விருதுநகர் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. பாண்டியராஜன் முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து தொகுதி பிரச்சனை தொடர்பான மனு ஒன்றை அளித்தார். தே.மு.தி.க.வில் இருந்த 29 எம்.எல்.ஏ.க்களில் ஆர்.சுந்தரராஜன், தமிழழகன், மைக்கேல் ராயப்பன், அருண்பாண்டியன், சுரேஷ்குமார் , சாந்தி ஆகிய ஆறு பேரும் பேர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு தலைமைச் செயலகத்துக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். இவர்களைத் தொடர்ந்து மேலும் பல எம்.எல்.ஏக்கள் அதிமுகவை நோக்கி வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விருதுநகர் தொகுதியின் தேமுதிக எம்.எல்.ஏ பாண்டியராஜன் நேற்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். இவரும் முதல்வரை சந்தித்த ஆறு தேமுதிக எம்எல்ஏக்கள் போலவே, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் தொகுதி பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு மனு கொடுத்துள்ளார். ராஜ்யசபா தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக முதல்வருடன், தேமுதிக எம்.எல்.ஏக்களின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|