தமிழில் அறிவிப்பு செய்த விமானிக்குக் காத்திருந்தது ஆச்சரியம்
பொதுவாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்வதில்லை. மாறாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே அறிவிப்புகள் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சென்னை - மதுரை இடையே விமானம் இயக்கி வந்த துணை விமானி பிரிய விக்னேஷ் ‘அன்பார்ந்த பயணிகளே வணக்கம். துணை விமானி பிரிய விக்னேஷ் பேசுகிறேன். இப்போது நாம் கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம். திருச்சி வான் வழியில் மதுரையை நோக்கிப் பயணிக்கும் போது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் காட்சியளிக்கும் திருச்சியைக் கடந்த சில நிமிடத்தில் மதுரை அழகர்மலை. யானை மலை. வைகை பாலங்கள் உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில். வண்டியூர் தெப்பக்குளம் அழகாகக் காட்சியளிக்கும். வாழ்க தமிழ். வாழ்க பாரதம்’ எனத் தமிழில் அறிவித்து அசத்தினார்.
இவரது தமிழ் அறிவிப்பு விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளின் வரவேற்பைப் பெற்றது. இரண்டு தினங்களுக்கு முன்னர் மதுரைக்கு மீண்டும் விமானத்தை இயக்கினார் பிரிய விக்னேஷ். அப்போது மதுரையில் அவருக்குப் பயணிகள் மற்றும் மக்கள் தங்களது நன்றியைத் தெரிவித்தனர். மேலும் பணியாளர்கள் வரிசையாக நின்று கைகூப்பி வணங்கியும். கையசைத்தும் வழியனுப்பி உள்ளனர். இதை எதுவும் எதிர்பார்க்காத பிரிய விக்னேஷ் நெகிழ்ந்து போனார். மற்றும் தன் முகநூல் பக்கத்திலும் இது குறித்த காணொளிக் காட்சியைப் பதிவிட்டு மதுரை மக்களின் தமிழ்ப் பற்றினை வெளிப்படுத்தியுள்ளார்.
|