கவைத்துகிர் வடவையின் திரள்சிகை பரப்பி அரைபெறப் பிணித்த கல்குளி மாக்கள் உள்ளம் தீக்கும் உவர்க்கடல் உடுத்த நாவலம் தண்பொழில் இன்புடன் துயில உலகற விழுங்கிய நள்ளென் கங்குல் (5)
துயிலாக் கேளுடன் உயிர்இரை தேரும் நெட்டுடல் பேழ்வாய்க் கழுதும் உறங்க பிள்ளையும் பெடையும் பறைவாய்த் தழீஇச் சுற்றமும் சூழக் குருகு கண்படுப்ப கீழ்அரும்பு அணைந்த முள்அரை முளரி (10)
இதழ்க்கதவு அடைத்து மலர்க்கண் துயில விரிசினை பொதுளிய பாசிலை ஒடுக்கி பூவொடும் வண்டொடும் பொங்கரும் உறங்க பால்முகக் களவின் குறுங்காய்ப் பச்சிணர் புட்கால் பாட்டினர்க்கு உறையுள் கொடுத்த (15)
மயிர்குறை கருவித் துணைக்குழை அலைப்ப வரிந்தஇந் தனச்சுமை மதிஅரவு இதழி அகன்று கட்டவிழ்ந்த சேகரத் திருத்தி வீதியும் கவலையும் மிகவளம் புகன்று பொழுதுகண் மறைந்த தீவாய்ச் செக்கர் (20)
தணந்தோர் உள்ளத் துள்உறப் புகுந்தபின் காருடல் காட்டி கண்டகண் புதைய அல்எனும் மங்கை மெல்லெனப் பார்க்க முரன்றெழு கானம் முயன்று வாதியைந்த வடபுல விஞ்சையன் வைகிடத்து அகன்கடை (25)
தென்திசைப் பாணன் அடிமை யானென போகா விறகுடன் தலைக்கடை பொருந்தி உந்தித் தோற்றமும் ஓசைநின்று ஒடுங்க பாலையில் எழுப்பி அமர்இசை பயிற்றி தூங்கலும் துள்ளலும் சுண்டிநின் றெழுதலும் (30)
தாரியில் காட்டித் தரும்சா தாரி உலகுயிர் உள்ளமும் ஒன்றுபட்டு ஒடுங்க இசைவிதி பாடி இசைப்பகை துரந்த கூடற்கு இறையோன் தாள்விடுத் தோர்என என்கண் துஞ்சா நீர்மை முன்கண்டு ஓதாது அவர்க்கிளங் குருகே. (36)
|