|
|||||
நிபந்தனைகளற்ற மன்னிப்பு கேட்டதால் ஹெச். ராஜா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிவுக்கு வந்தது! |
|||||
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான ஹெச்.ராஜா, தனது பேச்சுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் மேடை அமைத்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினர் மற்றும் ஹெச்.ராஜா ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஹெச்.ராஜா நீதிமன்றம் மற்றும் காவல்துறை ஆகியவை குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்தது காணொளி வாயிலாக சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து செப்டம்பர் 17ம் தேதி நீதிமன்றம் தானாக முன்வந்து ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. அக்டோபர் 22ம் தேதிக்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்க ஹெச்.ராஜாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ், வீடு பூட்டி இருப்பதால் வழங்கப்படாமல் நீதிமன்றத்திற்கு திரும்பியது இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிடி செல்வம், நிர்மல்குமார் அமர்வின் முன் ஹெச்.ராஜா ஆஜரானார். அவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.எஸ். தினகரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மேடை அமைத்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,உணர்ச்சிவசப்பட்ட காரணத்தால் தவறான வார்த்தைகளை உபயோகப்படுத்தி விட்டதாகவும் காணொளியில் பார்த்த பின்னரே தாம் செய்த தவறு தெரிய வந்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தனது தவறுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் ஹெச்.ராஜா மீதான அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக அறிவித்தனர். முன்னதாக ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. |
|||||
by Mani Bharathi on 22 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|