேந்திர சோழன் கம்போடிய மன்னர்களுக்கு உதவி செய்ததால் அவருக்கு சிலை வைக்க பன்னாடுத் தமிழர் நடுவம் திட்டமிட்டால், கம்போடிய மன்னன் இரண்டாம் ஜெயவர்மனோடு சேர்த்து ராஜேந்திர சோழனுக்கும் கம்போடியாவில் சிலை வைத்துக் கொள்ளலாம் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கும், இரண்டாம் நந்திவர்மனுக்கும் சிலை அமைக்கப்பட்டு அடுத்த ஆண்டு (2020) மே மாதம் சிலைகளின் திறப்பு விழா நடைபெறும். இச்சிலைகள் திறப்பு விழாவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 25 ஆயிரம் தமிழர்கள் கலந்து கொள்வார்கள். இதன் மூலம் இந்தியா- கம்போடிய நட்பு மேம்படுத்தப்படும்.
கம்போடிய பள்ளிப் பாடத்திட்டத்தில் சோழ, பல்லவ பேரரசுகளின் வரலாறும் பாடமாக இணைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு திருத்தணிகாசலம் கூறினார்
|