இத்தலத்தில் அம்மன் மூலஸ்தானத்தில் மூலவருக்கு வலது பக்கம் சுயம்பு புற்று விடிவில் அருள்பாலிக்கிறார்.இந்த உலகையே ஆட்சி செய்யும் அன்னை பார்வதி அங்காளம்மனாக அவதாரம் எடுத்து திருப்பூர் அருகே முத்தனம் பாளையத்தில் ஆட்சி செய்து வருகிறாள். இவள் திருவண்ணாமலை அருகே உள்ள தாய்வீடான மேல்மலையனூரிலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளாள். 900 ஆண்டு பழமையான இத்தலம் ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது.
கோயிலின் முன்பு சுமார் 30 அடி உயரமுள்ள, ஒரே கல்லால் செய்யப்பட்ட துவஜஸ்தம்பம் உள்ளது. அதையடுத்து 3 நிலை ராஜ கோபுரம் உள்ளது. கோயிலின் தல விருட்சம் வேம்பு. கோயிலின் வடக்கே மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட தெப்பக்குளம் உள்ளது. கோயிலின் சுற்றுப்பகுதியில் விநாயகர், முருகன், பேச்சியம்மன், கருப்பணசுவாமி, பாவாடைராயன், காத்தவராயன், இருளப்பன், அகோரவீரபத்திரர், பேமசிரி, நாகர், புரவையம்மன், கவுண்டச்சி அம்மன் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். |