அமெரிக்கத் தமிழ் மையத்தின் இரண்டாம் ஆண்டு விழா நியூ ஹெவன் மாநகரில் அக்டோபர் 19- ஆம் தேதி மாலை 4 மணிக்குத் துவங்கி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்கத் தேசிய கீதத்துடன் தொடங்கிய அமெரிக்கத் தமிழ் மையத்தின் இரண்டாம் ஆண்டு விழாவிற்கு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வாழ்த்து மடல் அனுப்பியிருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. அவர் தமது வாழ்த்தில், தமிழ் உணர்வை வளர்க்கவும், தமிழர்களை ஒருங்கிணைக்கவும், தமிழர் நலன் காக்கவும் தங்கள் தமிழ் மையம் இடையறாது பணிகள் ஆற்ற விழைகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ் விழாவில் தமிழ் மையத்தின் தலைவரும் நிறுவனருமான முனைவர் பழனி சுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். இந் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சின்னக் கலைவாணர் நடிகர் விவேக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, திரைப்படப் பாடல்கள் சிலவற்றைப் பாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் குதூகலிக்க வைத்தார். தொழிலதிபரும் புரவலருமான திரு ஜெகதீசன் பூலா, நியூ யார்க் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகரும், முன்னாள் தலைவருமான திருமதி காஞ்சனா பூலா மற்றும் தொழிலதிபரும் புரவலருமான திரு ராகவன் கிருஷ்ணமூர்த்தி, கனெடிகட் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருமதி ஸ்ரீமதி ராகவன் ஆகியோர் நடிகர் விவேக் அவர்களுக்குச் சிறப்புச் செய்தனர். நியூ யார்க் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு விஜயகுமார் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். திருமதி கவிதா வேலவன் இந் நிகழ்ச்சியை அழகாகத் தொகுத்து வழங்கினார். இவ் விழாவிற்கு கனெடிகட், நியூ யார்க், நியூ ஜெர்சி, மேசசுசெட்ஸ் மற்றும் மேரிலாந்து போன்ற பல்வேறு மாகாணங்களிலிருந்து தமிழ்ப் பெருங்குடி மக்கள் பெருந்திரளாக வருகை புரிந்திருந்தனர். நியூ ஜெர்சி அனிதா கிருஷ்ணா இசைக் குழுவினர் ரசிகர்களை இசை வெள்ளத்தில் மூழ்கடித்தனர். பாடகர்கள் செந்தில் மற்றும் அனிதா ஆகியோரின் குரல் செவிக்கு விருந்தாய் அமைந்திருந்தது.
முன்னதாக, முனைவர் பழனி சுந்தரம் வரவேற்புரையாற்றுகையில், இந்தத் தமிழ் மையம் எதிர் காலத்தில் வெற்றி நடை போட்டுத் திகழும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதற்கு, இவ் விழாவே சாட்சி என்று கூறினார். தமிழ் ஆர்வலர்கள் பலரின் உதவியோடு இதை இன்னும் விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். நடிகர் விவேக் தமது சிறப்புரையில், மேதகு இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நல்லாசியுடன் துவங்கப்பட்ட இந்தத் தமிழ் மையத்தின் அடுத்த ஆண்டு விழாவிற்கு டாக்டர் கலாம் அவர்களே நேரில் வந்து வாழ்த்துவார் என்று எண்ணுகிறேன். ஏனெனில், டாக்டர் கலாம் அவர்களும் விஞ்ஞானி; இந்தத் தமிழ் மையத்தின் தலைவர் டாக்டர் சுந்தரம் அவர்களும் விஞ்ஞானி. ஒரு விஞ்ஞானி அழைத்தால் இன்னொரு விஞ்ஞானி நிச்சயம் வருவார் என்று தனக்கே உரிய பாணியில் கலகலப்பூட்டினார். தொடர்ந்து, இந்தத் தமிழ் மையம் மேன்மேலும் வளர தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். பின்னர் நடிகர் விவேக் மற்றும் இசைக் கலைஞர்களுக்கும் பின்னணிப் பாடகர்களுக்கும் அமெரிக்கத் தமிழ் மையத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இறுதியில் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
|