கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான என்னை அறிந்தால் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால், கவுதம் மேனன் உற்சாகத்துடன் தனது அடுத்த பட வேலைகளில் களம் இறங்கியுள்ளார்.
என்னை அறிந்தால் படத்தை இயக்குவதற்கு முன் கவுதம் மேனன் சிம்பு வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வந்தார். இந்த படத்திற்கு சட்டென்று மாறுது வானிலை என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. சிம்பு ஜோடியாக பல்லவி சுபாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் சிம்பு படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அஜித் நடிக்கும் படத்தின் வேலைகளில் கௌதம் மேனன் பிஸியாகிவிட, இன்னொரு புறம் சிம்புவும் பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவுடன் இது நம்ம ஆளு படத்தில் நடிக்கப் போய்விட்டார்.
இந்நிலையில், என்னை அறிந்தால் படம் ரிலீஸானதையடுத்து சிம்புவின் படத்தை மீண்டும் தொடங்கவிருக்கிறார் கௌதம் மேனன். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 21ம் தேதி தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. மேலும் இப்படத்துக்கு எம்.ஜி.ஆர். பட பாடலான அச்சமென்பது மடமையடா என்ற தலைப்பை வைக்க ஆலோசனை செய்து வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிகின்றன.
|