|
||||||||
அகநானூறு-5 |
||||||||
101. பாலை
அம்ம வாழி, தோழி! 'இம்மை
நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும்
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்?
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த
சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர் 5
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல்
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி,
நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து
அடி புதை தொடுதோல் பறைய ஏகி,
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர், 10
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு,
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல,
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை,
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர், 15
தண் கார் ஆலியின், தாவன உதிரும்
பனி படு பல் மலை இறந்தோர்க்கு
முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே!
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார்
102. குறிஞ்சி
உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும் புனத்துக்
கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென;
உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு
ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா,
ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி 5
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட;
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது,
படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்;
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப, 10
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன்,
காவலர் அறிதல் ஓம்பி, பையென
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,
உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து,
இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் தோழி! 15
இரவுக்குறிக்கண் சிறைப்புறமாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன்
103. பாலை
நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த
கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின்,
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி,
காமர் சேவல் ஏமம் சேப்ப;
முளி அரில் புலம்பப் போகி, முனாஅது 5
முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து,
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி,
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை,
இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும்
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி; தம்வயின் 10
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்மன் என,
நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக
நம்மொடு பசலை நோன்று, தம்மொடு
தானே சென்ற நலனும்
நல்கார்கொல்லோ, நாம் நயந்திசினோரே? 15
தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொற்றது.- காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
104. முல்லை
வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்
வென் வேல் இளையர் இன்புற, வலவன்
வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா 5
நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர்,
வாங்குசினை பொலிய ஏறி; புதல
பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன
உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி,
மாழ்கியன்ன தாழ் பெருஞ் செவிய, 10
புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக்
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை
இனிது செய்தனையால் எந்தை! வாழிய!
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் 15
ஆய் தொடி அரிவை கூந்தற்
போது குரல் அணிய வேய்தந்தோயே!
வினை முற்றி மீளும் தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகனார்
105 . பாலை
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென
நல் வரை நாடன் தற்பாராட்ட
யாங்கு வல்லுநள்கொல் தானே தேம் பெய்து,
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி, 5
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்,
நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின்
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம் மருண்டு,
பந்து புடைப்பன்ன பாணிப் பல் அடிச்
சில் பரிக் குதிரை, பல் வேல் எழினி 10
கெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார்,
கனை எரி நடந்த கல் காய் கானத்து
வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர்
தேம் பிழி நறுங் கள் மகிழின், முனை கடந்து,
வீங்கு மென் சுரைய ஏற்றினம் தரூஉம் 15
முகை தலை திறந்த வேனிற்
பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே?
மகட் போக்கிய தாய் சொல்லியது. - தாயங்கண்ணனார்
106. மருதம்
எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து,
பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன்,
வெறி கொள் பாசடை, உணீஇயர், பைப்பயப்
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை 5
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது
செய்யாம்ஆயினும், உய்யாமையின்,
செறிதொடி தௌர்ப்ப வீசி, சிறிது அவண்
உலமந்து வருகம் சென்மோ தோழி!
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் 10
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும்
களிறு பெறு வல்சிப் பாணன் எறியும்
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர், தன் வயிறே.
தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - ஆலங்குடி வங்கனார்
107. பாலை
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து,
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல், 5
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும் 10
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர்
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து,
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து,
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு 15
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல்
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர்
மாலை இன் துணைஆகி, காலைப்
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப, 20
மண மனை கமழும் கானம்
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே.
தோழி தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
108. குறிஞ்சி
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு
ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம்
வரைமுதல் சிதறிய வை போல், யானைப்
புகர் முகம் பொருத புது நீர் ஆலி
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப, 5
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின்
விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி,
படு மழை பொழிந்த பானாட் கங்குல்,
ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும்
இருளிடைத் தமியன் வருதல் யாவதும் 10
அருளான் வாழி, தோழி! அல்கல்
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின்
அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல்,
காயா மென் சினை தோய நீடிப்
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள் 15
அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி
கை ஆடு வட்டின் தோன்றும்
மை ஆடு சென்னிய மலைகிழவோனே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார்
109. பாலை
பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ்
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி,
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
காடு கால்யாத்த நீடு மரச் சோலை 5
விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை,
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர்
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச்
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டென,
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர், 10
கைப்பொருள் இல்லைஆயினும், மெய்க் கொண்டு
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப்
பெருங் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன் இல் வேந்தன் ஆளும்
வறன் உறு குன்றம் பல விலங்கினவே. 15
இடைச் சுரத்துத் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- கடுந்தொடைக் காவினார்
110. நெய்தல்
அன்னை அறியினும் அறிக; அலர்வாய்
அம் மென் சேரி கேட்பினும் கேட்க;
பிறிது ஒன்று இன்மை அறியக் கூறி,
கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி,
கடுஞ் சூள் தருகுவன், நினக்கே; கானல் 5
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்,
சிற்றில் இழைத்தும், சிறு சோறு குவைஇயும்,
வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது
இருந்தனமாக, எய்த வந்து,
'தட மென் பணைத் தோள் மட நல்லீரே! 10
எல்லும் எல்லின்று; அசைவு மிக உடையேன்;
மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு, யானும் இக்
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?'
என மொழிந்தனனே, ஒருவன். அவற் கண்டு,
இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி, 15
'இவை நுமக்கு உரிய அல்ல; இழிந்த
கொழு மீன் வல்சி' என்றனம், இழுமென.
'நெடுங் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ?' எனக் காலின் சிதையா,
நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் 20
என்னே குறித்த நோக்கமொடு, 'நன்னுதால்!
ஒழிகோ யான்?' என அழிதகக் கூறி,
யான் 'பெயர்க' என்ன, நோக்கி, தான் தன்
நெடுந் தேர்க் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் என்றும் என் மகட்கே. 25
தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. - போந்தைப் பசலையார்
111. பாலை
உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி
வருவர் வாழி, தோழி! அரச
யானை கொண்ட துகிற் கொடி போல,
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி 5
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர,
மழை என மருண்ட மம்மர் பல உடன்
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
அத்தக் கேழல் அட்ட நற் கோள் 10
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப,
குருதி ஆரும் எருவைச் செஞ் செவி,
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட
புண் தேர் விளக்கின், தோன்றும்
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே. 15
தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ
112. குறிஞ்சி
கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி
சிதலை செய்த செந் நிலைப் புற்றின்
மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி,
இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல்
ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி 5
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும்
பனி இருஞ் சோலை, 'எமியம்' என்னாய்,
தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே;
நாள் இடைப்படின், என் தோழி வாழாள்;
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை; 10
கழியக் காதலர்ஆயினும், சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்;
வரையின் எவனோ? வான் தோய் வெற்ப!
கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார், 15
தொன்று இயல் மரபின் மன்றல் அயர,
பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி,
நொதுமல் விருந்தினம் போல, இவள்
புது நாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே.
இரவுக்குறி வந்த தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி, வரைவு கடாயது. - நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர் கிழார்
113. பாலை
நன்று அல் காலையும் நட்பின் கோடார்,
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின்,
புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன்
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி,
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர் 5
இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து,
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற,
நல்காது துறந்த காதலர், 'என்றும்
கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி 10
அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர்
இகந்தனர்ஆயினும், இடம் பார்த்துப் பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்
கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல் 15
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர்,
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
எறிபடை கழீஇய சேயரிச் சில் நீர்
அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி, 20
சேயர்' என்றலின், சிறுமை உற்ற என்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
அழாஅம் உறைதலும் உரியம் பராரை
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப்
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு, 25
மெய் இவண் ஒழியப் போகி, அவர்
செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே!
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கல்லாடனார்
114. முல்லை
'கேளாய், எல்ல! தோழி! வேலன்
வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்,
உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு,
அரவு நுங்கு மதியின், ஐயென மறையும்
5
சிறு புன் மாலையும் உள்ளார் அவர்' என,
நப் புலந்து உறையும் எவ்வம் நீங்க,
நூல் அறி வலவ! கடவுமதி, உவக்காண்
நெடுங் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை,
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் 10
வானக மீனின் விளங்கித் தோன்றும்,
அருங் கடிக் காப்பின், அஞ்சு வரு, மூதூர்த்
திருநகர் அடங்கிய மாசு இல் கற்பின்,
அரி மதர் மழைக் கண், அமை புரை பணைத் தோள்,
அணங்கு சால், அரிவையைக் காண்குவம் 15
பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே.
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - .......
115. பாலை
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என் 5
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
நோய் இலராக, நம் காதலர் வாய் வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச் 10
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை,
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை,
சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை, 15
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு,
நம் நீத்து உறையும் பொருட்பிணிக்
கூடாமையின், நீடியோரே.
பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
116. மருதம்
எரி அகைந்தன்ன தாமரை இடை இடை
அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர்
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்,
ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர!
5 பெரிய நாண் இலைமன்ற; 'பொரி எனப் 5
புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல்,
நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல்,
மாழை நோக்கின், காழ் இயல் வன முலை,
எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை
வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே, 10
பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும், கையிகந்து
அலர் ஆகின்றால் தானே; மலர்தார்,
மை அணி யானை, மறப் போர்ச் செழியன்
பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் 15
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி,
இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர்
ஓடுபுறம் கண்ட ஞான்றை,
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே.
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர்
117. பாலை
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும்,
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள்,
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி,
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர,
5
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப்
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்,
பொலந்தொடி தௌர்ப்ப வீசி; சேவடிச்
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து; 10
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள்,
தன் ஓரன்ன தகை வெங் காதலன்
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட,
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம் 15
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே?
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - .........
118. குறிஞ்சி
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன்,
தேம் கமழ் இணர வேங்கை சூடி,
தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ,
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து,
இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட, 5
பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள,
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப்
பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள்
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும். 10
என் ஆகுவள்கொல்தானே? பல் நாள்
புணர் குறி செய்த புலர்குரல் ஏனல்
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்;
அளியள்தான், நின் அளி அலது இலளே!
செறிப்பு அறிவுறீஇ, 'இரவும் பகலும் வாரல்' என்று வரைவு கடாஅயது.- கபிலர்
119. பாலை
'நுதலும் தோளும், திதலை அல்குலும்,
வண்ணமும், வனப்பும், வரியும், வாட
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி,
'வரைவு நன்று' என்னாது அகலினும், அவர் வறிது,
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை, 5
ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப,
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள,
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து, 10
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை,
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை,
மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப,
துணிகுவர்கொல்லோ தாமே துணிகொள 15
மறப் புலி உழந்த வசி படு சென்னி
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி,
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை,
மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே? 20
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொற்றது; தோழி தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம். - குடவாயிற் கீரத்தனார்
120. நெய்தல்
நெடு வேள் மார்பின் ஆரம் போல,
செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும்
பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப,
எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின்
கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு 5
மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது,
அழல் தொடங்கினளே பெரும! அதனால்
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி 10
நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ,
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது,
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண், 15
சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே?
தோழி, பகற்குறிக்கண் தலைமகனை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது. - நக்கீரனார்
121. பாலை
நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல்
வேனில் நீடிய வான் உயர் வழிநாள்,
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத்
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி, 5
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு
செங் கோல் வால் இணர் தயங்கத் தீண்டி,
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து
அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு
தான் வரும் என்ப, தட மென் தோளி 10
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை
கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்,
கரு முக முசுவின் கானத்தானே. 15
தோழியால் தலைமகளை உடன்வரும் எனக் கேட்ட தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகன்
122. குறிஞ்சி
இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின், 5
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;
அர வாய் ஞமலி மகிழாது மடியின்,
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின் 10
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
வளைக்கண் சேவல் வாளாது மடியின், 15
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;
எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,
ஆதி போகிய பாய்பரி நன் மா 20
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டு அன்ன
பல் முட்டின்றால் தோழி! நம் களவே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகன் சொற்றது; தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - பரணர்
123. பாலை
உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
ஆடாப் படிவத்து ஆன்றோர் போல,
வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும்
கான யானை கவின் அழி குன்றம்
இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்; சிறந்த 5
சில் ஐங் கூந்தல் நல் அகம் பொருந்தி
ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு
உடைமதி வாழிய, நெஞ்சே! நிலவு என
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும்
மழை மருள் பல் தோல் மா வண் சோழர் 10
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந் துறை,
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங் கடல் ஓதம் போல,
ஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கே.
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத் துக் காரிக் கண்ணனார்
124. முல்லை
'நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி,
வந்து திறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து
சென்றீக' என்பஆயின், வேந்தனும்
நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு
இன்றே புகுதல் வாய்வது; நன்றே. 5
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத்
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுற,
பாசறை வருத்தம் வீட, நீயும்
மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயற் புனை படை,
கொய்சுவல், புரவி, கை கவர் வயங்கு பரி, 10
வண் பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை
வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய,
காலை எய்த, கடவுமதி மாலை
அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை
அரமிய வியலகத்து இயம்பும் 15
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே.
தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
125. பாலை
அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ,
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
ஆலி அன்ன வால் வீ தாஅய்,
வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத் 5
தாது உறு குவளைப்போது பிணி அவிழ,
படாஅப் பைங் கண் பா அடிக் கய வாய்க்
கடாஅம் மாறிய யானை போல,
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர, 10
பனி அடூஉ நின்ற பானாட் கங்குல்
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென,
முனிய அலைத்தி, முரண் இல் காலை;
கைதொழு மரபின் கடவுள் சான்ற
செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின் 15
விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த 20
பீடு இல் மன்னர் போல,
ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே.
தலைமகன் வினை முற்றி மீண்டமை உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. -பரணர்
101. பாலை |
||||||||
by Swathi on 29 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|