அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண். |
|
|
திருக்குறள் AUDIO |
|
|
|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition): |
அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும். |
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition): |
அன்பு - சுற்றத்தார் மேலேயன்றிப் பிறர்மேலும் உளதாய அன்பும்; நாண் - பழி பாவங்களின் நாணலும்; ஒப்புரவு-யாவர் மாட்டும் ஒப்புரவு செய்தலும்; கண்ணோட்டம் - பழையார்மேல் கண்ணோடலும்; வாய்மையொடு- எவ்விடத்தும் மெய்ம்மை கூறலும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சால்பு என்னும் பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஐந்து. (எண் 'ஒடு' முன்னவற்றோடும் கூடிற்று. இக்குணங்கள் இல்வழிச் சால்பு நிலைபெறாமையின், இவற்றைத் 'தூண்' என்றார். ஏகதேச உருவகம்.) |
மணக்குடவர் உரை: |
அன்புடைமையும், பழிநாணுதலும், ஒப்புரவுடைமையும், கண்ணோட்டமும், மெய்யுரையுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சால்பினைத் தாங்கும் தூண். இஃது இவை ஐந்தும் சால்பிற்கு அங்கமென்றது. |
தேவநேயப் பாவாணர் உரை: |
அன்பு - எல்லார் மேலுமுள்ள அன்பும், நாண் - பழி தீவினைகள் செய்யப் பின்வாங்கும் நாணமும் , ஒப்புரவு - வேளாண்மையும் ; கண்ணோட்டம் - எளியார்க்கும் சட்ட நெறியறியார்க்குங் காட்டுஞ் சிறப்பிரக்கமும் ; வாய்மையொடு - உண்மை யுடைமையும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சான்றாண்மையென்னும் மண்டபத்தைத் தாங்குந் தூண்கள் ஐந்தாம். "என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி ஒன்றுவழி யுடைய எண்ணினுட் பிரிந்தே," என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி (779), எண்ணோடு முன்னவற்றொடும் ஒன்றியது, இவ்வைங்குணமும் இல்லாவிடத்துச் சால்பு நில்லாமையின், இவற்றைத் தூணென வுருவகித்தார். சால்பை மண்டபமென வுருவகியாமையின் , இது ஒருமருங்குருவகம். இங்கு எளியார் என்றது செல்வம்,கல்வி, உடல்வலிமை, அகவை முதலிய பலவகையிலுந் தாழ்ந்தவரை. |
கலைஞர் உரை: |
அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும். |
சாலமன் பாப்பையா உரை: |
மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள். |
Translation |
Love, modesty, beneficence, benignant grace,
With truth, are pillars five of perfect virtue's resting-place. |
Explanation |
Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests. |
Transliteration |
Anpunaan Oppuravu Kannottam Vaaimaiyotu
Aindhusaal Oondriya Thoon |
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம் |
|
|