நமது நாட்டில் சரஸ்வதி தேவிக்கென அமைந்துள்ள மிகச் சில கோயில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள கோயில் கருவறையில் ஞானசரஸ்வதி தேவி வீணை, அட்சமாலை, ஏடு தாங்கி அருள்புரிகிறாள். இவள் அருகிலேயே மகாலட்சுமி காட்சி தர, மகாகாளி தனிச் சன்னதியில் ஆலயப் பிராகாரத்தில் வீற்றிருப்பது சிறப்பு.
வியாச முனிவருக்கு முதன்முதலில் தேவி முப்பெருந்தேவியரின் அம்சமாகக் காட்சிகொடுத்து குமராஞ்சலா மலைப்பகுதியில் தேவி ஆவிர்பவித்தபடியால், இந்த ஞான சரஸ்வதிதேவிக்கு கௌமாராச்சல நிவாசினி என்னும் திருநாமமும் உண்டு. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் இந்த திவ்ய தலத்துக்கு வந்து வழிபடுகின்றனர். குழந்தைகளுக்கு கல்வி ஆரம்பிக்க அதிக அளவில் மக்கள் வந்து கூடுகின்றனர்.
குறிப்பாக சரஸ்வதி பூஜை நாளன்று இந்த ஆலயம் விழாக்கோலம் பூணுகிறது. பக்தர்கள் சரஸ்வதிதேவியை வழிபட்டுவிட்டு வியாச முனிவர் தவம் செய்த குகையிலுள்ள வியாச பகவானையும் வழிபட்டுச் செல்கின்றனர். இவரை வழிபட புண்ணிய பலன்கள் கிட்டும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே பரவியுள்ளது. |