|
|||||
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு |
|||||
ஒரு ஊரில் ஜெயராமன், லட்சுமணன் என்ற இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். நண்பர்கள் இருவரும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள். இருவரும் நல்ல செல்வந்தர்கள். ஆனால் குணத்தில் மட்டும் இருவரும் நேர்மாறானவர்கள். ஜெயராமன் யாருக்காவது ஒரு சிறு கஷ்டம் என்றாலும் உதவி செய்வதற்கு முன்னால் நிற்பான். ஊரில் உள்ள அனைவரும், அவனை “கலியுக கர்ணன்” என்று புகழ்வர். லட்சுமணன் அவனுக்கு நேர் எதிராக இருந்தான். அவனை அனைவரும், “சுயநலக்காரன்” என்று பழித்தனர். ஒரு நாள் ஜெயராமனும், லட்சுமணனும் அடுத்தடுத்த காட்டை விலைக்கு வாங்கினர். ஜெயராமன் தன் காட்டை அழித்து, கனிமரங்களை உருவாக்கினான். கிணறு வெட்டி அவற்றிற்கு நீர் பாய்ச்சினான். சில ஆண்டுகளுக்குப்பின் அந்த மரங்கள் கனிகளை வாரி வழங்கின. லட்சுமணன் தன் நண்பனைப் போல் காட்டை அழிக்காமல், மரங்களை நடாமல், அப்படியே விட்டு விட்டான். அதனால், அவனுடைய காட்டில் முள் புதர்கள் சேர்ந்து விட்டன. ஜெயராமன் தன்னுடைய பழத்தோட்டத்திற்கு போக வேண்டுமென்றால் லட்சுமணனின் காட்டு வழியாகத்தான் போக வேண்டும். ஒருநாள், ஜெயராமன், லட்சுமணனின் காட்டு வழியாகப் போய்க் கொண்டிருந்த போது, அவன் காலில் நாலைந்து முட்கள், “நறுக் நறுக்” என்று குத்தி ரத்தம் கொட்டியது. அதன் காரணமாக கோபம் கொண்ட ஜெயராமன், லட்சுமணனைப் பார்த்து திட்டினான். அதனால், இருவருக்கும் சண்டை உண்டாகி நட்பு முறிந்தது. அதனால் அவர்கள் அன்று முதல் பேசிக் கொள்வதேயில்லை. நாட்கள் சென்றன ஒருநாள் ஜெயராமன் தன் தோட்டத்தில் விளைந்த பழங்களை எல்லாம் பறித்து, ஊரிலுள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்கினான். மகிழ்ச்சி கொண்ட ஊர் மக்கள் அனைவரும் அவனை வாழ்த்தினர். இப்படியே ஊரிலுள்ளவர்கள் வாழ்த்த வாழ்த்த ஜெயராமனுக்கு புகழ் போதை தலைக்கேறியது. ஜெயராமன் ஊரையே அழைத்து ஆயிரக்கணக்கில் செலவு செய்தான். மக்களுக்கு தேவையானதை வாரி, வாரி இறைத்தான். இதனால் மக்களும் அவன் வீட்டு வாசலில் குவிந்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்து சேர்ந்த லட்சுமணன் கூட்டத்தினரை நோக்கி, “ஊர்மக்களே! நீங்கள் யாருடைய பணத்தில் ஆட்டம் போடுகிறீர்கள் தெரியுமா?” என்று கேட்டான். எல்லாரும் "திருதிரு" வென விழித்தனர். “இது என்னுடைய பணம்”. ஜெயராமன் தந்தை தன்னுடைய நிலங்களை எல்லாம், என் தந்தையிடம் விற்று பணம் வாங்கியிருந்தார். ஆனால், நட்பு காரணத்தால், ஜெயராமன் தந்தையின் நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ளாமல் விட்டுவிட்டார். என் தந்தை இறந்து போனபிறகு இந்த விஷயம் இதுவரை எனக்கு தெரியவில்லை. இன்று நான் என் தந்தையின் பழைய பெட்டியை குடைந்தபோது அதில் ஜெயராமனின் தந்தை என் தந்தைக்கு எழுதிக் கொடுத்த கிரயப் பத்திரத்தைக் கண்டு எடுத்தேன். “அதனால்... இன்றுமுதல் ஜெயராமனுடைய சொத்துக் கெல்லாம் நானே சட்டப் பூர்வமான சொந்தக்காரன். இதுவரை அவன் ஊருக் கெல்லாம் வாரி வழங்கினான். இனிமேல் நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன் எல்லாரும் வீட்டிற்கு போங்கள்,” என்று சொன்னான். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஜெயராமனுக்கு தலைசுற்றியது. மயக்கம் வருவது போலிருந்தது. குழம்பிப் போய் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தான். லட்சுமணன் பேச்சைக் கேட்ட ஊர் மக்கள் அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். மக்களை நோக்கி, “போகாதீர்கள் போகாதீர்கள்!” என்று கத்தினான் ஜெயராமன். அதற்கு அவர்கள்... “போய்யா! போ. இனியும் உன் பேச்சைக் கேட்பதற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. இனி நீயும் எங்களைப் போல் ஒரு ஏழைதான்,” என்று கூறிவிட்டு, “வாருங்கள் போகலாம்!” என்று ஒருவன் கையசைக்க, அனைவரும் அவனைத் தொடர்ந்து சென்றனர். அனைவரும் சென்றவுடன் தன்னிந்தனியாக கவலையோடு ஒன்றும் புரியாமல் நின்றிருந்த ஜெயராமனின் தோளில் தட்டிய லட்சுமணன், “வா உள்ளே போகலாம்,” என்றான். ஜெயராமன் எதிலும் விருப்பமின்றி, வெறுப்புடன் அவனுடன் சென்றான். வீட்டிற்குள் நுழைந்ததும் லட்சுமணன் வயிறு வலிக்கச் சிரித்தான். ஒன்றும் புரியாதவனாய் ஜெயராமன், லட்சுமணனை நோக்கி, “அதிர்ந்து விட்டாயா? உன் தந்தை என் தந்தையிடம் நிலங்களை விற்கவும் இல்லை. என் தந்தை வாங்கவும் இல்லை.” பிறகு நான் ஏன் பொய் சொன்னேன் என்று பார்க்கிறாயா? நீ இரக்கம் காரணமாக மக்களுக்கு கண்மூடித்தனமாக வாரி இரைத்தாய். உன்னைப் புகழின் உச்சியில் வைத்து மதுவை விட அதிகமான போதையை உண்டாக்கி உன்னால் லாபம் அடைந்து வந்தனர் ஊர் மக்கள். “அவர்களை அடையாளம் காட்டவே, இனி உன் சொத்துக்கெல்லாம் நானே சொந்தக்காரன் என்று சொன்னேன். இதைக் கேட்டு நீ ஒன்றுமில்லாதவன் என்று தெரிந்த ஊர் மக்கள் நீர் இல்லாத குளத்தை விட்டு காக்கைகள் பறந்து செல்வதைப் போல், உன்னை விட்டு ஓடிவிட்டனர். இந்த நன்றி கெட்டவர்களிடம் இனி, நீ எப்படி நடக்க வேண்டாம்?” என்றான் லட்சுமணன். “நண்பா! என்னை வஞ்சித்து வாழ்ந்தவர்களை உன்னால் அடையாளம் கண்டு கொண்டேன். புகழ் போதையில் மூழ்க இருந்த என்னை கைகொடுத்து தக்க சமயத்தில் காப்பாற்றி விட்டாய், உனக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை,” என்று நா தழுதழுக்க கூறினான் ஜெயராமன். என்ன குட்டீஸ் இந்த கதையின் மூலம், ஜெயராமன் என்கிற கதாபாத்திரம் நமக்கு விளக்கி இருப்பது என்னவென்றால், தானம் செய்தாலும், அதை அளவோடு தான் செய்ய வேண்டும் என்பதுதான். |
|||||
by Swathi on 19 Mar 2014 1 Comments | |||||
Tags: ஆற்றில் போட்டாலும் அளந்து போடு Be Just before you are Generous | |||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|