|
||||||||
அமெரிக்காவில் தமிழிசை முழங்கிய தமிழ்த்தளிர்கள் |
||||||||
அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்தில் உள்ள டல்லாசு (Dallas)நகரில் இயங்கிவரும் அவ்வைத் தமிழ் மையம் தமிழ் இசை விழாவினைக் கடந்த சனிக்கிழமை, (ஏப்ரல் 12 ஆம் நாள்) பிற்பகல் 2மணி முதல் மாலை 6 மணி வரை லிபர்டி உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடத்தியது. அவ்வைத் தமிழ் மையம் என்பது முற்றிலும் தன்னார்வலர்களால் (volunteers) உருவாக்கப்பட்ட, இலாப நோக்கமற்ற, தமிழ்க் கல்விக்கான தொண்டு நிறுவனமாகும். (non-profit organization).அவ்வைத் தமிழ் மையமானது தமிழ் மொழி கற்கும் குழந்தைகளுக்கு இரண்டாம் மொழிக் கற்றலுக்கான மதிப்பீட்டுப் புள்ளிகளைப் பெறுதல் (accreditation) என்ற தொலை நோக்குத் திட்டத்துடனும், அமெரிக்க சூழ்நிலைக்கேற்ற எளிமையான முறையில் பொதுப் பாடத்திட்டத்துடன் ( common structure syllabus) கூடிய தமிழ்க் கல்வியை அளித்தல் என்ற உடனடித் திட்டத்துடனும் டல்லாசு நகரில் நடத்தப்படுகின்றது. இந்தமையம் தமிழ்க் கல்விப்பணியை மட்டும் செய்வதுடன் அமையாமல்தமிழிசைப் பணியையும் செய்வதை அண்மையில் அமெரிக்காவில்டல்லாசு நகரில் நடத்திய தமிழிசை விழா நமக்கு எடுத்துரைக்கின்றது. போட்டிகள் ஏதும் இல்லாமல், குழந்தைகளின் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு மேடையாக இவ்விழா நடத்தப்பட்டது. 5 வயது முதல் 17 வயதுவரை உள்ள குழந்தைகள், இளையோர்கள் கிட்டத்தட்ட120 பேர் கலந்து கொண்டு குழுவாகவும், தனியாகவும் மொத்தம் 47தமிழிசைப் பாடல்களைப் பாடினர். பங்கேற்ற குழந்தைகள்,பெற்றோர்கள், இசை ஆசிரியர்கள், தமிழ் இசை, பாடல் ஆர்வலர்கள்,நண்பர்கள் என சற்றொப்ப 400 பேர்களுடன் அரங்கம் நிரம்பியது. பகல் 2 மணி அளவில் அவ்வைத் தமிழ் மையத்தின் மாணவ,மாணவிகள், ஆசிரியர்களுடன் சேர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாட நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. அவ்வைத் தமிழ் மையத்தின் தலைவர் விவேக் வாசுதேவன் அனைவரையும் வரவேற்றார். தமிழ்க்கல்வியோடு தமிழின் தொன்மையான கலைகளையும்குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்றும், அதற்காகவே இவ்விழா நடத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். வரவேற்புரைக்குப் பிறகு, பாவேந்தரின் ‘தமிழுக்கு அமுதென்றுபேர்’ என்ற பாடலுடன் தமிழிசைப் பாடல்கள் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழிசை விழாவிற்கு மிகப்பொருத்தமான முதல் பாடலாக இது அமைந்ததால், அரங்கத்தில் அனைவரும் ஆர்வம் கொண்டு,அடுத்தடுத்த பாடல்களைக் கேட்பதற்குத் தயாரானார்கள். தொடர்ந்து, டல்லாசு நகரில் உள்ள பல்வேறு இசைப்பள்ளிகளிலிருந்தும், இசைக்குழுக்களிலிருந்தும், தனியாகவும் பதிவு செய்திருந்து வந்திருந்த குழந்தைகள் கலந்து கொண்டு 4 மணி நேரம் இடைவிடாத இசை மழையைப் பொழிந்தனர். பல்வேறுஇராகங்களில் அமைந்த பக்திப் பாடல்கள், சங்க இலக்கியப்பாடல்கள்,இசை அறிஞர்களின் பாடல்கள், பாரதியார், பாரதிதாசன், வேதாத்ரி மகரிசி பாடல்கள் எனப் பல பிரிவுகளிலிருந்தும் பாடல்களைப் பாடிய விதம் கேட்போர் மனதைக் கவர்ந்த வண்ணம் இருந்தது. தேவாரம்,திருவாசகப் பாடல்களோடு கோசுபல் தேவாலய இசைக்குழுவைச் சேர்ந்த சிறுவன் பாடிய கிறித்தவக் கீர்த்தனைப் பாடல் இசைக்கும்,மொழிக்கும் எவ்வித தடைகளும் இருக்க முடியாது எனஎடுத்துக்காட்டியது. ”தமிழே இனிமை. மழலைத் தமிழ் அதனினும் இனிமை. பாடல்இனிமையானது. குழந்தைகள் பாடும் தமிழ்ப்பாட்டு அதனினும்இனிமையானது” என அரங்கில் பாடிய குழந்தைகள் அனைவரும்உணர்த்தினர். கலந்து கொண்ட இசைப்பள்ளிகள் / குழுக்கள்: ப்ரணவம் இசைப்பள்ளி திவ்யத்வானி இசைப்பள்ளி, வீணா இசைப்பள்ளி நாகலட்சுமி இசைப்பள்ளி வட அமெரிக்கத் திருமுறைக் கழகம் கோசுபல் தேவாலயம் தமிழிசை விழாவில் பாடப்பட்ட பாடல்கள் : தமிழுக்கு அமுதென்று பேர் - பாரதிதாசன் கிருஷ்ணா, கிருஷ்ணா ராம நாமம் சொல்வதே ஜெய் ஜெய் விட்டால ஹரி மதன மோகன சுந்தரா ஒளி படைத்த கண்ணினாய் ஆயர்பாடி மாளிமையில் விஷமக்கார கண்ணா பச்சை மயில் வாகனனே வேலவா காக்கைச் சிறகினிலே மூலாதார மூர்த்தி தீராத விளையாட்டுப் பிள்ளை நடனம் ஆடினார் நீயே துணை மீனலோச்சினி வந்ததுவும் போனதுவும் மாடு மேய்க்கும் கண்ணே நீ விளையாட இது நேரமா தமிழே வெள்ளை நிறத்திலொரு பூனை தொட்டு தொட்டு பேச வரான் - பெரியசாமி தூரன் பிச்சைப் பாத்திரம் வேலவா, வேலவா வேல்முருகா எல்லாம் வல்ல தெய்வம் - வேதாத்ரி மகரிசி சரஸ்வதி தயைநிதி சபாபதிக்கு யமுனை ஆற்றிலே அச்சம் அச்சம் இல்லை என்ன தவம் செய்தனை கைத்தல நிறைகனி தொள்ளாயிரம் நமச்சிவாய குனித்த புருவமும் இடரினும் தளரினும் முத்தைத்தரு மந்திரமாவது மாதர் பிறை நாதவிந்து சர்வ லோகாதிப நமஸ்காரம் சர்வ ஸ்ருஷ்திக்கும் எஜமான் நீரே தேவி நீயே துணை உலகமெலாம் பருவமழை தமிழைசைப் பாடல்களின் வரிசையில் இறுதிப்பாடலாக,வேதாத்ரி மகரிசி அவர்களின் “உலகமெலாம் பருவ மழை பெய்யட்டும்” என்கிற உலக நல வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. விழாவின் நிறைவு நிகழ்வாக, தமிழ் இசை விழாவில் பங்கேற்றுப் பாடல்களைப் பாடிய அனைத்துக் குழந்தைகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்ட பரிசுக் கோப்பைகள்வழங்கப்பட்டன. பரிசுக் கோப்பைகளை டல்லாசு தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளர் திரு. இளங்கோவன் சிங்காரவேலு, டல்லாசுதமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருமதி. கலை நாயகம்,பிளானோ தமிழ்ப்பள்ளி நிறுவுநர் திரு. வேலுராமன், அவ்வைத் தமிழ் மையத்தின் மூத்த தமிழ் ஆசிரியர் திருமதி. சாந்தா இராகவேந்திரன்ஆகியோர் வழங்கினர். பரிசு வாங்கிய குழந்தைகளின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியும்,ஆரவாரமும் பெற்றோர்களையும், இசை ஆசிரியர்களையும்,விழாவிற்காக உழைத்த அனைத்துத் தன்னார்வலர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இறுதியாக, அமைப்பின் செயலாளர் திரு. மோகன் தண்டபானிநன்றியுரை ஆற்றினார். விழாவின் அனைத்து நிகழ்வுகளையும் அவ்வைத் தமிழ் மையத்தின் மழலை நிலை ஆசிரியை திருமதி. அனிதா சங்கர் மற்றும் தன்னார்வலர் திருமதி. உமா விவேக் ஆகியோர் தொகுத்து நெறியாள்கை செய்து வழங்கினர். அவ்வைத் தமிழ் மையத்தின் துணைத்தலைவர் சௌந்தர் செயபால் இவ்விழா பற்றிக் கூறுகையில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு நிகழ்வான தமிழ் விழாவில் கடந்த 5ஆண்டுகளாக நடத்துப்பட்டு வரும் தமிழிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளின் ஆர்வமும், அவர்கள் தேர்ந்தெடுத்துப் பாடிய தமிழைசைப் பாடல்களும் இது போன்ற ஒரு தமிழிசை நிகழ்ச்சியை டல்லாசு நகரில் நடத்தத் தூண்டுகோலாக இருந்தது என்றுதெரிவித்தார். இது போன்று விழாக்கள் ஒவ்வொரு வருடமும் டல்லாசு நகரில் நடத்தப்பட வேண்டும் எனத் தனது விருப்பத்தையும் தெரிவித்தார். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகம் ஆகியவற்றின் முன்னாள் தலைவர் திரு. அரசு செல்லையா அவர்கள், “மொழியின் ஒரு கூறாகவேஇசையைக்கொண்டது நம் தமிழ். “அவ்வைத் தமிழ் மையம்” தரமான தமிழ்க்கல்வியினை வழங்கிவருவது தமிழ் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தருவது. மேலும், “தமிழிசை விழா” நடத்தி இசைத்தமிழையும் வளர்ப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. விழா சிறப்பாக நடக்கப்பாடுபடும் அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்” எனத் தாம் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தார்.. |
||||||||
Avvai Tamil Center Tamil Music Festival 2014 | ||||||||
by Swathi on 23 Apr 2014 0 Comments | ||||||||
Tags: அவ்வை தமிழ் மையம் தமிழ் இசை விழா Avvai Tamil Center Tamil Music Festival Tamil Isai Vizha | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|