|
||||||||
அம்மாவிற்கு ஏற்றவள் |
||||||||
“ செந்தில் உன் கல்யாணம் எப்பொழுது ?” என் மேல் அதிகாரி , அவர் பிறந்த நாள் வைபவத்தில் நான் வாழ்த்து சொல்ல , அவர் என்னை திருப்பி கேட்ட கேள்வி இது. சட்டென்று கேட்டதால் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. சிரித்து மழுப்பிவிட்டேன். அவர் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் என் நண்பன் ராஜேந்திரன் அந்த கேள்வியை மீண்டும் கேட்டான். அவனுக்கும் நான் பதில் சொல்லவில்லை. அவன் “ ஹரிணியைப் பற்றி என்ன நினைக்கிறாய் ?” என்றான். “ ஹரிணி நல்ல புத்திசாலியான பெண். பல விஷயங்களில் என் கருத்தும் அவள் கருத்தும் ஒன்றாக இருக்கும். அவள் பேச்சு , எண்ணங்கள் எல்லாம் எனக்கு பிடித்தவை.” என்றேன். “ அப்படி என்றால், ஹரிணியை கல்யாணம் செய்து கொள்ள நீ யோசிக்கலாமே?” என்றான் என் நண்பன். சொல்லிவிட்டு அவன் செல்ல வேண்டிய பாதையில் பிரிந்து சென்று விட்டான். நான் சாலை ஓரமாக தனியாக நடக்க துவங்கினேன். ஹரிணி நகரத்திலேயே வளர்ந்த நாகரீகமான பெண். நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் இருவரும் வேலை பார்க்கிறோம். அதனால் ஒரு சம அந்தஸ்து போல் ஒரு தோற்றம். நானே ஹரிணியின் அப்பாவாக இருந்தால் என் போன்ற கிராமத்து இளைஞனை மாப்பிளையாக தேர்ந்து எடுக்க மாட்டேன். ஹரிணியின் அப்பா பெரிய அரசு அதிகாரி. என் அம்மா காய்கறி வியாபாரம் செய்பவர். என் அப்பா நான் சின்ன பையனாக இருக்கும் பொழுதே இறந்துவிட்டார். ஆக குடும்ப அந்தஸ்து சம அளவில் இல்லை. அப்படியே ஹரிணியும் அவள் அப்பாவும் என்னை ஏற்றுகொண்டாலும் அவர்களால் என் அம்மாவிடம் இயல்பாக சம அந்தஸ்தில் பழக முடியாது. என் அம்மா தனிமைக்குத் தள்ளப்படுவார். என் அம்மா தொடர்ந்து என்னுடன் நெருக்கமாக இருக்கவேண்டும். அதனால் ஹரிணியை கல்யாணம் செய்து கொள்ளலாமே என்ற கருத்தை மறக்க வேண்டும். கிராமத்தில் பிறந்து வளர்ந்த, என் அம்மாவை பெரிதாக நினைக்கும் பெண்ணை தேடவேண்டும். க்றீச் என ஒரு சப்தம். “ செந்தில் ! எங்கேயோ கவனம், சாலையில் இப்படியா நடப்பது. “ கேட்டது ஹரிணி. ஸ்கூட்டரை சட்டெனெ நிறுத்தி என்னை காப்பாற்றி இருக்கிறாள். சாலை ஓரத்தில் நடந்து கொண்டே எண்ணங்களை தொடர விட்டதால் சாலையின் நடுவில் வந்துவிட்டேன். விபத்து நடந்து இருக்கலாம் , ஹரிணியின் கவனத்தால் நான் தப்பி இருக்கிறேன், இதை உணர்ந்த நான் அதிர்ந்து விட்டேன். ஹரிணி எனக்கு ஒரு காபி வாங்கி கொடுத்து என்னை சமாதான நிலைக்கு கொண்டு வந்தாள். ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு என் சொந்த ஊருக்குப் போனேன். நான் வந்தது என் அம்மாவிற்கு இன்ப அதிர்ச்சி. வந்த நாள் பகல் முழுவதும் நல்ல உறக்கம். மாலையில் என் அம்மாவின் காய்கறி கடைக்குப் போய் பார்க்கலாம் என கிளம்பினேன். “ செந்தில் எப்பொழுது வந்தாய்?” என்ற கேள்வி கேட்டு திரும்பி பார்த்தேன். மளிகைக்கடை மாணிக்கம். மாணிக்கம் என் அப்பாவின் நெருங்கிய நண்பர். என் அப்பா இறந்த பின்னும் எங்கள் நலத்தில் அக்கறை உள்ளவர். அவர் என்னை தன் வீட்டிற்கு அழைக்க , அவருடன் நடந்தேன். வீடு வந்ததும் அவர் பெண் மீனாட்சி காபி கொண்டு கொடுத்து நலம் விசாரித்தாள். தான் பட்ட படிப்பு படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டு இருப்பதாக சொன்னாள். பின் வேலையாக உள்ளே சென்றாள். மீனாட்சி என் அம்மாவிற்கு மிகவும் நெருக்கம். அடுத்த தெருவில் உள்ள என் அம்மாவை தினமும் சென்று பார்ப்பாள். இப்படி நான் நினைத்துப் பார்த்துகொண்டு இருக்கும் பொழுதே ‘மீனாட்சியை கல்யாணம் செய்து கொண்டால் , என் அம்மாவிற்கு நல்ல துணை கிடைக்கும் ‘ என்ற மின்னல் எண்ணம் வந்துது. சிறுது நேரம் பொது விஷயங்கள் பேசி விட்டு மாணிக்கத்திடம் என் விருப்பத்தை சொன்னேன். அவருக்கும் பிடித்ததால், அவர் உள்ளே போய் தன் மகளிடம் சொன்னார். அம்மாவிற்கு தோழமையாக இருக்கக்கூடிய பெண்ணை கண்டுபிடுத்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் என் மனம் பறந்தது. சற்று நேர இடைவெளிக்குப்பின் மீனாட்சியின் குரல் கேட்டது. “ பெரிய நகரத்தில் எனக்கு வேலை கிடைத்து, பெரிய பணக்கார மாப்பிள்ளை கிடைக்க வேண்டும். நான் இவரை கல்யாணம் செய்து கொண்டால் அவர் அம்மாவின் தோழியாக வைத்து இருப்பார். என்னை வளர விடமாட்டார். காலம் முழுவதும் வீட்டு வேலை செய்ய வேண்டி இருக்கும். கிராமம் , கஷ்டம் இதையெல்லாம் விட்டு நகரம் போய் நல்ல வாழ்வு வாழவேண்டும் அப்பா. அதனால இந்த சம்பந்தம் வேண்டாம் அப்பா.” என் காதில் விழவேண்டும் என்று உரத்த குரலில் பேசினாள். மாணிக்கம் சோகமாக வெளியே வந்தார். நாங்கள் இருவரும் அவர் கடை நோக்கி நடந்தோம். பேசமுடியாத இறுக்கமான சூழ்நிலை. அவர் கடை வந்ததும் , நான் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு என் அம்மா கடை நோக்கி நடந்தேன். என் அம்மா கடைக்கு நான் வந்து வருடம் இரண்டு ஆகிவிட்டது. ஊருக்கு வந்து இருந்தாலும் கடைக்கு வரவில்லை. கடை காலத்துக்கு ஏற்ப நன்றாக மாறியிருந்தது. என் அம்மா லேப் டாப்பில் ஏதோ செய்தி அனுப்பி கொண்டு இருந்தார். அவர் கையில் மொபைல். வியபாரம் சுறு சுறுப்பாக நடந்து கொண்டு இருந்தது. ஆச்சர்யத்தில் எனக்கு வார்த்தையே வர வில்லை. என் அம்மா என்னை தட்டவும் என் மலைப்பில் இருந்து வெளியே வந்தேன். “ ஆச்சர்ய படாதே, இந்த பெண் தான் எனக்கு எல்லா புது விஷயங்களும் சொல்லிக்கொடுத்தாள். நான் அடுத்த ஊரில் ஒரு கல்யாணத்தில் இவளை பார்த்தேன். நான் காய்கறி வியாபாரம் செய்கிறேன் என்று சொன்னவுடன் ஆர்கானிக் பொருட்கள் பற்றி சொல்லிக் கொடுத்தாள். கம்ப்யுடர் , மொபைல் எல்லாமே அவள் கற்று கொடுத்தது தான். அவள் எடுத்த போட்டோ தான் இது” என்று அங்கு தொங்கி கொண்டு இருக்கும் போட்டோவை காட்டி பேசினாள் . அந்த படத்தில் என் அம்மாவுடன் நிற்பவள் ஹரிணி. நான் மீண்டும் மலைத்து போக “ இப்ப நான் காய்கறி ஏற்றுமதி வியாபாரம் செய்கிறேன் அவள் கொடுத்த தைரியத்தில். அவள் உன்னைப் பற்றி கேட்ட பொழுது எனக்கு நீ வேலை பார்க்கும் கம்பனி பெயர் சொல்ல தெரியவில்லை.இந்த சின்ன விஷயம் கூட தெரிவில்லை என்று என்னிடம் சொல்லிவிட்டு போயிருக்கிறாள். அடுத்த ஊருக்கு உறவினர்களை பார்க்க வரும் பொழுதெல்லாம் என்னை வந்து பார்த்து விட்டு போவாள். வியாபாரத்தை விடாதீர்கள் என்று சொல்லிவிட்டு ஏதாவது புது விஷங்களை சொல்லிக் கொடுத்து விட்டு போவாள். “ என என் அம்மா ஹரிணியை பற்றி அடுக்கி கொண்டே போனாள். நான் கிராமத்து பெண் மீனாட்சி என் அம்மாவிற்கு நல்ல துணை என நினைத்து முயன்றேன். சரியாக வில்லை. நகரத்து நாகரீக பெண் ஹரிணி, என் அம்மா தொழிலை மதித்து அவருக்கு புதிய விஷங்கள் சொல்லிகொடுத்து உற்சாக ஊட்டுகிறாள் என் அம்மா என்று தெரியாமலேயே. “ அம்மா , நான் ஊருக்கு இன்று இரவே திரும்பிப் போகிறேன் “என்றேன். “ ஒரு வாரம் இருப்பாய் என்று கூறினாயே, ஒரு நாளிலே போகிறேன் என்கிறாயே. நான் கடையை இரண்டு நாள் மூடிட்டு உன்னை கவனிக்கிறேன், போகதடா. “ என்றாள். திரும்பி போகவேண்டும், அம்மாவிற்கு ஏற்ற ஹரிணியைப் பார்க்க வேண்டும். கல்யாணம் பேச வேண்டும். என் அவசரம் என் அம்மாவிற்குப புரியவில்லை. |
||||||||
ammavirku yetraval | ||||||||
by Ramakrishnan on 10 Sep 2013 2 Comments | ||||||||
Tags: அம்மா அவள் அம்மாவிற்கு சிறுகதை செந்தில் Amma Ammavitku | ||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|