1957 ஆம் ஆண்டு காமராசர் தலைமையிலான அமைச்சரவையில் கக்கன் , வேளாண்மை , கால்நடைக் காப்பு , தாழ்த்தப்பட்டோர் நலம் ஆகியவற்றின் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் . பிறகு 1962 ஆம் ஆண்டு காமராசர் தலைமையில் மீண்டும் அமைச்சர் ஆனார் . 1963 ஆம் ஆண்டு பக்தவச்சலம் தலைமையிலான அமைச்சரவையிலும் அமைச்சரானார் . இந்த அமைச்சரவையில் மிகப் பெரிய பொறுப்புத் துறைகளான உள்துறை , காவல்துறை , நீதி மற்றும் சிறைத்துறை , தொழிலாளர் நலத்துறை , அறநிலைத்துறை மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தது வரலாற்றில் நினைவு கொள்ள தக்கது . இவருக்கு முன்னும் பின்னும் தனித்தொகுதியில் நின்று வெற்றி பெற்று அமைச்சரான எவரும் இத்துணைத் துறைகளைக் கொண்டு அமைச்சராக இருந்ததில்லை என்றே சொல்லலாம் .
வேளாண்மை
விடுதலைக்குப் பின் நாட்டின் நலன் என்பது அடிப்படைக் கல்வி , உணவு உற்பத்தி , சாலை மேம்பாடு , நீர்ப்பாசனம் போன்ற துறைகளில் கவனம் செலுத்துவது தான் . ஆனால் , மேற்சொன்ன துறைகளில் இடப்படும் திட்டங்கள் நீண்டகாலம் பயன்தரும் திட்டங்களாக அமைந்தால்தான் நாட்டின் வளர்ச்சியைக்கான முடியும் . இதனை மனத்தில் கொண்டு இவர் முதன் முதலில் அமைச்சரான 1957 லேயே நீண்டகால வேளாண்மைத் திட்டங்களை வகுத்தார் . 1963/66 ஆம் ஆண்டு உணவு காலக்கட்டத்தில் தானிய உற்பத்தி 65 இலட்சம் டன் என்ற அளவை எட்ட வேண்டும் என்ற மிகப்பெரிய திட்டத்தை முன்வைத்து செயற்பட்டார் . இதற்காக உர விற்பனையை முறைப்படுத்தி விவசாயிகளின் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தார் . மேலும் பசுந்தாளுரம் என்பதை அறிமுகம் செய்து ஊராட்சி ஒன்றியத்தின் மூலமாக அதை நடைமுறைப்படுத்தினார் . கூட்டுறவு விற்பனைக் கூடங்கள் தொடங்கி விவசாயிகளுக்கான பொருள்கள் வழங்க ஆவன செய்தார் .
அணைக்கட்டுகள்
தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான அணைக்கட்டுத் திட்டங்கள் இவர் காலத்தில்தான் திட்டமிடப்பட்டன . ஆரணி , மணிமுத்தாறு , அமராவதி போன்ற அணைக்கட்டுப் பாசனத் திட்டங்கள் வடிவமைத்து நடைமுறைப்படுத்தப்பட்டன .
மேலும் , மேட்டூர் அணையின் உயரத்தை அதிகரிக்கத் திட்டம் கொண்டு வரப்பட்டதை நினைவு கூரவேண்டும் . வைகையாறு , பாலாறு ஆகிய திட்டங்கள் வறண்ட தென்மாவட்டங்களான மதுரை , இராமநாதபுரம் , தூத்துக்குடி போன்ற மாவட்டங்களின் பாசன நலனுக்கென்றே கொண்டவரப்பட்டன .
இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் ஏழாம் நாள் கக்கனால் திறந்து வைக்கப்பட்ட ‘பூண்டி நீர்ப்பாசன ஆய்வு மையம்’ தமிழகத்தின் நீர்ப்பாசன திட்டங்களின் முத்தாய்ப்பாக அமைந்தது .
ஒவ்வொரு நிதிநிலைக் குழுவையும் சந்தித்து அணைக்கட்டுத் திட்டங்களுக்கான நிதியைத் தடையின்றிப் பெற்று , அந்தந்தக் கால இடைவெளிக்குள் செய்து முடித்தார் என்பதும் சில அணைக்கட்டுகள் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதிக்குள்ளாகவே கட்டி முடிக்கப்பட்டு அரசு செலவில் சேமிப்புக் காட்டப்பட்டது என்பதும் தமிழக வரலாற்றில் நினைவு கொள்ளத்தக்கனவாகும் .
இந்திய நாட்டின் அழைப்பை ஏற்று இந்தியா வந்திருந்த செருமானிய நாட்டு வேளாண் அமைச்சர் எச் . கோய்ச்சல் கலந்த கொண்ட உயர்மட்டக்குழு கூட்டத்தில் கக்கனும் கலந்து கொண்டார் . 8.2.1967 ஆம் ஆண்டு கையொப்பமான இந்தோ - ஜெர்மன் விவசாய ஒப்பந்தம் நடைபெறுவதற்குக் கக்கனும் ஒத்துழைத்தார் . விவசாயிகளின் விளைபொருளுக்குத் தகுந்த விலை தரப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் .
|