|
|||||
ஆம் ஆத்மி மூட்டியிருக்கும் டெல்லி தீ மற்ற மாநிலங்களில் பரவுவது சாத்திமா? அது பயன்தருமா? |
|||||
சாராயம், கோழி பிரியாணி, வாரிசு, சாதி, மதம், ஓட்டுக்கு பணம், வீட்டிற்கு புடவை இல்லாமல் துடைப்பம் சின்னம் கொண்டு தலைநகர் டெல்லியை கூட்டியிருக்கும் ஆம் ஆத்மி அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களை சமூக அக்கறை உள்ள அனைவரும் இருகரம் கூப்பி அரசியல் களத்திற்கு வரவேற்போம். அவரின் அசாதாரண தன்னம்பிக்கை, பிரச்சினைகளை எதிர்கொண்ட விதம் மிகவும் பாராட்டத்தக்கது. ஆம் ஆத்மி கட்சி ஆரம்பித்தது முதல் இவருக்கு எல்லாத் திசைகளில் இருந்தும் தாக்குதல்கள் வந்தன. அரசியலில் இறங்கவேண்டும் என்று முடிவெடுக்கும்முன் அதன் பின்விளைவுகளை, இப்படிப்பட்ட தாக்குதலை கேஜ்ரிவால் எதிர்ப்பார்த்திருப்பார் என்றே தோன்றுகிறது. இவரை காங்கிரஸின் கைக்கூலி என்றார்கள், வெளிநாட்டு ஏஜென்ட் என்றார்கள், சாதாரண குமாஸ்தா என்றார்கள், யார் கேஜ்ரிவால் என்றார்கள், முகத்தில் கருப்பு மையை எறிந்தார்கள், அடியாட்களை விட்டு அடிக்க முயன்றார்கள். போதாத குறைக்கு, மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்திய, பொது இயக்கத்துக்கு கேஜ்ரிவாலை இழுத்துவந்த அன்னா ஹசாரே நாளும் ஒரு குழப்பமான அறிக்கையை விட்டு பல்வேறு குழப்பங்களை வாக்காளர்களிடம் ஏற்படுத்தினார்.
இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் (IAC) இருந்து பிரிந்து ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கிய 13-ம் மாதத்திலேயே இந்தியாவின் தலை நகரம் டெல்லியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று. அதிலும் மக்களிடம் கட்சியை பிரபலப்படுத்த ஊழலை கையில் எடுத்து அதை வெளிக்கொண்டு வந்ததும், தலைநகரின் மின்சாரப் பிரச்சனையை கையிலெடுத்த விதமும் நிச்சயம் வித்தியாசமான அணுகுமுறைதான் .எவ்வித சுயநல நோக்கமும் இல்லாமல் பல ஆயிரம் இளைஞர்களை டெல்லி வீதியில் இறங்கி ஓட்டு கேட்க வைத்த பெருமை கேஜ்ரிவாலையே சேரும்.
அன்னாஹசாரேவைப் பொறுத்தவரையில், உண்ணாவிரதம் மட்டுமே இந்தியாவை மாற்றிவிடும் என்ற கருத்தில் இருந்தார். அதைத்தாண்டி அவர் பயணிக்க விரும்பவில்லை. ஊழல் செய்யும் இன்றைய அரசியல் கட்சிகளை வகுப்பு எடுத்து திருத்தி நல்லவர்களாக மாற்றி அதன்மூலம் ஒரு மாற்றத்தினை கொண்டுவர முடியும் என்று நம்பினார். மேலும் உண்ணாவிரதத்திற்கு காந்தி காலத்தில் வெளிநாட்டவரிடம் இருந்த மரியாதையை இன்றைய சுயநல அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது என்ற உண்மையை அன்னா அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இதுவே அவரின் அடுத்தடுத்த உண்ணாவிரதங்களில் மக்களைத்திரட்ட முடியாமல் போனதன் காரணம் என்று பத்திரிகைகள் எழுதின. இன்றைய நிலையில் இருந்த யாருக்கும் ஓட்டு போடாமல் இருப்பதும், இருப்பவர்களில் குறைந்த ஊழல் செய்தவருக்கு ஓட்டுபோடுவதும்தான் மக்கள் முன் இருந்த இரு வாய்ப்புகள். ஊழலில் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்கள் “பூனைக்கு யார் மணி கட்டுவார்கள்” என்ற மனநிலையில் இருந்தார்கள். அரசியல் தவிர்த்து உண்ணாவிரதம் ஒரு முழு மாற்றத்தினை ஏற்படுத்தாது என்பதை நன்கு உணர்ந்துகொண்ட கேஜ்ரிவால், காங்கிரஸ், பிஜேபி-யிடம் மன்றாடி புனிதர்களாக மாற்றி நல்லாட்சியை அடைவதில் உள்ள சிக்கலை உணர்ந்து, மாற்று வழியைக் கையில் எடுத்தார். இது சாதாரணமான வழி இல்லை , தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தன் குடும்பத்தை துறந்து, இரண்டு பலமான கட்சிகளிடம் இருந்து வரும் தாக்குதலை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் கொண்ட முடிவு. இதனால் தன் சொத்து, சுகங்களை இழக்கவேண்டியதும், தன் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுவதும், எந்தவித சிக்கலிலும் மாட்டாமல் செயல்படுவதும் மிகவும் முக்கியம். இனி அவரின் தனிப்பட்ட சுதந்திரம் குறையும், ஒவ்வொரு பேச்சும், செயலும் விமர்சனத்திற்குள்ளாகும். சுகமான தனிமனித வாழ்வில் இருந்து பொது வாழ்க்கையில் வருபவர்களுக்கு இவைகளை ஏற்கும் மனப்பக்குவம் மிகவும் வேண்டும். இது கேஜ்ரிவாலுக்கு இருப்பதாகவே அவரின் முதிர்ச்சியான நடவடிக்கைகள் தெரிவிக்கிறது.
கேஜ்ரிவாலின் இந்த வெற்றி, பரம்பரை பரம்பரையாக, அரசியல் ரதத்தில் சுகமாக சவாரி செய்துவரும் பழம் அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வயிற்றில் புளியைக்கரைக்கும் நிகழ்வாகும். காரணம், புறாவில் தூது அனுப்பும் காலம் போய், இன்று ஒரு செய்தியை சில நிமிடங்களில் ஒட்டுமொத்த உலகிற்கும் கொண்டு செல்லமுடியும் என்ற தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் அதன் தாக்கமும் அவர்கள் எதிர்ப்பார்க்காததுதான். இன்று ஒரு கட்சி ஆரம்பித்து ஆறுமாதம், ஒரு வருடத்தில் முதலமைச்சராக முடியும் என்பதும், இதற்கு ஐம்பது ஆண்டுகள் இயங்கும் கட்சிகளை அப்புறப்படுத்த ஒரு தேர்தல் போதும் என்ற நிலையும் இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், புதிய இளம் வாக்காளர்களின் வருகையும் ஏற்படுத்தி வரும் தாக்கமாகும். இவர்கள் இன்று சரியானவர்கள் யார் என்று கருதி வாக்களிப்பவர்கள். பச்சைக் குத்திக்கொண்டு இந்த உடல் மண்ணுக்குப் போகும் வரை இந்த மகராசனுக்குத்தான் ஓட்டு போடுவேன் என்ற சிந்தனையில் இருந்து மீண்டவர்கள்.
ஏதாவது ஒரு திசையில் இருந்து மாற்றம் வராதா என்று ஏங்கும் நாம் இந்த வெற்றியைக் கொண்டாடும் நிலையில் இருக்கிறோம். ஆனால், உற்று நோக்கினால் இதேபோன்ற சில நிகழ்வுகளை நாம் முன்பே சந்தித்ததுதான் என்பதை நன்கு அறிவோம். உதாரணமாக, 2011 தேர்தலில் வங்கத்தில் மம்தா , உத்தரப்பிரதேசில் அகிலேஷ், தமிழகத்தில் விஜயகாந்த் அடைந்த வெற்றியை நாம் இப்படித்தான் பார்த்தோம். குறிப்பாக தமிழகத்தில் ரஜினியை எதிர்பார்த்து அலுத்துப்போன இளைஞர்கள், கல்லூரி மாணவ/மாணவியர், நடுநிலையாளர்கள், அதிமுக, திமுகவை தவிர்த்து ஒரு மாற்றம் வரவேண்டும் என்று விரும்பியவர்கள், விருதகிரி படம் பார்த்து விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் இணைந்தவர்கள் அனைவரும் ஓட்டுபோட்டு ஒரு மாற்றம் வந்துவிட்டதாகவும், இந்தியாவின் வளர்ச்சிப்பாதை சிறப்பாக இருக்கும் என்றெல்லாம் பேசினார்கள். மக்கள் தெளிவாக முடிவு எடுத்திருப்பதாக பத்திரிகைகள் எழுதின. ஆனால் இன்று கிடைத்தற்கரிய எதிக்கட்சித் தலைவர் பதவியை விஜயகாந்த் எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதை தமிழக மக்களும், அகிலேஷ்-க்கு மாயாவதி பரவாயில்லையே என்று பேசிக்கொள்ளும் உத்தரப்பிரதேச மக்களும், மம்தா ஒரு மாற்றத்தையும் கொடுக்கவில்லை என்று பேசும் மேற்குவங்க மக்களும் பேசுவது நம் காதுகளில் ஒலிக்கிறது. எனவே இன்று ஆம் ஆத்மிக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை அவர்கள் எப்படி பயன்படுத்தப்போகிறார்கள் என்பதிலேயே நம் எதிர்பார்ப்பின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.
இன்று கேஜ்ரிவாலுடன் இருப்பவர்கள் படித்தவர்கள், சிந்தனைத் தெளிவு உள்ளவர்கள், ஒரு தலைமையின் கீழ், கட்சியின் கீழ் செயல்பட பழக்கப்பட வேண்டியவர்கள் என்பது எதார்த்தம். ஒவ்வொரு நாளும் கட்சி அல்லது தலைமை எடுக்கும் அனைத்து முடிவுகளும், இன்று தேர்வாகியிருக்கும் அனைவரும் தனிப்பட்ட கருத்துடன் ஒத்திருக்கும் என்று கருதமுடியாது. இந்த எதார்த்தத்தை புரிந்துகொண்டு, தங்களுக்குள் எவ்வித முரண்பாடும் கொள்ளாமல், மற்ற கட்சிகள் கொடுக்கும் நெருக்கடிகளுக்கும், ஆசைகளுக்கும் பணியாமல் கட்சியை கட்டிக்காக்கவேண்டும் என்ற கவலை நடுநிலையாளர்களுக்கு இருக்கிறது. மக்கள் இவர்கள் மேல் ஏகத்திற்கு கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய கடுமையாக உழைக்கவேண்டும். குறிப்பாக காங்கிரஸ், பிஜேபி-யை விட பல மடங்கு அதிகம் உழைத்து தன்னை உண்மையான மாற்றமாக நிலைநிறுத்தவேண்டும். இதை இங்கே குறிப்பிடக் காரணம், 2006-ல் ஐ.ஐ.டி இளைஞர்கள் ஆரம்பித்த “லோக் பரித்தன்” கட்சி ஆரம்பித்தபோது, ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் எழுதின, அது என்ன ஆனது? ஏன் அந்த முயற்சி தோல்வியைக் கண்டது என்ற படிப்பினை நம்மிடம் உள்ளது. படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் மாற்றம் வரும் என்ற நிலைமை பொய்த்து, அவர்களில் சிலர் பொதுக் கருத்தையும், தனிக்கருத்தையும் போட்டு குழப்பிக்கொண்டு ஒன்றுபட முடியாமல் திணறுவார்கள் என்பதை பல நேரங்களில் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்களைத் தாங்கி வந்த “மக்கள் சக்தி கட்சி” தமிழகத்தில் என்ன ஆனது என்பதை விபரம் அறிந்தவர்கள் நன்கு உணர்வார்கள். மேலும் இன்று ஆந்திர மாநிலத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய டாக்டர் ஜெயப்பிரகாஷ் நாராணன் அவர்களின் தலைமையில் தமிழகத்தில் இயங்கும் “லோக் சத்தா” கட்சி அதற்கென்று ஒரு வலுவான கருத்தைக் கொண்டுள்ளது. உதாரணமாக இக்கட்சி ஆம் ஆத்மி கட்சியுடன் FDI , அணு உலை போன்ற கருத்துக்களில் நேர் எதிர்க்கருத்தைக் கொண்டுள்ளது. எனவே, இவர்கள் ஒத்து பயணிப்பது வலுவான அரசியலுக்கு உகந்ததாக இருக்காது என்பதே எதார்த்தம். இல்லையேல் இவர்கள் பல சமரசங்களை செய்துகொண்டு முரண்பாடுகள் உள்ள திட்டங்களில் எந்த முடிவுக்கும் எடுக்காமல் ஆட்சியை தொடர வேண்டி வரும் .அப்படி செய்வது இப்போது இருக்கும் கட்சிகளுக்கு இணையான செயலாகக் கருதப்படும்.
மேலும், தேசிய சிந்தனை , கொள்கை உள்ள அரசியல், மாநில நலன்களுக்கு, மாநில உரிமைகளுக்கு சரிப்பட்டு வருமா என்ற ஒரு அடிப்படைக் கேள்வி இருக்கிறது. அமெரிக்கா, பாகிஸ்தான் அல்லது வேறு நாடுகளைப் போன்று ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் கொண்ட நாடு அல்ல இந்தியா. ஒவ்வொரு மாநிலமும் இன்னொரு மாநிலத்திற்கு எந்த விதத்திலும் மொழி, கலாச்சாரம், சிந்தனை ஆகியவற்றில் ஒன்றுபட்டு இல்லை என்பதை அனைவரும் அறிவோம். அமெரிக்காவில் ஒரு அமெரிக்கனாக, அல்லது குடியேறிய இந்தியனாக எவ்வித பிரச்சினையும் இன்றி எந்த மாநிலத்திற்கும் பயணிக்கலாம், கடைசிவரை வாழலாம். இந்தியாவைப் பொருத்தவரை மாநிலங்களுக்கிடையில் பல வாழ்வாதாரப் பிரச்சினைகள் காலம் காலமாக இருக்கிறது. இவைகள் பெரும்பாலும் நாடுகளுடன் இருக்கும் பிரச்சினைகளை விட மிகவும் சிக்கல் நிறைந்ததாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகக் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா, ஒக்கேனக்கல், காவிரி என பல பிரச்சினைகள் அண்டை மாநிலங்களுடன் இருக்கிறது. தமிழர்கள் இன்று சந்திக்கும் பல பிரச்சினைகள் மற்ற மாநிலங்களுக்கு சம்பந்தம் இல்லாத, தேவையில்லாத பிரச்சினையாக இருக்கிறது. குறிப்பாக நம் மீனவர் பிரச்சினை, மின்சாரத் தட்டுப்பாடு போன்றவை ஆந்திராவையோ, கேரளத்தையோ எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை. இதே நிலைமையே மற்ற மாநில இனம், மொழிப் பிரச்சினைகளுக்கு தமிழகம் பெரிய அளவில் கவலைப்படுவதில்லை. காரணம் அந்த அளவு ஒவ்வொரு மாநிலமும் தனித்தன்மையுடன் இருக்கிறது. இந்த நிலையில் , இந்தியாவின் எந்த மாநிலத்திற்கும், அரசியல் கருத்துக்களை , தலைவர்களை மற்ற மாநிலங்களில் இருந்ததோ, டெல்லியில் இருந்தோ இறக்குமதி செய்வது பயனை அளிக்காது என்பதை அரசியல் வரலாறு நமக்கு தெளிவுபடுத்தியுள்ளது. காரணம், இரு மாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினையில் தேசியக் கட்சிகள் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதுதான் அவர்களுக்கு சிறந்தது என்ற நிலையை நாம் அனுபவத்தில் உணர்ந்துள்ளோம். காரணம், அரசியல் என்பது கருத்து, கொள்கை சார்ந்தது என்பதை விட வாக்குவங்கியை சார்ந்தது. கொள்கையோ, கருத்தோ முக்கியம் எனில் ஒரு இயக்கமாக செயல்படமுடியும். ஆனால் ஒரு அரசியல் கட்சியானவுடன், தேர்தலும், அதில் மக்கள் அங்கீகாரமும்தான் முக்கியம். எனவே இந்த தடுமாற்றம் தவிர்க்கமுடியாதது. இனி எதிர்கால அரசியல் மாநிலம் சார்ந்த கட்சிகளால் மட்டுமே நடைபெறும், இன்று இருக்கும் தேசியக் கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக மாநிலக் கட்சிகளின் கட்டுபாட்டில் இயங்கும் நிலை வரும் என்பதும் அந்த நிலை ஏற்கனவே ஏற்பட்டுள்ளது என்பதையும் பார்க்கிறோம். உதாரணமாக, தமிழக சிந்தனையாளர் எம். எஸ். உதயமூர்த்தி சிந்தனைகளை வைத்துக்கொண்டு எக்காலத்திலும் கேரளாவிலும், ஆந்திராவிலும் போய் அரசியலில் வெற்றிபெற முடியாது. அதே நிலை அனைத்து மாநில அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்.
அரசியல் என்பது ஒரு நீண்ட பயணம். ஆம் ஆத்மி டெல்லியை முழுமையாக கவனித்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஆம் அத்மியை ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆரம்பிப்பதற்கு பதிலாக ஒவ்வொரு மாநிலங்களிலும் சிறப்பாக மக்கள் சேவை செய்யும் சிறு கட்சிகள், இயக்கங்களை அடையாளம் கண்டு, அவர்கள் மொழி ,காலாச்சாரங்களை ஒட்டிய அரசியல் கட்சியை உருவாக்க ஊக்கம் கொடுத்து, தேவையான ஆலோசனைகளை , கட்டமைப்புகளை ஏற்படுத்த உதவலாம்., இல்லையேல், திமுக பீகாரில் கட்சி ஆரம்பித்தால் என்ன நிலை ஏற்படுமோ, சமாஜ்வாதி கட்சி தமிழகத்தில் எப்படி அடையாளம் காண முடியவில்லையோ அதே நிலைதான் ஏற்படும் என்பதையும், அத்தகைய முயற்சிகள் எதிர்காலத்தில் மாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளில் சிக்கி காணாமல் போகும் என்பதையும் அறிய வேண்டும்.
எனவே, இன்றைய நிலையில், தமிழகத்தில் இருக்கும் இரு பெரும் கட்சிகளுக்கு மாற்றாக, வேறு மாநில தொடர்பில்லாமல் தமிழகத்திலேயே உருவான கட்சியாக, தமிழக நலனில் அக்கறைகொண்ட கட்சியாக ஒன்று வலுப்பெற வேண்டியது காலத்தின் கட்டாயம். அது வலுவான தலைமைப் பண்பு உடைய, அரசியல் தெளிவு உள்ள, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் கொண்ட, தன்னலம் இல்லாத, தமிழகப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் ஒருவரின் தலைமையில் இருந்தால் நலம் பயக்கும். அப்படி ஒரு கட்சி நம்மிடம் உள்ளதா?
வரும் நாடாளுமன்ற,சட்டமன்றத் தேர்தலைப் பொருத்தவரை, வாரிசு அரசியல் இல்லாத, ஊழல் வழக்குகளில் சிக்காத, அரசியல் முதிர்ச்சி உடைய, தமிழகம் தாண்டி அண்டை மாநிலத் தலைவர்களுடனும், மத்திய அரசுடனும் பேசி நம் மாநில உரிமையை நிலைநிறுத்தும், சாதி, மதம் பாராமல் அரசியல் செய்யும், பாமரர் முதல் படித்தவர்கள் வரை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைமையை தமிழகம் அடையாளம் காண்பது சாத்தியமா?
ச. பார்த்தசாரதி |
|||||
by Swathi on 10 Dec 2013 6 Comments | |||||
Tags: Aam Aadmi Party AAP Delhi Aam Aadmi Party ஆம் ஆத்மி கட்சி ஆம் ஆத்மி டெல்லி ஆம் ஆத்மி ஆம் ஆத்மி வெற்றி | |||||
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|