|
||||||||
அகநானூறு-15 |
||||||||
351. பாலை
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி,
பெறல் அருங் கேளிர் பின் வந்து விடுப்ப,
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்
அறிவுறூஉம்கொல்லோ தானே கதிர் தெற, 5
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை,
அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில்,
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம்,
மறுதரல் உள்ளமொடு குறுக, தோற்றிய
செய் குறி ஆழி வைகல்தோறு எண்ணி, 10
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண்
விலங்கு வீழ் அரிப் பனி பொலங் குழைத் தெறிப்ப,
திருந்துஇழை முன்கை அணல் அசைத்து ஊன்றி,
இருந்து அணை மீது, பொருந்துழிக் கிடக்கை,
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என 15
உள்ளுதொறு படூஉம் பல்லி,
புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே?
பொருள் முற்றி மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பொருந்தில் இளங்கீரனார்
352. குறிஞ்சி
'முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்,
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின்,
ஆடு மயில் முன்னது ஆக, கோடியர்
விழவு கொள் மூதூர் விறலி பின்றை 5
முழவன் போல அகப்படத் தழீஇ,
இன் துணைப் பயிரும் குன்ற நாடன்
குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்;
கெடு நா மொழியலன்; அன்பினன்' என, நீ
வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்; 10
நல்லை; காண், இனி காதல் அம் தோழீஇ!
கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி,
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்,
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன்
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும், 15
புதுவது புனைந்த திறத்தினும்,
வதுவை நாளினும், இனியனால் எமக்கே.
வரைந்து எய்திய பின்றை மண மனக்கண் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது; வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - அஞ்சியத்தை மகள் நாகையார்
353. பாலை
ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும்,
கேள், இனி வாழிய, நெஞ்சே! நாளும்
கனவுக் கழிந்தனையவாகி, நனவின்,
நாளது செலவும், மூப்பினது வரவும்,
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும், 5
இந் நிலை அறியாய்ஆயினும், செந் நிலை
அமை ஆடு அம் கழை தீண்டி, கல்லென
ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல,
கடு வெயில் திருகிய வேனில் வெங் காட்டு, 10
உயங்கு நடை மடப் பிணை தழீஇய, வயங்கு பொறி,
அறு கோட்டு, எழிற் கலை அறுகயம் நோக்கி,
தெண் நீர் வேட்ட சிறுமையின், தழை மறந்து,
உண்நீர் இன்மையின், ஒல்குவன தளர,
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து, 15
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய
விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர்,
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத்
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி, 20
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை,
நம்மொடு நன் மொழி நவிலும்
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே?
முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருள் முற்றி வந்திருந்த காலத்து, மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர ஞாழார் மகனார் மள்ளனார்
354. முல்லை
மத வலி யானை மறலிய பாசறை,
இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப,
வென்று கொடி எடுத்தனன், வேந்தனும்; கன்றொடு
கறவைப் புல்லினம் புறவுதொறு உகள,
குழல் வாய் வைத்தனர் கோவலர், வல் விரைந்து, 5
இளையர் ஏகுவனர் பரிய, விரி உளைக்
கடு நடைப் புரவி வழிவாய் ஓட,
வலவன் வள்பு வலி உறுப்ப, புலவர்
புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்து,
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய, 10
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின்,
யாண்டு உறைவதுகொல் தானே மாண்ட
போது உறழ் கொண்ட உண்கண்
தீதிலாட்டி திரு நுதற் பசப்பே?
வினை முற்றிய தலைமகற்கு உழையார் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார்
355. பாலை
மாவும் வண் தளிர் ஈன்றன; குயிலும்
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்;
மூதிலை ஒழித்த போது அவிழ் பெருஞ் சினை,
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்; 5
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்,
தாது உகு தண் பொழில் அல்கி, காதலர்
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
தானே வந்தன்றுஆயின், ஆனாது
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப் 10
புலந்தனம் வருகம்; சென்மோ தோழி!
'யாமே எமியம் ஆக, நீயே
பொன் நயந்து அருள் இலையாகி,
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே.
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார்
356.மருதம்
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை
உகு வார் அருந்த, பகு வாய் யாமை
கம்புள் இயவன் ஆக, விசி பிணித்
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன்
இடை நெடுந் தெருவில் கதுமெனக் கண்டு, என் 5
பொற் தொடி முன்கை பற்றினனாக,
'அன்னாய்!' என்றனென்; அவன் கை விட்டனனே,
தொல் நசை சாலாமை, நன்னன் பறம்பில்
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கற் போல் நாவினேனாகி, மற்று அது 10
செப்பலென் மன்னால், யாய்க்கே; நல் தேர்க்
கடும் பகட்டு யானைச் சோழர் மருகன்
நெடுங் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
நல்லடி உள்ளானாகவும், ஒல்லார்
கதவம் முயறலும் முயல்ப; அதாஅன்று, 15
ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது,
கொன்றனன்ஆயினும் கொலை பழுது அன்றே
அருவி ஆம்பல் கலித்த முன்துறை
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
மின் ஈர் ஓதி! என்னை, நின் குறிப்பே? 20
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பக் கூறியது.-பரணர்
357. பாலை
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய,
தட மருப்பு யானை வலம் படத் தொலைச்சி,
வியல் அறை சிவப்ப வாங்கி, முணங்கு நிமிர்ந்து, 5
புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி
பயில் இருங் கானத்து வழங்கல்செல்லாது,
பெருங் களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும்,
தீம் சுளைப் பலவின் தொழுதி, உம்பற்
பெருங் காடு இறந்தனர்ஆயினும், யாழ நின் 10
திருந்து இழைப் பணைத் தோள் வருந்த நீடி,
உள்ளாது அமைதலோ இலரே; நல்குவர்
மிகு பெயல் நிலைஇய தீம் நீர்ப் பொய்கை
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம்
காலொடு துயல்வந்தன்ன, நின் 15
ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
358. குறிஞ்சி
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின்,
காமர் பீலி, ஆய் மயில் தோகை
இன் தீம் குரல துவன்றி, மென் சீர்
ஆடு தகை எழில் நலம் கடுப்பக் கூடி,
கண் நேர் இதழ, தண் நறுங் குவளைக் 5
குறுந் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை
நீடு நீர் நெடுஞ் சுனை ஆயமொடு ஆடாய்,
உயங்கிய மனத்தையாகி, புலம்பு கொண்டு,
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி,
அன்னை வினவினள்ஆயின், அன்னோ! 10
என் என உரைக்கோ யானே துன்னிய
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி,
ஓடை யானை உயர் மிசை எடுத்த
ஆடு கொடி கடுப்ப, தோன்றும்
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே? 15
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
359. பாலை
'பனி வார் உண்கணும், பசந்த தோளும்,
நனி பிறர் அறியச் சாஅய், நாளும்,
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்,
நீடினர்மன்னோ, காதலர்' என நீ
எவன் கையற்றனை? இகுளை! அவரே 5
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது,
அருஞ் சுரக் கவலை அசைஇய கோடியர்,
பெருங் கல் மீமிசை, இயம் எழுந்தாங்கு,
வீழ் பிடி கெடுத்த நெடுந் தாள் யானை 10
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும்,
பொய்யா நல் இசை மா வண் புல்லி,
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந் தாள்
முதைத் சுவல் மூழ்கிய, கான் சுடு குரூஉப் புகை
அருவித் துவலையொடு மயங்கும் 15
பெரு வரை அத்தம் இயங்கியோரே!
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.-மாமூலனார்
360. நெய்தல்
பல் பூந் தண் பொழில், பகல் உடன் கழிப்பி,
ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன்
குடவயின் மா மலை மறைய, கொடுங் கழித்
தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல்
நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப, 5
வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து
உரு உடன் இயைந்த தோற்றம் போல,
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ,
வந்த மாலை பெயரின், மற்று இவள்
பெரும் புலம்பினளே தெய்ய; அதனால், 10
பாணி பிழையா மாண் வினைக் கலி மா
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி,
நெடுந் தேர் அகல நீக்கி, பையெனக்
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி,
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப! 15
இன மீன் அருந்து நாரையொடு பனைமிசை
அன்றில் சேக்கும் முன்றில், பொன் என
நல் மலர் நறு வீ தாஅம்
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே.
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்தது. - மதுரைக் கண்ணத்தனார்
361. பாலை
'தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும், 5
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்' என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
கரியாப் பூவின் பெரியோர் ஆர, 10
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
வெவ் அறை மருங்கின் வியன் சுரம், 15
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்
362. குறிஞ்சி
பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறைத்
தேம் கலந்து ஒழுக, யாறு நிறைந்தனவே;
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து,
பைங் கண் வல்லியம் கல் அளைச் செறிய,
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு 5
கடி கொள, வழங்கார் ஆறே; ஆயிடை
எல்லிற்று என்னான், வென் வேல் ஏந்தி,
நசை தர வந்த நன்னராளன்
நெஞ்சு பழுதாக, வறுவியன் பெயரின்,
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே; 10
எவன்கொல்? வாழி, தோழி! நம் இடை முலைச்
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும்,
சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிப்பின்
இலங்கு வெள் அருவி போலவும்,
நிலம் கொண்டனவால், திங்கள் அம் கதிரே! 15
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார்
363. பாலை
நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ,
அகல் இரு விசும்பில் பகல் செலச் சென்று,
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய,
பொழுது கழி மலரின், புனையிழை! சாஅய்,
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரைப் 5
புல் இலை நெல்லிப் புகர் இல் பசுங் காய்
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப,
பொலம் செய் காசின் பொற்பத் தாஅம்
அத்தம் நண்ணி, அதர் பார்த்து இருந்த
கொலை வெங் கொள்கைக் கொடுந் தொழில் மறவர் 10
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய,
வளை வாய்ப் பருந்தின், வள் உகிர்ச் சேவல்
கிளை தரு தௌ விளி கெழு முடைப் பயிரும்
இன்னா வெஞ் சுரம் இறந்தோர், முன்னிய 15
செய் வினை வலத்தர் ஆகி, இவண் நயந்து,
எய்த வந்தனரே தோழி! மை எழில்
துணை ஏர் எதிர் மலர் உண்கண்
பிணை ஏர் நோக்கம் பெருங் கவின் கொளவே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்
364. முல்லை
மாதிரம் புதையப் பாஅய், கால் வீழ்த்து,
ஏறுடைப் பெரு மழை பொழிந்தென, அவல்தோறு
ஆடு களப் பறையின் வரி நுணல் கறங்க,
ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன
நீடு இணர்க் கொன்றை கவின் பெற, காடு உடன் 5
சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ,
முல்லை இல்லமொடு மலர, கல்ல
பகு வாய்ப் பைஞ் சுனை மா உண மலிர,
கார் தொடங்கின்றே காலை; காதலர்
வெஞ் சின வேந்தன் வியன் பெரும் பாசறை, 10
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்;
யாது செய்வாம்கொல்? தோழி! நோதகக்
கொலை குறித்தன்ன மாலை
துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே!
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
365. பாலை
அகல் வாய் வானம் மால் இருள் பரப்ப,
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
சினவல் போகிய புன்கண் மாலை,
அத்த நடுகல் ஆள் என உதைத்த
கான யானைக் கதுவாய் வள் உகிர், 5
இரும் பனை இதக்கையின், ஒடியும் ஆங்கண்,
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை,
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
என்றூழ் வெஞ் சுரம் தந்த நீயே
துயர் செய்து ஆற்றாயாகி, பெயர்பு, ஆங்கு 10
உள்ளினை வாழிய, நெஞ்சே! வென் வேல்
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண்,
பூதம் தந்த பொரி அரை வேங்கைத்
தண் கமழ் புது மலர் நாறும்
அம் சில் ஓதி ஆய் மடத் தகையே. 15
தலைமகன் இடைச் சுரத்து நின்று சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
366. மருதம்
தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய
நீர் சூழ் வியன் களம் பொலிய, போர்பு அழித்து,
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி,
கடுங் காற்று எறிய, போகிய துரும்பு உடன்
காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின், 5
இரு நீர்ப் பரப்பின் பனித் துறைப் பரதவர்
தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின், சினைஇ,
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி,
இருஞ் சேற்று அள்ளல் எறி செருக் கண்டு,
நரை மூதாளர் கை பிணி விடுத்து, 10
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன,
நலம் பெறு பணைத் தோள், நல் நுதல் அரிவையொடு,
மணம் கமழ் தண் பொழில் அல்கி, நெருநை
நீ தற் பிழைத்தமை அறிந்து, 15
கலுழ்ந்த கண்ணள், எம் அணங்கு அன்னாளே.
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிய இடத்து,தோழி சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
367. பாலை
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து,
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து,
அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப,
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய,
முனை உழை இருந்த அம் குடிச் சீறூர், 5
கருங் கால் வேங்கைச் செஞ் சுவல் வரகின்
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை,
குவி அடி வெருகின் பைங் கண் ஏற்றை
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர்,
தளிர் புரை கொடிற்றின், செறி மயிர் எருத்தின், 10
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும், இனிது மன்றம்ம
நல் அக வன முலை அடையப் புல்லுதொறும்
உயிர் குழைப்பன்ன சாயல், 15
செயிர் தீர், இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - பரணர்
368. குறிஞ்சி
தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம்,
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து,
தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும்
ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய 5
குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை,
மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன்
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக்
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில்,
கடி சுனைத் தௌந்த மணி மருள் தீம் நீர் 10
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி,
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள்
கழியாமையே வழிவழிப் பெருகி,
அம் பணை விளைந்த தேக் கட் தேறல்
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர், 15
எவன்கொல் வாழி, தோழி! கொங்கர்
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன,
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே?
பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார்
369. பாலை
கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை:
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு,
மங்கையர் பல பாராட்ட, செந் தார்க்
கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல்
சேயிழை மகளிர் ஆயமும் அயரா; 5
தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக்
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப்
பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர,
இவை கண்டு, இனைவதன்தலையும், நினைவிலேன்,
கொடியோள் முன்னியது உணரேன், 'தொடியோய்! 10
இன்று நின் ஒலி குரல் மண்ணல்' என்றதற்கு,
எற் புலந்து அழிந்தனளாகி, தற் தகக்
கடல்அம் தானை கை வண் சோழர்,
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன,
நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து, 15
தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல்
ஓமை நீடிய உலவை நீள் இடை,
மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல்,
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த 20
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி,
'சிறப்பும் சீரும் இன்றி, சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ, 25
மேயினள்கொல்?' என நோவல் யானே.
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - நக்கீரர்
370. நெய்தல்
'வளை வாய்க் கோதையர் வண்டல் தைஇ,
இளையோர், செல்ப; எல்லும் எல்லின்று;
அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல்,
பகலே எம்மொடு ஆடி, இரவே,
காயல் வேய்ந்த தேயா நல் இல் 5
நோயொடு வைகுதிஆயின், நுந்தை
அருங் கடிப் படுவலும்' என்றி; மற்று, 'நீ
செல்லல்' என்றலும் ஆற்றாய்; 'செலினே,
வாழலென்' என்றி, ஆயின்; ஞாழல்
வண்டு படத் ததைந்த கண்ணி, நெய்தல் 10
தண் அரும் பைந் தார் துயல்வர, அந்தி,
கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு,
நீயே கானல் ஒழிய, யானே
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து,
ஆடு மகள் போலப் பெயர்தல் 15
ஆற்றேன்தெய்ய; அலர்க, இவ் ஊரே!
பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -அம்மூவனார்
371. பாலை
அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை,
செவ் வாய்ப் பகழி, செயிர் நோக்கு ஆடவர்
கணை இடக் கழிந்த தன் வீழ்துணை உள்ளி,
குறு நெடுந் துணைய மறி புடை ஆட,
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை 5
மேய் பதம் மறுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
நெய்தல்அம் படுவில் சில் நீர் உண்ணாது,
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்,
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம்,
எமியம் நீந்தும் எம்மினும், பனி வார்ந்து, 10
என்னஆம் கொல் தாமே 'தெண் நீர்
ஆய் சுனை நிகர் மலர் போன்ம்' என நசைஇ
வீ தேர் பறவை விழையும்
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே?
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்
372. குறிஞ்சி
அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப,
பெருந் தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை,
அணங்குடை வரைப்பின், பாழி ஆங்கண்,
வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த
அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து, 5
வருந்தினம்மாதோ எனினும், அஃது ஒல்லாய்,
இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல்,
ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி,
நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் 10
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்,
பெருந் துடி வள்பின் வீங்குபு நெகிழா,
மேய் மணி இழந்த பாம்பின், நீ நனி
தேம்பினை வாழி, என் நெஞ்சே! வேந்தர்
கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து, 15
ஈண்டு அருங்குரையள், நம் அணங்கியோளே.
அல்லகுறிப்பட்டுப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
373. பாலை
முனை கவர்ந்து கொண்டென, கலங்கி, பீர் எழுந்து,
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து,
பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சி,
செது காழ் சாய்ந்த முது காற் பொதியில்,
அருஞ் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று, 5
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர,
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப,
தாழ் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு,
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்;
இரும் பல் கூந்தல், சேயிழை, மடந்தை, 10
கனை இருள் நடு நாள், அணையொடு பொருந்தி,
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு, ஐது உயிரா,
ஆய் இதழ் மழைக் கண் மல்க, நோய் கூர்ந்து,
பெருந் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப் பனி
மெல் விரல் உகிரின் தெறியினள், வென் வேல் 15
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போல,
துயில் துறந்தனள்கொல்? அளியள் தானே!
பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
374. முல்லை
மாக் கடல் முகந்து, மாதிரத்து இருளி,
மலர் தலை உலகம் புதைய, வலன் ஏர்பு,
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ,
போழ்ந்த போலப் பல உடன் மின்னி,
தாழ்ந்த போல நனி அணி வந்து, 5
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி,
இடியும் முழக்கும் இன்றி, பாணர்
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன
இன் குரல் அழி துளி தலைஇ, நல் பல
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை, 10
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில்,
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி,
மணி மண்டு பவளம் போல, காயா
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய,
கார் கவின் கொண்ட காமர் காலை, 15
செல்க, தேரே நல் வலம் பெறுந!
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின்,
திருந்துஇழை, அரிவை விருந்து எதிர்கொளவே!
பாசறை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக்காடனார்
375. பாலை
'சென்று நீடுநர்அல்லர்; அவர்வயின்
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை!
அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர்
கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலை, 5
கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்,
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல்,
எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன் 10
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி
குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார்,
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி,
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி,
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும், 15
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர்
நோய் இலர் பெயர்தல் அறியின்,
ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - இடையன் சேந்தங் கொற்றனார்
351. பாலை |
||||||||
by Swathi on 29 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|