அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். |
|
|
திருக்குறள் AUDIO |
|
|
|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition): |
அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை. |
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition): |
(உடன் போக்கு உரைத்த தோழிக்கு அதனது அருமை கூறி மறுத்தது.) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் - உலகத்தாரான் மென்மைக்கு எடுக்கப்பட்ட அனிச்சப்பூவும் அன்னப்புள்ளின் சிறகும் ஆகிய இரண்டும்; மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தஞ் செய்யும்.(முன் வலிதாதலுடைமையின் பழம் என்றான். இத்தன்மைத்தாய அடி 'பாத்திஅன்ன குடுமிக் கூர்ங்கற்'களையுடைய (அகநா.களிற்.5)வெஞ்சுரத்தை யாங்ஙனம் கடக்கும்'? என்பது குறிப்பாற் பெறப்பட்டது. செம்பொருளேயன்றிக் குறிப்புப் பொருளும் அடிநலனழியாமையாகலின், இதுவும் இவ்வதிகாரத்ததாயிற்று.) |
மணக்குடவர் உரை: |
அனிச்சப்பூவும், அன்னத்தின் தூவியும், மாதரடிக்கு நெருஞ்சிப் பழத்தோடு ஒக்கும். இஃது அவையிற்றினும் மெல்லியது அடியென்று கூறிற்று. |
தேவநேயப் பாவாணர் உரை: |
( உடன் போக்குரைத்த தோழிக்கு அதனருமை கூறிமறுத்தது . ) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் - அறிஞரால் மென்மைக்குச் சிறந்ததாகக் கொள்ளப்பெற்ற அனிச்சமலரும் ஒதி மத்தின் நொய்ய துய்முடியும் கூட ; மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் - என் காதலியின் மெல்லிய உள்ளங்கால்களை முற்றிய நெருஞ்சி முட்போற் குத்தித் துன்புறுத்துமே . இத்தகைய மென் பாதத்தினள் கூர்ம் பருக்கைக் கற்களும் நீள்வேல் முள்ளும் நெடுகலும் பரவிக்கிடக்கும் வெஞ்சுரத்தை எங்ஙனங் கடப்பாள் ? ஆதலால் அக்கருத்தை விட்டுவிடு என்பது குறிப்பு . இது உடன்போக்கு மறுத்தலாயினும் , தலைமகளின் அடிநலத்தை யெடுத்துக் கூறுதலால் , இதுவும் நலம் புனைந்துரைத்தலேயாம் , பெருநெருஞ்சி முதிர்ந்த நிலையில் நெல்லிக் கனிபோலப் பசுமஞ்சள் நிறங்கொள்ளுமாதலின் ' பழம் ' என்றார் . இக்குறளிலுள்ள அணி உயர்வுநவிற்சி . |
கலைஞர் உரை: |
அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை. |
சாலமன் பாப்பையா உரை: |
உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும். |
Translation |
The flower of the sensitive plant, and the down on the swan's white breast,
As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed. |
Explanation |
The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji. |
Transliteration |
Anichchamum Annaththin Thooviyum Maadhar
Atikku Nerunjip Pazham |
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம் |
|