LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தமிழச்சியின் கத்தி

அத்தான் என்றெதிர் வந்தாள்

எண்சீர் விருத்தம்

'அத்தான்'என் றெதிர்வந்தாள். 'ஐயோ!' என்றாள்.
    'அவன்என்னைக் கற்பழித்தான்; உடனி ருந்த
    அத்தீய மாதரினால் மயக்கந் தந்தான்;
    உணர்விழந்தேன் அவ்விரவில்! விடிந்த பின்உம்
    சொத்தான என்னைஅவன் தொட்டா னென்று
    தோன்றியது. மறைந்துவிட்டான்; தேடிச் சென்று
    குத்தினேன்! சிறுக்கிகளை இவர்ம டித்தார்
    கூவினேன் கோட்டையிலே உம்மை வந்தே.

    பேழைக்குள் இந்நாட்டை அடைத்தோம் என்ற
    பெருநினைப்பால் வடநாட்டார் தமிழர் தம்மை
    வாழவிடா மற்செய்யத் திட்ட மிட்டார்.
    மறம்வீழும்! அறம்வாழும்! என்ப தெண்ணார்.
    தாழ்வுற்றுப் போகவில்லை தமிழ ரெல்லாம்;
    தமிழகத்தைப் பிறர்தூக்கிச் செல்ல வில்லை.
    வாழ்கின்ற காவிரியைப் பெண்ணை யாற்றை
    வடநாட்டான் எடுத்துப்போய் விடஒண் ணாது.

    முப்புறத்தும் தமிழ்நாட்டின் முரசு மாக
    முழங்குகின்ற திரைகடலைப் பகைவர் வந்து
    கைப்புறத்தேந் திப்போக முடிவ துண்டோ?
    கன்னலது சாறுபட்டுச் சேறு பட்டு
    முப்பழத்தின் சுளைபட்டு முன்னாள் தொட்டு
    முளைசெந்நெல் விளைநிலத்தை இழந்தோ மில்லை.
    எப்புறத்தும் வளங்கொழிக்கும் மலைகள் உண்டு
    பறித்துவிட எவராலும் ஆவ தில்லை.

    செந்தமிழர் இருக்கின்றார் சிங்கங் கள்போல்
    திறலழித்து விடஎவரும் பிறந்தா ரில்லை.
    பைந்தமிழன் மொழியுண்டு வாழ்வைச் செய்யப்
    படைகொண்டு வஞ்சகர்கள் பறிப்ப துண்டோ?
    வந்துநுழைந் தார்சிறிது நாள்இ ருப்பர்.
    வளைந்துகொடுத் ததுசெஞ்சி நிமிர்தல் உண்டு.
    சந்தையவர் வாழ்வென்று நினைத்தா ரில்லை
    தமிழ்நாடு பணிவதில்லை வடநாட் டார்க்கே!

    தேசிங்கன் அறியவில்லை; அறிந்து கொள்வான்.
    தென்னாட்டைத் துரும்பாக மதித்து விட்டான்.
    வீசுங்கோல் செங்கோலாய்த் தமிழர் நாட்டை
    விளையாட்டுக் கூடமாய்த் தமிழப் பெண்கள்
    பேசுந்தோற் பாவைகளாய் மறவர் தம்மைப்
    பேடிகளாய்த் தேசிங்கன் நினைத்து விட்டான்.
    மாசொன்று நேர்ந்திடினும் உயிர்வா ழாத
    மன்னர்களின் மக்களென நினைக்க வில்லை.

    கையோடு கூட்டிவந்து வடநாட் டார்கள்
    காணுகின்ற பெண்டிர்களைக் கற்ப ழிக்கச்
    செய்கின்றான். அறமறியான் சுபேதார் என்னைத்
    தீண்டினான். தேசிங்கு தமிழர் தங்கள்
    மெய்யுரிமை தீண்டினான். மாய்ந்தான்; மாய்வான்.
    விதிகிழிந்து போயிற்று மீள்வ தில்லை.
    ஐயகோ! அத்தான்என் ஆவல் கேட்பீர்
    ஆனமட்டும் பார்ப்போமே வடக்கர் தம்மை!'

    என்றுரைத்தாள்! பாய்ந்தார்கள் சிப்பாய் கள்மேல்
    இருகத்தி வாங்கினார் திம்மன், செங்கான்.
    குன்றொத்த சிப்பாய்கள் இறந்து வீழ்ந்தார்.
    கொடியொத்த இடையுடையாள் சிரிப்பில் வீழ்ந்தாள்.
    'என்றைக்கும் சாவுதான் அத்தான்' என்றாள்.
    'இன்றைக்கே சாவோமே' என்றான் திம்மன்.
    'நன்றுக்குச் சாகலாம்' என்றாள் நங்கை.
    'நாட்டுக்கு நல்லதொண்டாம்' என்றான் திம்மன்.

    'நிலையற்ற வாழ்வென்பார் கையி லுள்ள
    நெடியபொருள் நில்லாவாம் என்பர்; ஆனால்
    தலைமுறையின் வேர்அறுக்க நினைப்ப வர்க்குத்
    தாழ்வதிலும் தம்முயிரே நல்ல தென்பார்!
    சிலர்இந்நாள் இப்படியே' என்றான் செங்கான்!
    'புதுமைதான் புதுமைதான்' என்றான் திம்மன்!
    இலைபோட்டு நஞ்சுண்ட வீட டைந்தார்.
    'இவ்விடந்தான் நஞ்சுண்டேன்' என்றாள் நங்கை!

    'மயக்கத்தால் தலைசாய்ந்தேன் இவ்வி டத்தில்!
    மணவாளர் தமைநினைத்து மெதுவாய்ச் சென்று
    துயர்க்கடலில் வீழ்வதுபோல் பாயில் வீழ்ந்து
    சோர்ந்ததுவும் இவ்விடந்தான்' என்று ரைத்தாள்.
    'புயலுக்குச் சிறுவிளக்கு விண்ணப் பத்தைப்
    போட்டழைத்த திவ்விடந்தான் போலும்! பெண்ணே
    வயற்காட்டு வெள்ளாடு புலியிடம் போய்
    வலியஅழைத் திட்டஇடம் இதுதான் போலும்!'

    என்றுரைத்தே அடடாஓ எனநி மிர்ந்தே
    இடிமுழக்கம் போற்சிரித்துப் பின்னும் சொல்வான்:
    'குன்றத்தைக் குள்ளநரி கடித்துப் பற்கள்
    கொட்டுண்ட திவ்விடம்போ லும்சுப் பம்மா!
    நன்றான தமிழச்சி! என்கண் ணாட்டி!
    நற்றமிழர் மானத்தின் சுடர்வி ளக்கே!
    அன்றந்தச் சுதரிசன்சிங்க் உன்னைத் தொட்டே
    அழிவைஅழைத் திட்டஇடம் இதுதான் போலும்!

    தேசிங்கன் உனைப்பழித்தான். ஒருவ னைநீ
    சேர்த்துக்கொண் டாய்என்றான். அவனைக் கொண்டே
    தூசிநிகர் சுதரிசனைக் கொன்றாய் என்றான்.
    துடுக்கான அவன்வாயைக் கிழித்தே னில்லை!
    ஆசைமயி லே!நீயும் அங்கே இல்லை.
    அன்புன்மேல் இருந்ததனால் அவன்பி ழைத்தான்.
    நீசாவாய் நான்செத்தால் எனநி னைத்தேன்.
    நிலைகெட்டுப் போனேண்டி; மன்னி' என்றான்.

    'ஒருவனையும் நத்தவில்லை; சிங்கன் மார்பில்
    ஊன்றியது தமிழச்சி கத்தி என்று
    உருவழிந்த சுதரிசன்சிங்க் அறிவ தன்றி
    ஊராளும் அரசறிய உலகம் காண
    துரையே!நீ ருங்காண அவனின் மார்பில்
    சுடர்விளக்குத் தண்டுபோல் நாட்டி வைத்தேன்!
    திருடரென வழிமறித்த அந்நாள் அந்தத்
    திருவண்ணா மலைத்தமிழர் தந்த கத்தி!'

    என்றுரைத்தாள்; திம்மனது கேட்டி ருந்தான்.
    இதற்குள்ளே செஞ்சிமலை கிளம்பிற் றங்கே!
    ஒன்றல்ல பத்தல்ல நூறு பேர்கள்
    உயர்குதிரை மேலேறிச் சேரி நோக்கிக்
    குன்றத்தின் வீழருவி போல்இ றங்கும்
    கோலத்தைக் கண்டிருந்த ஊரின் மக்கள்
    இன்றிங்குப் புதுமைஎன்ன என்று ரைத்தார்;
    'ஏ' என்றார் 'ஆ' என்றார் கடலார்ப் பைப்போல்

    தமைநோக்கி வருகின்றார் என்ற சேதி
    தனையறிந்தாள் சுப்பம்மா; பதற வில்லை.
    அமைவான குரலாலே கூறு கின்றாள்;
    'அத்தான்என் விண்ணப்பம் கேட்க வேண்டும்.
    நமைஅவர்கள் பிடிப்பாரேல் தேசிங் கின்பால்
    நமைஅழைத்துப் போவார்கள்; வடக்கர் கைகள்
    நமைக்கொல்லும்; சரியில்லை.என்னைத் தங்கள்
    நற்றமிழக் கையாலே கொன்று போட்டு

    திருவண்ணா மலைநோக்கி நீவிர் செல்க!
    செய்வீர்கள் இதை'என்று சொல்லக் கேட்ட
    பெருமறவன் கூறுகின்றான் 'பெண்ணே என்னைப்
    பிழைசெய்யச் சொல்லுகின்றாய்; தேசிங் குக்குத்
    தருவதொரு பாடமுண்டு; தீப்போல் வானின்
    தலைகிடைத்தால் மிகநன்மை தமிழ்நாட் டுக்கு!
    பெரிதான ஆலமரம் அதோபார்' என்றான்.
    பெட்டையும்ஆண் கிளியுமாய் அமர்ந்தார் ஆலில்.

    பெரியவரே கருத்துண்டோ எங்க ளோடு
    பெருவாழ்வில் ஈடுபட? கருத்தி ருந்தால்
    உருவிக்காட் டாதிருப்பீர் கத்தி தன்னை!
    உள்மறைத்து வைத்திருப்பீர்; எதிரேசென்று
    வருவோர்கள் வரவுபார்த் திருப்பீர்; வந்தால்
    வந்துசொல்ல வேண்டுகின்றேன்' என்றான் திம்மன்.
    சரிஎன்று செங்கானும் உளவு பார்க்கத்
    தனியாக உலவினான் புலியைப் போலே!

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.