வடவனத்து ஒருநாள் மாறுபட்டு எதிர்ந்து வழிநடம் தனது மரக்கால் அன்றி முதல்தொழில் பதுமன் முன்னாய் அவ்வுழி மான்தலைக் கரத்தினில் கூடை வயக்கி தூக்கல் வளையுடன் தொடர்பதம் எறிந்து (5)
மற்றதன் தாள்அம் புத்திரி ஆக்கி நிமிர்த்தெறி காலில் கடைக்கண் கிடத்தி பாணியில் சிரம்பதித்து ஒருநடை பதித்து கொடுகொட் டிக்குக் குறிஅடுத்து எடுக்கும் புங்கம் வாரம் புடைநிலை பொறுத்து (10)
சச்ச புடத்தில் தனிஎழு மாத்திரை ஒன்றைவிட் டொருசீர் இரண்டுற உறுத்தி எடுத்துத் துள்ளிய இனமுத் திரைக்கு மங்கலப் பாணி மாத்திரை நான்குடன் சென்றெறிந்து ஒடுங்கும் துருமிடை திருத்தி (15)
ஞெள்ளலில் குனித்த இருமாத் திரைக்குப் பட்டடை எடுக்கப் புலுதம் பரப்பி புறக்கால் மடித்து குறித்தெறி நிலையம் பதினான்கு அமைத்து விடுமாத் திரைக்கு வன்மமும் பிதாவும் பாணியில் வகுத்து (20)
வட்டம் கொடுக்கும் இந்திரை பணிக்கு மாத்திரை ஆறுடன் கும்பம் பதித்து வலவை இடாகினி மண்இருந் தெடுத்த காலுடன் சுழல ஆடிய காளி நாணிநின் றொடுங்கத் தானும்ஓர் நாடகம் (25)
பாண்டரங் கத்தொரு பாடுபெற் றமைந்த மோகப் புயங்க முறைத்துறை தூக்கி அதற்குச் சாரணி அருட்கரம் ஒன்றில் பாணி இரண்டும் தாளம் ஆக்கி ஒருதாள் மிதித்து விண்உற விட்ட (30)
மறுதாள் மலரில் மலர்க்கரம் துடக்கி பார்ப்பதிப் பாணியைத் துடிமணி எடுப்ப சுருதியைத் தண்டி வலிகொண்டு அமைப்ப முதலேழ் அதனை ஒன்றினுக்கு ஏழென வீணை பதித்து தானம் தெரிக்க (35)
முன்துடி மணியில் ஒற்றிய பாணியை நாதம் கூட்டி மாத்திரை அறுத்து மாங்கனி இரண்டில் ஆம்கனி ஒன்றால் முன்ஒரு நாளில் முழுக்கதி அடைந்த அம்மைப் பெயர்பெறும் அருட்பேய் பிடிப்ப (40)
பூதமும் கூளியும் பேயும் குளிப்ப அமரர்கண் களிப்ப ஆடிய பெருமான் மதுரையம் பதிஎனும் ஒருகொடி மடந்தை சீறிதழ்ச் சாதிப் பெருமணம் போல நின்னுளம் நிறைந்த நெடுங்கற்பு அதனால் (45)
வினையுடல் புணர வரும்உயிர் பற்றிப் புண்ணியம் தொடரும் புணச்சி போல காலம்உற் றோங்கும் நீள்முகில் கூடி மணிதரு தெருவில் கொடிநெடுந் தேரும் நாற்குறிப் புலவர் கூட்டெழு நனிபுகழ் (50)
மருந்தயில் வாழ்க்கையர் மணிநகர் உருவின உருளெழு பூமியும் அவ்வுருள் பூண்ட கலினமான் துகளும் கதிர்மறை நிழலின் நின்றுமுன் இட்ட நிறைஅணி பொறுத்து பெருங்குலைக் கயத்துக் கருந்தாள் கழுநீர் (55)
நிறைவினுள் பூத்த தாமரை ஒன்றென நின்னுயிர் ஆய நாப்பண் மன்னுக வேந்தன் வரவினுக்கு எழுந்தே. (58)
|