அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும் - அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமும் இல்லை, அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும் - ஒருவற்குப் பிற காரணங்களெல்லாம் இன்றி அஃதொன்றும் உண்டாயின், அதனானே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும். (உடம்பு முகந்துநின்ற துன்பம் முன்னே செய்து கொண்டதாகலின், ஈண்டுத் 'துன்பம்' என்றது இதுபொழுது அவாவால் செய்துகொள்வனவற்றை. 'தவாஅது மேன்மேல் வரும்' என்றதனான், மூவகைத் துன்பங்களும் என்பது பெற்றாம். இதனான் அவாவே துன்பத்திற்குக் காரணம் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லையாகும். அஃது உண்டாயின் துன்பமானது கெடாது மேன்மேல் வரும்.
தேவநேயப் பாவாணர் உரை:
அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும் -அவா இல்லாதார்க்கு அதனால் வருந்துன்பமுமில்லை; அஃது உண்டேல் தவா அது மேல்மேல் வரும் - அது இருப்பின் ( அது உள்ளவர்க்கு ) அதனால் எல்லாத்துன்பங்களும் விடாது வந்துகொண்டேயிருக்கும்.
அவாவுள்ளவர்க்கு வருவன தன்னாலும் பிறவுயிர்களாலும் தெய்வத்தாலும் வரும் மூவகைத்துன்பங்களுமாம். 'தவாஅது' இசை நிறையளபெடை.
கலைஞர் உரை:
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால்,
அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.
Translation
Affliction is not known where no desires abide;
Where these are, endless rises sorrow's tide.
Explanation
There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.