LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1075 - குடியியல்

Next Kural >

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கீழ்களது ஆசாரம் அச்சமே - கயவரதாய ஆசாரம் கண்டது உண்டாயின், அதற்குக் காரணம் அரசனான் ஏதம் வரும் என்று அஞ்சும் அச்சமே; எச்சம் அவா உண்டேல் சிறிது உண்டாம் - அஃதொழிந்தால், தம்மால் அவாவப்படும் பொருள் அதனால் உண்டாமாயின் சிறிது உண்டாம். (ஆசாரத்தின் காரணத்தை 'ஆசாரம்' என்றும், அவாவப்படுவதனை 'அவா' என்றும் கூறினார். 'எச்சத்தின்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. பெரும்பான்மை அச்சம், சிறுபான்மை பொருட்பேறு, இவ்விரண்டானும் அன்றி இயல்பாக உண்டாகாது என்பதாம். வேண்டிய செய்தலே இயல்பு, ஆசாரம் செய்தல் இயல்பன்று என்பது இதனான் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கயவர் ஆசாரமுடையராதற்குக் காரணம் அச்சமே: அஃதொழிய ஒருபொருள்மேல் ஆசையுடையராயின் அது காரணமாகவும் சிறிது ஒழுக்கம் உண்டாம். இஃது இயல்பான ஒழுக்கம் இலரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
கீழ்களது ஆசாரம் அச்சமே - கீழ்மக்களது ஒழுக்கமெல்லாம் தீயொழுக்கங் கண்டுபிடிக்கப்படின் அரசனால் தண்டனைவரும் என்று அஞ்சும் அச்சத்தினால் ஏற்படுவதே; எச்சம் அவா உண்டேல் சிறிது உண்டாம் - அச்சமில்லாத வழியில், தம்மால் விரும்பப்படும் பயன் விளையுமாயின் அதனாற் சிறிது ஒழுக்கமுண்டாம். கீழ்மக்களின் ஒழுக்கம் பெரும்பாலும் அச்சமும் சிறுபான்மை தன்னலமும் பற்றியன்றி, இயல்பாக ஏற்படாதென்பதாம். ஆசாரத்தின் கரணியத்தை ' ஆசாரம் ' என்றும், அவாப்படுவதை 'அவா' என்றும், சார்த்திக் கூறினார். 'கீழ்கள்' ஆகுபெயர். ' எச்சம் ' இடப்பொருளுருபு தொக்கது.
கலைஞர் உரை:
தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.
Translation
Fear is the base man's virtue; if that fail, Intense desire some little may avail.
Explanation
(The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent.
Transliteration
Achchame Keezhkaladhu Aasaaram Echcham Avaavuntel Untaam Siridhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >