ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வேந்து அமைவு இல்லாத நாடு - வேந்தனோடு மேவுதல் இல்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே - மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும் நிறைந்திருந்ததாயினும், அவற்றால் பயனுடைத்தன்று.(வேந்து அமைவு எனவே, குடிகள் அவன்மாட்டு அன்புடையராதலும்,அவன்தான் இவர்மாட்டு அருளுடையனாதலும் அடங்கின. அவைஇல்வழி வாழ்வோர் இன்மையின், அவற்றால் பயனின்றாயிற்று. இவைஇரண்டு பாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
மேற்கூறியவற்றால் எல்லாம் அமைந்ததாயினும் பயனில்லையாம்; வேந்தனது அமைதியை உடைத்தல்லாத நாடு. இதுநாட்டுக்கு அரசனும் பண்புடையனாகல் வேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
வேந்து அமைவு இல்லாத நாடு-அரசனோடு பொருந்துத லில்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே-மேற் கூறியவாறு எல்லா நலங்களும் அமைந்திருந்ததாயினும் அவற்றாற் பயனில்லாததே யாகும். 'வேந்தமைவு' என்பது குடிகள் அரசனொடு பொருந்துதலும் அரசன் குடிகளொடு பொருந்துதலுமாகிய இருதலையன்பையுங்குறிக்கும். இனி, 'வேந்தமைவில்லாத' என்பதற்கு நல்லரசன் வாய்த்தலில்லாத என்றுரைப்பினுமாம். தந்தைக்கும் மக்கட்கும் நேர்த்தமில்லாத குடும்பம் கெடுவதுபோல, அரசனுக்கும் குடிகட்கும் நேர்த்தமில்லாத நாடு கெடும் என்பது கருத்து. இவ்விரு குறள்களாலும் நாட்டின் குற்றங் கூறப்பட்டது. உம்மை உயர்வு சிறப்பு. ஏகாரம் தேற்றம்.
கலைஞர் உரை:
நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை.
Translation
Though blest with all these varied gifts' increase,
A land gains nought that is not with its king at peace.
Explanation
Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujects.