தற்போது, பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் யாரை பார்த்தாலும் ஒரு பக்கெட் தண்ணீரை தலையில் ஊற்றி கொள்ளும்படியான வீடியோக்கள் நிரம்பி வழிகின்றன. பிரபலங்கள் பலரும் இதனை செய்து வீடியோ எடுத்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். என்ன என்று பார்த்தால் அதற்கு பெயர் தான் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்கிறார்கள். இதனை நரம்பு நோயாளிகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்சுக்கு சவாலாக நடிகர் மம்மூட்டி மை ட்ரீ சேலஞ்ச் என்ற பெயரில் இன்னொரு புதுமையான சவாலை அறிவித்திருக்கிறார். உலக வெப்பமயமாதலை தடுத்து, பூமியை காப்பாற்ற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த சவாலில், மரக்கன்று நட்டு அதை பராமரித்து வளர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள மம்மூட்டி, தனது வீட்டுத்தோட்டத்தில் தான் ஒரு மரம் நட்டு அந்த போட்டோவையும் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதோடு, தலையில் ஐஸ் தண்ணீரை ஊற்ற வேண்டாம். மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நான் ஒரு மரம் நட்டுள்ளேன் உங்களால் இது முடியுமா? என்றும் ரசிகர்களுக்கு சவால் விட்டுள்ள மம்மூட்டி, இந்திய அளவில் உள்ள முன்னணி நடிகர்களையும் அவர்களது ரசிகர்களுக்கு இந்த சவாலை விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
|