LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 626 - அரசியல்

Next Kural >

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அற்றேம் என்று அல்லற்படுபவோ - வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ; பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர் - செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்? (பெற்றவழி இவறாமை நோக்கி அற்றவழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று, இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார், அதனைப் பெற்றோமென்று போற்றி வைத்தலை நன்றென்று தெளியாதவர். இது பொருட்கேட்டினால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று
தேவநேயப் பாவாணர் உரை:
பெற்றேம் என்று ஒம்புதல் தேற்றாதவர் - செல்வக் காலத்தில் யாம் இது பெற்றேமென்று மகிழ்ந்து கையழுத்தங் கொண்டு அதைக் காத்துக் கொள்ளுதலை அறியாதார்; அற்றேம் என்று அல்லல் படுபவோ - வறுமைக் காலத்தில் யாம் செல்வத்தை யிழந்தேமென்று துயரப்படுவரோ ? படார். "அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்" ( நாலடி. 2) இவ்வுலகத்தில், இன்பமுந் துன்பமும் ஒப்பக் கொள்பவர் செல்வக் காலத்தில் மகிழ்ந்து அதை இறுகப் பற்றாமையால் , வறுமைக்காலத்தில் வருந்துவதும் செல்வமின்மையை உணர்வதும் இல்லை யென்றார். 'தேற்றாதவர்' தன்வினைப்பொருளில் வந்த பிறவினைச்சொல். தேற்றுதல் தெளிந்தறிதல்.
கலைஞர் உரை:
இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?
சாலமன் பாப்பையா உரை:
பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?.
Translation
Who boasted not of wealth, nor gave it all their heart, Will not bemoan the loss, when prosperous days depart.
Explanation
Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth.
Transliteration
Atremendru Allar Patupavo Petremendru Ompudhal Thetraa Thavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >