ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியின் பொன் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விழாவில் பேசியதாவது,
பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு இரண்டு சான்றிதழ்களை வழங்க வேண்டும். அவற்றில் ஒன்று மதிப்பெண் சான்றிதழாகவும், மற்றொன்று உலகளாவிய திறன் மேம்பாட்டுச் சான்றிதழாகவும் இருக்க வேண்டும்.
இந்த இரண்டாவது சான்றிதழை வழங்குவதற்காக இப்போது இருக்கும் பாடத்திட்டத்தில் 25 சதவிகிதம் குறைத்து தொழில்திறன் மேம்பாடு உள்ளிட்ட பாடத்திட்டங்களை கற்பிக்க வேண்டும்.
மேல்நிலைப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மேல்நிலைக்கல்வியில் பல்வேறு பாடத்திட்டங்களைப் புகுத்தி தேவையற்ற பாடப்பிரிவுகளை அகற்றி தனித்திறன் வளர்க்கும் வகையிலான பாடத்திட்டங்களை தேர்ந்தெடுத்து படிக்க மத்திய,மாநில அரசுகள் வழி செய்தால் பள்ளிக் கல்வி மேலும் சிறக்கும்.
தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக்கல்வித் திட்டத்தில் மாற்றம் மிக அவசியம். பள்ளிக் கல்வியை மாணவர்களுக்கு நல்ல அனுபவக் கல்வியாக மாற்றினால் மட்டுமே தகுதி வாய்ந்த, அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.
மேலும் அப்துல் கலாம் பேசுகையில், "கனவு என்பது இளைஞர்களின் வாழ்வில் முக்கியமானது. கனவு தான் வாழ்க்கையில் தன்னம்பிக்கை தரக்கூடியது. ஒவ்வொரு இளைஞன் மனதிலும் லட்சிய விதை விதைக்கப்பட வேண்டும். அந்த விதை நாளைய வரலாற்றை உருவாக்கி இந்தியாவை வலிமை மிக்க தேசமாக மாற்றும் என அவர் பேசினார்.
|