இத்தல அம்மன் நித்யசுமங்கலி என்ற சிறப்பு பெயருடன் சுயம்பு அம்மனாக அருள்பாலிக்கிறார்.கொல்லிமலை, அலவாய் மலை, நைனாமலை, போத மலை என்னும் நான்கு மலைகளுக்கு மத்தியில் அமைந்த கோயில் இது. ஐப்பசி விழாவின்போது அம்பிகை சிலை முழுக்க பூ அலங்காரம் செய்கின்றனர். இந்த அலங்காரத்தை "பூச்சாட்டு' என்கிறார்கள்.
இந்நேரத்தில் அம்பிகையை வழிபடுவது விசேஷம். மூலஸ்தானத்தில் மாரியம்மனுக்கு முன்பு, சுயம்புவாக தோன்றிய அம்பிகையின் வடிவம் இருக்கிறது. முதலில் சுயம்பு அம்பிகைக்கே பூஜை செய்யப்படுகிறது. அம்பாள் சதுர வடிவ ஆவுடையாரில் அமர்ந்திருப்பதும், சுயம்பு அம்பிகை லிங்க வடிவில் காட்சி தருவதும் விசேஷம்.
அம்பிகைக்கு எதிரே யாளி வாகனம் இருக்கிறது.ஒவ்வொரு மாதத்திலும் மகம் நட்சத்திரத்தில் அம்பிகைக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. அம்பிகைக்கு எதிரே ஊஞ்சல் மண்டபம் உள்ளது. இங்குள்ள ஊஞ்சலில் அம்பிகையின் பாதம் பொறிக்கப்பட்டிருக்கிறது. |