திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உட்பகை உற்ற குடி - முன் வளர்ந்து வந்ததாயினும் உட்பகையுண்டாய குடி, அரம் பொருத பொன்போலப் பொருது உரம் தேயும் - அரத்தாற் பொரப்பட்ட இரும்பு போல அதனால் பொரப்பட்டு வலி தேயும். ('பொருது' என்னும் செயப்பாட்டு வினையெச்சம் 'தேயும்' என்னும் வினை கொண்டது. அஃது, உரத்தின் தொழிலாயினும் குடிமேல் ஏற்றுதலின், வினை முதல்வினை ஆயிற்று. காரியஞ் செய்வதுபோன்று பொருந்தி மெல்லமெல்லப் பிரிவித்தலான், வலிதேய்ந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் குடிக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
உட்பகையானது உற்ற குடி, அரத்தினால் தேய்க்கப்பட்ட பொன்னைப் போல, அதனால் பொரப்படவே வலி தேயும். இஃது உட்பகை அழகு செய்வது போலப் பலத்தைக் கெடுக்குமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
உட்பகை யுற்ற குடி- உட்பகை யுண்டான குடி; அரம் பொருத பொன்போலப் பொருது உரம் தேயும் - அரத்தால் அராவப்பட்ட இரும்பு போல உட்பகையால் அராவப்பட்டு வலிமை குன்றும். பொருது என்னும் வினையெச்சம் தேயும் என்னும் வினைமுற்றுக் கொண்டு முடிந்தது.உட்பகை பொருதுதேயும் என்பது புலியடித்துச் செத்தான் என்பது போன்ற வழக்கு,குடி யுரந்தேயும் என்பதில் சினைவினை முதல் வினையாக நின்றது.இவ்விரு குறளாலும் ஒரு குடும்பம் அல்லது உறவுத்தொகுதி உட்பகையாற் கெடுவது கூறப்பட்டது.' பொன் ' இங்கு இனம்பற்றி இரும்பைக் குறித்தது.
கலைஞர் உரை:
அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்.
சாலமன் பாப்பையா உரை:
அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்.
Translation
As gold with which the file contends is worn away,
So strength of house declines where hate concealed hath sway.
Explanation
A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away.