நான் ஈ என்ற படத்தின் மூலம் தென் இந்திய ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி.
பிரமாண்ட இயக்குனரான இவர் தற்போது பாகுபலி என்ற படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கி வருகிறார்.
இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் , சத்யராஜ், நாசர், சுதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு எம்.எம். கீரவாணி இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு கே.கே.செந்தில் குமார். இந்த படத்திற்கு ரசிர்கள் மட்டுமின்றி இந்திய திரையுலகமே காத்திருப்பில் உள்ளனர்.
கிராபிக்ஸ் காட்சிகள், கண்ணை கவரும் பாடல்காட்சிகள், அதிரடியான போர் காட்சிகள் என படம் முழுவதும் கண்களுக்கு விருந்தாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் சுமார் 100 கோடிக்கும் மேல் என்றும் சொல்லப்படுகிறது.
ஆர்கா மீடியா வொர்க்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை இந்தியில் கரண் ஜோஹரின் தர்மா புரடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. அதே போல் தமிழில் ஸ்டூடியோ க்ரீன், உவி கிரியேஷன்ஸ், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தை 500 திரையரங்குகளில் வெளியிடுகிறது. இந்த படத்தின் அனைத்து மொழி வெர்ஷன்களுக்கும் தணிக்கை தரப்பு U/A கொடுத்துள்ளது. காரணம் அதிக போர் , யுத்தக் காட்சிகள் இருப்பதே காரணம்.
கேரளாவின் அதிரபில்லி அருவி, ஓர்வாக்கல் பாறை பூங்கா , மகாபாலேஷ்வர் நகரம் என இந்தியாவின் முக்கிய இடங்கள் பலவற்றில் படப்பிடிப்புகள் நடந்துள்ளன.
இதுபோன்ற வரலாற்று கதைகள் புத்தகங்களில் படிப்பதைக் காட்டிலும் இப்படி படமாக பார்க்கையில் இன்றைய தலைமுறையினருக்கு அவர்களுக்கு பிடித்த விதத்தில் சென்று நமது இந்திய வரலாறுகள் சேரும் என்பதே உண்மை. இப்படி பட்ட படங்கள் நம் இந்தியாவில் 5 வருடங்களுக்கு ஒருமுறை வருவதே கொஞ்சம் அரிதுதான்.
இதன் காரணமோ என்னமோ படத்தின் டிக்கெட் புக்கிங்குகள் ஆரம்பித்தவுடனேயே தமிழின் பெரிய நடிகர்கள் படத்திற்கு நிகராக அனைத்து டிக்கெட்டுகளும் திங்கள் வரை புக்காகி விட்டன. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களில் மட்டும் இயக்குநர் உள்ளிட்ட 25 பேர் தேசிய விருது பெற்றவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.
படத்தின் நீளம் 2 மணி நேரம் 38 நிமிடங்கள் 41 நொடிகள். எதுவாக இருப்பினும் ‘ஈ’ யை வைத்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ராஜமௌலியின் மேஜிக் இந்த படத்தில் எப்படி இருக்கும் என்பதைக் காணவே சினிமாவை எப்போதாவது பார்க்கும் ரசிகர்கள் கூட இந்த படத்திற்காக காத்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது....
|