அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அன்பு உடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் - பிறர் மேல் அன்பு உடையனாதலும் உலகத்தோடு அமைந்த குடியின்கண் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும்; பண்பு உடைமை என்னும் வழக்கு - ஒருவனுக்குப் பண்பு உடைமை என்று உலகத்தார் சொல்லும் நன்னெறி. (அமைதல் - ஒத்து வருதல். 'குடிப்பிறத்தல்' என்றது பிறந்தார் செயலை. தனித்த வழி ஆகாது இரண்டும் கூடிய வழியே ஆவதென்பது தோன்ற, முற்றும்மை கொடுத்தார். காரணங்கள் காரியமாக உபசரிக்கப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் பண்பு உடையார் ஆதற் காரணம் கூறப்பட்டது.)
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் - எல்லார்மேலும் அன்புடைமையும் எல்லா நல்லிணக்கமும் அமைந்த குடியிற் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும் ; பண்புடைமை என்னும் வழக்கு - பண்புடைமையென்னும் ஒழுக்கத்திற்கு இன்றியமையாத இயல்களாம். அமைதல் நிறைதல். உம்மை முற்றும்மை, வழக்கிற்குக் கரணிய மானவற்றை வழக்கென்றே கருமியமாகச் சார்த்திக் கூறினார். இவ்விரு குறளாலும் பண்புடைமைக்கு ஏதுவான நிலைமைகள் கூறப்பட்டன.
கலைஞர் உரை:
அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்.
Translation
Benevolence and high born dignity,
These two are beaten paths of courtesy.
Explanation
Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all.